Friday 20 September 2019

சாதாரண சிகரெட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாயைக் கூட்ட இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளதா?




மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இ- சிகரெட்டை இந்தியாவில் தடை செய்வதாக அவசரச் சட்டம் ஒன்றை நிறுவியுள்ளார். அதன்படி, இ- சிகரெட் உற்பத்தி செய்தல், விநியோகம் செய்தல், பயன்படுத்துதல் மற்றும் வைத்திருத்தல் முற்றிலுமாக இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. இங்கு, சாதாரண சிகரெட்டுகளையும் தடை செய்யாமல் இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது.

இ- சிகரெட்:
இ- சிகரெட் என்பது எலக்ட்ரானிக் நிக்கோட்டின் டெலிவரி சிஸ்டம்ஸ் (Electronic Nicotine Delivery Systems) என அழைக்கப்படுகிறது. பேனாவைப் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த இ- சிகரெட்டில் புகையிலை திரவம் (Nicotine), கரையும் தன்மை கொண்ட வாசனை திரவியங்கள் மற்றும் பேட்டரி முதலியன பொருட்கள் அடங்கியிருக்கும்.

இந்த சிகரெட்டினை வாயில் வைத்து உறிஞ்சும்போது இ- சிகரெட்டில் உள்ள சென்சார் செல்படத்தொடங்கி அதிலுள்ள புகையிலை திரவத்தை ஆவியாக்கி வெளியேற்றுகிறது. வெளியேறும் ஆவியானது மனிதனின் அட்ரினலின் ஹோர்மோனைத் தூண்டி, மூளையில் உள்ள டோபமைன் என்னும் இரசாயனத்தை சுரக்கிறது. இந்த இரசாயனம்தான் மனிதனுக்கு இன்ப உணர்வைத் தூண்டுவதால், புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்தலை தொடர்ந்து செய்கின்றனர்.

இ- சிகரெட் விற்பனை:
இ- சிகரெட் விற்பனை நாளுக்கு நாள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், அதன் கண்கவரும் வடிவங்களிலான அமைப்பு, ரசனைக்கேற்ற வாசனை, நோய்களை ஏற்படுத்தாது மற்றும் சாதாரண சிகரெட்டுகளுக்கு மாற்று இந்த இ-சிகரெட்டுகள் எனக்கூறப்படும் பொய் செய்திகள். அத்துடன், இந்த சிகரெட்டுகளில் வாசம் வராது ஆனால் அதிக நிக்கோட்டின் இருப்பதால் அருகிலிருப்பவர்களை வெகுவாக பாதிக்கிறது

சாக்லேட், ஸ்ட்ராபெரி, புதினா போன்ற150 க்கும் மேற்பட்ட சுவைகளில் 400 பிராண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த இ - சிகரெட்டின் ஆரம்ப விலை ரூ. 300 ஆகவும் அதிகபட்சமாக ரூ.4000 வரையிலும் விற்கப்பட்டு வந்தது. இ - சிகரெட்டின் தடையால், மத்திய பட்ஜெட்டில் ரூ.2028 கோடி ரூபாய்வரை தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் பொதுநலம் கருதி தடைசெய்வதாக என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தண்டனை விபரம்:
இ- சிகரெட் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறுவோருக்கு கீழ்கண்டவாறு தண்டனைகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டத்தின் படி, இ - சிகரெட் தயாரிப்பது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது, விற்பனைசெய்வது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்வதுஆகியவை குற்றச்செயலாக கருதப்படும்

1) இந்தத் தடையை முதன் முதலில் மீறுவோருக்கு, ஒராண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம்
2) இரண்டாவது முறை அல்லது தொடர்ந்து மீறுவோருக்கு மூன்றாண்டு சிறை அல்லது ரூ.5 இலட்சம் அபராதம்
3) இ- சிகரெட்டை சேமித்து வைத்திருபோருக்கு ஆறு மாதம் சிறை அல்லது ரூ. 50 ஆயிரம் அபராதம்.
4) இ- சிகரெட் வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தால், யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின்பேரில் விசாரிக்கலாம். இதற்குமுன், சந்தேகத்தின்பேரில் விசாரிக்க தடை இருந்தது.

சாதாரண சிகரெட்டுகளுக்கு தண்டனை இல்லை:
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் இந்த இ-சிகரெட்டுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளதாகவும்,. இந்த சிகரெட்டுகள் உடலுக்கு அதிக கேடு விளைவிக்கிறது. அதனால் தடை விதிப்பதாக மத்திய அமைச்சர் கூறினார். இ-சிகரெட்டுகளுக்கு தடை விதித்திருக்கிற அரசு ஏன் சாதாரண சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கவில்லை? என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது. 

ஒரு நிறுவனத்தால், மக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படுமாயின், அதனை நன்கு விசாரித்து உண்மையெனில் அந்தத் நிறுவனத்தை தடை செய்யவேண்டும். இது அரசின் தலையாய கடமையாகும். ஆனால், அரசே இதுபோன்ற திட்டங்களை ஆதரிக்கும் வண்ணம் சில நேரங்களில் செயல்படுகிறது. டாஸ்மாக்கினால் எத்தனையோ தாய்மார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. மக்களும் போராட்டம் நடத்துகிறார்கள். அத்துடன், 70 சதவீத சாலை விபத்துக்கள் மது அருந்தியதால் நடந்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் மத்திய அல்லது மாநில அரசுகள் இதுவரை மதுபானங்கள் விற்பனையை தடை செய்வதுபற்றி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இந்தநிலையில், "சாதாரன சிகரெட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாயைக் கூட்டுவதற்காக இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது" என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உண்மையில், மக்கள் மீது அக்கறைகொண்ட எந்தவொரு அரசும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அனுமதிக்காது. அதன் ஒரு பகுதியாக இன்று இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து போதைப் பொருட்களும் தடைசெய்யப்படவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது. 



நன்றி,
ஊமை இளைஞன் 

No comments:

Post a Comment