Tuesday 3 September 2019

சகாயம் அரசியலுக்கு வரலாமா? வந்தால் என்ன சிக்கல்?


சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நம்மை கடந்து செல்லும் கூற்றுகளில் ஒன்று "திரு. சகாயம் ஐஏஎஸ் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்." என்ற கோரிக்கை. இதற்கு பல இளைஞர்கள் தத்தம் கருத்துகளை பதிவிட்டு அவருக்கு ஆதரவு அளிப்பதையும் காண்கிறோம். இன்றுவரை திரு. சகாயம் அவர்கள் அதற்கு எந்தவொரு பதிலையும் கூறவில்லை. ஒருவேளை திரு. சகாயம் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரது அரசியல் செல்வாக்கு எப்படி இருக்கும்? வாருங்கள் களைவோம்.

​​சகாயம் ஐஏஎஸ்:


புதுக்கோட்டை அருகிலுள்ள பெருஞ்சுனை என்னும் கிராமத்தில் பிறந்த திரு. சகாயம் அவர்கள், தன் பள்ளிப்படிப்பை பெருஞ்சுனையிலும், பட்டப்படிப்பை புதுக்கோட்டையிலும், முதுநிலை மற்றும் சட்டப்படிப்பை சென்னையிலும் பயின்று இந்திய ஆட்சிப் பணியில் தேர்வானார். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தலின்போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளாலும் மற்றும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டார். தன்னுடைய சொத்துக் கணக்குகளை வெளியிட்டு பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை வியக்க வைத்தார்.
​​
​​சகாயம் செய்த சகாயம்:


"லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்னும் கொள்கையைக் கொண்ட சகாயம் அவர்கள் ஆற்று மணல் கொள்ளையை அறவே தடுக்க மேற்கொண்ட பணியினால் பல அரசியல் நெருக்கடிக்கு ஆளானார். தன் நேர்மைக்கு பலனாக தான் பணியாற்றிய 27 ஆண்டுகளில் 26 முறை பணியிட மற்றம் செய்யப்பட்டார். தமிழகத்தில் நேர்மையான அதிகாரி என்றால் அதில் சகாயத்திற்கு முதலிடம் இருக்கும்.

நாமக்கல் ஆட்சியராக பணியாற்றிய போது, 'கிராமத்தில் தங்குவோம்', 'உழவர் உணவகம்', 'ஊன்றுகோல் திட்டம்' மற்றும் தொடுவானம் முதலிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி கண்டார். நேர்மையான பணிகள், கண்ணியமான செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலப்பணி திட்டங்கள் ஆகியவற்றை தொகுத்து "சகாயம் செய்த சகாயம்" என்ற புத்தகமும் வெளியிடபட்டுள்ளது.

அதிகாரியாக மட்டுமல்லாமல், அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவராகவும் சகாயம் திகழ்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனைகளுக்கு, " ஏரிகளை ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரி மழை நீரை சேமித்து வைத்தால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது எனவும். இந்த திட்டத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசிடம் கூறினேன் ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை" என அரசை குறைகூறினார்.

மும்மொழி கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு, "தாய்மொழி கல்வி ஒன்றே சிறந்தது. உதவிக்கு ஆங்கிலம் போதும்" எனக்கூறினார். ஆம், திரு. சகாயம் பயின்றது தாய்மொழிக்கல்வியான தமிழ்.

​​முக அரசியலும் இலவசமும்:


ஒருவர் நேர்மையான அதிகாரியாக இருப்பதாலும், சமூக வலைத்தளங்களிலும் இளைஞர்களிடையேயும் அவருக்கு அமோக ஆதரவு இருப்பதாலும் அவர் அரசியலுக்கு வரலாமென்றால் இளைஞர்கள் ஓட்டு மட்டுமே ஒருவரை முதல்வராக்குவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஆம், மறைந்த முன்னாள் முதல்வர்களாகிய திரு. மு. கருணாநிதி மற்றும் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் மேல் பல வழக்குகள் மற்றும் குற்றங்கள் இருந்ததை அனைவரும் அறிந்ததே [இதில் இளைஞர்களும் அடங்கும்]. ஆனால், தேர்தல் சமயங்களில் தன் தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் பெயர் மற்றும் முகவரிகூட தெரியாமல்​ ​இருக்கும் மக்களிடத்தில்​ அவர்களின்​ (கருணாநிதி மற்றும் ஜெயலலிதா) ​முக வசீகரமும்​, ​​​​பேச்சுக்களும் மற்றும் ​மக்களை கவரும் இலவச அறிக்கைகளும்​ தேர்தல் முடிவையே மாற்றிவிடுகிறது. ​அரசானது இலவசத் திட்டங்களின்மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நன்மைகள் செய்ய நினைத்தாலும் உண்மையில் அந்த திட்டங்கள் உரித்தானவர்களுக்கு சென்றடைவதில்லை என்பதே உண்மை. பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மக்கள் இந்த திட்டங்களை அனுபவிக்கிறார்கள். இதன்மூலம், "மக்கள் இலவசத்திற்கு அடிமையாகிவிட்டார்கள்" என்ற ஒற்றைக்கருத்தை மட்டுமே அறிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்று, ​இலவசத்திற்கு அடிமையாகி விட்ட நம் மக்கள், சகாயத்தை ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குரியாக உள்ளது.

எம்ஜியார் அவர்கள் இறந்து ​32ஆண்டுகள் முடிந்த பின்பும், எம்ஜியாருக்காக இங்கு குறைந்தபட்சம் 10 சதவீத ஓட்டுகள் உண்டு.​ ​ஆனால், ​மக்களுக்காக ​உயிருடன் போராடிக்கொண்டிருக்கும் பலருக்கு டெபாசிட் கூட இல்லாத நிலைமைதான் இன்றளவும் உள்ளது. 

​​​​அரசியலில் சமூக வலைத்தளங்களின் பங்கு:

சமூக வலைத்தளங்களிள் பெருகிவரும் மீம்ஸ்களால், ஒரு அரசின் மீது நம்பிக்கையும் (அ) மிகுந்த வெறுப்பையும் ஏற்படுத்த முடிகிறது. பல நேரங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது.​ ​சமூக வலைத்தளங்களின் தாக்கம் அரசியலில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ​,​ அதேபோல் பல நேரங்களில் வெளியாகும் தேர்தல் முடிவுகள் பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன.​ உதாரணத்திற்கு, மணிப்பூரைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஐரோம் சானு ஷர்மிளா அவர்கள். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் காரணமான, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958-ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 ​-​ஆம் தேதி ஆரம்பித்து​ ​சுமார் 15 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார். உலகின் மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டமாகும். அவருக்கு​ ​சமூக வலைத்தளங்களிலும், இளைஞர்களிடமும் நல்ல ஆதரவு அவருக்கு இருந்தது. சமூக வலைதளத்தில் அனைவரும் அவரை போற்​​றினர். தேர்தலில் நிற்க வேண்டுமென்று பதிவிட்டனர். ஆனால், உண்ணாவிரதம் முடிந்து நடைபெற்ற ஒரு தேர்தலில் ​அவருக்கு வெறும் 85 ஓட்டுகள் மட்டும்தான் கிடைத்தது, 
​​
​அரசியலில் ஊடகத்தின் பங்கு:

ஊடகங்களும் பெரும்பாலும் தங்களின் டி.ஆர்.பி-யை மனத்தில் கொண்டே செயல்படுகின்றன. ஏதாவது ஒரு நடிகர் அரசியல் கருத்துக்களை பேசிவிட்டால், அந்த நடிகர் பேசியதை வைத்தே பல கோணங்களில் விவாதங்களை நடத்துகின்றன. ​கருத்துக்கணிப்பு என்னும் பெயரில் கருத்துக்களை திணிக்கின்றனர். சமீபத்தில் திரைத்துறையில் நடைபெற்ற தேர்தலை அனைத்து மீடியாக்களும் நேரடி ஒளிபரப்பு செய்தனர் அதில் சில நடிகர்கள், "இந்தத் தேர்தலை காண்பிப்பதற்குப் பதிலாக, ஏறி, குளங்களை தூர்வாரும் இளைஞர்களை காட்டுங்கள்" என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அதையும் மக்களுக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர் நம் மீடியாக்கள். இன்றைய மீடியாக்கள் ​கருத்துக்கணிப்பு நடத்தினால், ​"சகாயத்தை விட அந்த நடிகர் அதிக வாக்குகள் பெறுவார்" என்று ஊடகங்களே சகாயம் அவர்களை பின்னுக்கு தள்ளும். மக்களும் நடிகர்களுக்குதான் வாக்களிப்பார்கள்.

தேர்தல் காலங்களில் இலவசத்திற்காகவும், ரூ. 500/1000 பணத்திற்காகவும் வாக்களித்துவிட்டு, வருடம் முழுவதும் விலைவாசி ஏறிவிட்டது என்று அன்றாட பிழைப்புக்கு கஷ்டப்படும் மக்கள் இருக்கும்வரை திரு. சகாயம் போன்ற மனிதர்கள் அரசியலுக்குள் வருவதை எண்ணிப்பார்க்கமாட்டார்கள். ​என்று மக்கள் முக அரசியலையும், இலவசத்தையும் ஒதுக்கிவிட்டு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க நினைக்கிறார்களோ அன்று மட்டுமே அரசியலுக்குள் நல்லவர்கள் வருவார்கள்.

நன்றி,

ஊமை இளைஞன்

1 comment: