Saturday 28 September 2019

நிலுவையில் 1.66 இலட்சம் பாலியல் வழக்குகள் - இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு!


சமீபத்தில் வெளிவந்த ஆய்வறிக்கையொன்று இந்திய தேசத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், இன்னும் 1.66 இலட்சத்திற்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் உள்ள 389 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 - க்கும் மேலான பாலியல் வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், இந்த வழக்குகள் அனைத்தும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழுள்ள வழக்குகள் எனவும் தெரிவித்துள்ளது.

போக்ஸோ சட்டம் (POCSO)


கடந்த 2012 ஆம் ஆண்டு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக (The Protection of Children from Sexual Offenses) உருவாக்கப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களை இங்கு காண்போம்:

> பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகள் (ஆண்/பெண்) பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானால், இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்படும்.

> இந்த சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் விதிப்படி, குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவருக்கு, குறைந்தபட்ச தண்டனையாக 7 வருட சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 5 மற்றும் 6 ஆம் விதிப்படி, குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர், குழந்தையின் பெற்றோர், பாதுகாவலர், காவல்துறையை சார்ந்தவர் அல்லது ஆசிரியராக இருப்பின், குறைந்தபட்ச தண்டனையாக 10 வருட சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 7 மற்றும் 8 ஆம் விதிப்படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை (private parts) தொடுவது அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட வற்புறுத்துவது போன்ற குற்றங்களுக்கு, குறைந்தபட்ச தண்டனையாக 3 வருட சிறையும், அதிகபட்சமாக 8 வருட சிறை தண்டனையும் அளிக்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 9 மற்றும் 10 ஆம் விதிப்படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை (private parts) தொடுவது அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட வற்புறுத்துவது போன்ற குற்றங்களை செய்தவர் பெற்றோர், பாதுகாவலர், காவல்துறையை சார்ந்தவர் அல்லது ஆசிரியராக இருப்பின், குறைந்தபட்ச தண்டனையாக 5 வருட சிறையும், அதிகபட்சமாக 7 வருட சிறை தண்டனையும் அளிக்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 11 மற்றும் 12 ஆம் விதிப்படி, குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, போன்களில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியலுக்கு அழைப்பது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 13 மற்றும் 14 ஆம் விதிப்படி, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது போன்ற குற்றங்களுக்கு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 18 ஆம் விதிப்படி, குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

> பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பவருக்கு, குற்றத்தினை செய்தவருக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை வழங்கப்படும்.

> இந்த சட்டத்தின் கீழ், ஒருவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டால், பாதிப்புக்குள்ளானவர் குற்றத்தை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்தான் தவறு நடக்கவில்லை என நிரூபிக்கவேண்டும். அத்துடன், வழக்குத் தொடரப்பட்ட சிறுவர்/சிறுமியரை விசாரிக்கும்போது, காவல்துறையினர் சீருடையில் இருக்கக்கூடாது மற்றும் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக்கூடாது.

> பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவர்/சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல்துறையும் வெளியிடக் கூடாது‌. அத்துடன், இந்த வழக்குகள் ஒரு வருடத்திற்குள் விரைந்து முடிக்கவேண்டும்.

சிறப்பு நீதிமன்றங்கள்:


இதுவரை நிலுவையில் உள்ள ஒரு இலட்சத்து அறுபத்து ஆறாயிரம் (1.66 இலட்சம்) வழக்குகளை விரைந்து முடிக்க நாடு முழுவதும் சுமார் 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் புதியதாக அமைக்கப்படுகின்றன. நீதி மன்றத்தின் எண்ணிக்கையானது, அந்தந்த மாநிலத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப்ப் பொறுத்து அமையும். இதன்மூலம், ஆண்டொன்றுக்கு ஒரு நீதிமன்றத்தில் 165 வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்:



அண்மையில், தாமஸ் ரியூட்டர்ஸ் பவுண்டேசன் (Thomas Reuters Foundation) என்னும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், 2018 ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் முறையே ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா நாடுகள் உள்ளன.

உலகிற்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த நாடு, பெண்களை தெய்வமாக கருதும் நாடு, பாயும் நதிகளுக்கு பெண்களின் பெயரைச்சூட்டி வணங்கிடும் நாடு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தில் உள்ளதென்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தலைகுனிவாகத்தான் எண்ணவேண்டும்.

கடுமையான சட்டங்கள்:


சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது, "பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கவேண்டும்" என்ற கருத்திற்கு ஆதரவுகள் மேலோங்கி நிற்கும். ஆனால், உண்மையில் தூக்கு தண்டனை ஒரு தீர்வா என ஆராய்ந்தால் நிச்சயம் தீர்வாகாது. ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற சட்டத்தினால், அனைவரும் ஹெல்மெட் அணிந்துவிட்டார்களா என்ன? ஆக, கடுமையான சட்டங்கள் பொதுவெளியில் மட்டுமே தவறுகளை குறைக்குமே தவிர ஒருபோதும் குற்றம் நடவாமல் இருக்காது. 

பாலியல் குற்றங்கள் முற்றிலும் இல்லாமல்போக என்ன செய்யவேண்டும்?

> பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் பாலியல் கல்வியை பள்ளிக்கல்வியிலிருந்தே இருபாலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

> பெண், காம இச்சை போக்கும் இயந்திரமல்ல தம்மைப் போன்றதொரு மனித உயிரே என ஆண்கள் உணர்ந்திட வேண்டும்.

> ஆண் பெண் பாகுபாடற்ற சமூகத்தை அமைத்திடல் வேண்டும். 


நன்றி,
ஊமை இளைஞன் 

Wednesday 25 September 2019

டோல்கேட்டில் கொடுக்கப்படும் இரசீதில் (Receipt) உள்ள பயன்கள்


நாம் நமது காரிலோ அல்லது வேனிலோ நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது இடையே அமைந்துள்ள சுங்கச்சாவடியில் (டோல்கேட்) கட்டணம் செலுத்தவேண்டும். இந்த சுங்க கட்டண வசூலுக்கு அனைத்து மக்களிடமும் எதிர்ப்பு உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த சுங்க கட்டணங்கள் எதற்காக வசூலிக்கிறார்கள் என்பது இங்கு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாருங்கள் அதைப்பற்றி இங்கு காண்போம்.

சுங்கச்சாவடிகள்:

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு, சுங்கசாவடிகள் அமைத்து அதன்வழியே கடந்துசெல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சாலைகளை எந்த கட்டுமான நிறுவனம் கட்டுகிறதோ அந்த கட்டுமான நிறுவனங்களுக்கே அரசு லீசுக்கு விடுகிறது. சுங்கச்சாவடிகளை லீசுக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தேவைப்பட்டால் சுங்கக் கட்டணங்களை 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியா முழுவதும் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன.

வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் மாறுபடும். இந்த கட்டணமானது, சாலையின் அமைப்பு, சாலையின் அகலம், அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள், கழிப்பிட வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தொலைபேசி முதலியவற்றை கணக்கில்கொண்டு வசூலிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடிகளின் விதிமுறைகள்: [நன்றி: தினகரன் நாளிதழ்]

1) கடந்த, 2008ல் திருத்தி அமைக்கப்பட்ட, சுங்க கட்டண சட்ட விதிகளின்படியே, கட்டணம் வசூலிக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இடையே குறைந்த பட்சம், 60 கி.மீ., இடைவெளி இருக்க வேண்டும்.

2) ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்தலாம். 2008ம் ஆண்டுக்கு முன் அமைத்த சாலைகளுக்கு, ஒரு ரூபாய்; அதன்பின் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு, ஐந்து ரூபாய் என, கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.

3) சாலையில், 75 சதவீதம் விரிவாக்கப் பணியைமுடித்தபிறகே, சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டு கட்டணம் முழுவதையும் வசூலித்த பின், கட்டணத்தை, 40 சதவீதமாக குறைக்க வேண்டும்.

4) விதிமுறையை மீறி, அதிக எடை ஏற்றிச்செல்லும் வாகனங்களிடம், 10 மடங்கு அபராதம் வசூலிக்க வேண்டும். அதிக எடை ஏற்றிச்செல்ல, எந்த வாகனத்தையும்அனுமதிக்க கூடாது.

5) வாகன ஓட்டுனர்கள், பயணிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

6) உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.

சுங்கச்சாவடி ரசீது:

சுங்கச்சாவடியில், வாகனத்திற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணமானது சாலைகளை பராமரிப்பதற்கு மட்டுமல்ல. வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்கு வழங்கப்பட்ட இரசீதைக்கொண்டு பின்வரும் உதவிகளை பெறலாம்:

1) நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ அல்லது அவசர மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்பட்டாலோ, இரசீதின் பின்பக்கம் உள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டு மருத்துவ அல்லது ஆம்புலன்ஸ் வசதியினைப் பெறலாம்.

2) நெடுஞ்சாலையில் சென்ற வாகனம் பழுதாகியோ அல்லது பஞ்சராகி நின்றாலோ, அதிலுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால், வாகனத்தை பழுதுபார்க்க விரைந்து ஆட்கள் வந்துவிடுவார்கள். அத்துடன், அது அவர்களின் கடமையாகும்.

3) நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் வாகனம் நின்றுவிட்டால், அதிலுள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டால் 5 முதல் 10 லிட்டர் வரை பெட்ரோல் அல்லது டீசலைக் கொண்டுவந்து தருவார்கள். இதற்கு நாம் தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆனால், இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிவதில்லை.அதனாலேயே, பலர் இதனை எதிர்க்கிறார்கள். அதற்காக, இதனை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. மக்கள் ஒரு திட்டத்தை எதிர்க்கும்போது அல்லது அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அதன் நன்மை மற்றும் தீமைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

அனுமதி இலவசம்:


சுங்கச்சாவடியில், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்தவர்கள் செல்லும் வாகனங்கள் (குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத்தலைவர், முதலமைச்சர், ஆளுனர், காவல்துறை, நீதிபதிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் அடங்குவர்) இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.

சில நேரங்களில் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தங்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டி சுங்கச்சாவடிகளில் உள்ள அலுவலர்களிடம் தகராறு செய்வதை ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் கண்டிருப்போம். ஆனால், அவர்களின் செயலுக்கு எந்தவொரு அரசியல் தலைவரிடமிருந்தும் கண்டிப்போ அல்லது அறிவிப்போ வந்ததில்லை. கடைசிவரைக்கும் போராடி கட்டணத்தை சரியாக செலுத்துவது சாமானியர்கள் மட்டுமே.

நன்றி,
ஊமை இளைஞன்

Saturday 21 September 2019

மனிதனின் சிறுநீரிலிருந்து பயிர்களுக்கு உரம்


மனிதனின் உணவுத்தேவை அதிகரித்து வரும் நிலையில் அதன் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான விவசாயக் குடிமக்கள் விவசாயத்தை தவிர்த்து மாற்று வேலைகளுக்கு சென்றுவிட்டது ஒரு காரணமாக இருந்தாலும், அவர்கள் விவசாயத்தை தவிர்த்ததற்கு முக்கிய காரணம் சரியான விளைச்சலின்மை. பண்டைய காலங்களில் மண்ணின் உரமாக இருந்தது செடி கொடிகள், இலைகள், தழைகள் மற்றும் கால்நடைக் கழிவுகள் மட்டுமே. இன்றோ, விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் கொடுக்கப்படும் யூரியா போன்ற பூச்சிக்கொல்லி உரங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தி மண்ணானது மலடாகும் தன்மைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையே, இயற்கை ஆசான் நம்மாழ்வார் அவர்கள், "மண்ணின் வளம் மனித மற்றும் மாட்டுக் கழிவுகளால் மேம்படும்" என்றார். அதற்கு ஆதரவாக, சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்திற்குப் பதிலாக, மனிதனின் சிறுநீரிலிருந்தே இயற்கை உரத்தை தயாரித்து பயிர்களுக்கு அளிக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

சிறுநீரில் உரம்:

சமீபத்தில், ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு (இ.ஓ.ஓ.எஸ்.,) குளியலறை கலன்களை தயாரிக்கும் லாபென் மற்றும் சுவிட்சர்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி.) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து மனிதக் கழிவுகளிலிருந்து இயற்கை உரத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உரம் தயாரிப்பதற்கு தேவைப்படும் நைட்ரஜன் வாயுவை பிரித்தெடுக்க அதிக ஆற்றல் தேவைப்படும். இதற்கு மாற்றாக வீணாக வெளியேறும் சிறுநீரிலிருந்து நைட்ரஜனை பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.  மனித சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதிலிருந்து பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை பிரித்தெடுத்து அதிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இ.ஓ.ஓ.எஸ் மற்றும் லாபென் அமைப்புகள் இணைந்து, கழிப்பிடங்களில் உள்ள மனிதக் கழிவுகளிலிருந்து சிறுநீரை மட்டும் பிரித்தெடுக்க "கலன்" ஒன்றை தயாரித்தனர். இந்த கலனில் ஒருவர் சிறுநீர் கழித்ததும், அதனை சுத்திகரிக்க 1.5 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

2) இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி. அமைப்பு கார்பன் வடிகட்டிகளை பயன்படுத்தி, கலனிலிருந்து பிரித்தெடுத்த சிறுநீரில் உள்ள கிருமிகளை நீக்கினர். கிருமிகள் நீக்கிய சிறுநீரிலிருந்து பயிர்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் மீண்டும் வடிகட்டப்பட்டு திரவ வடிவிலான உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் உரத்திற்கு 'ஆரின்' என பெயரிட்டனர்.

இந்த முறையைப் பயன்படுத்தி, 1000 லிட்டர் சிறுநீரைக் கொண்டு சுமார் 100 லிட்டர் வரையிலான ஆரின் உரத்தை உற்பத்தி செய்யலாம்.

நிதின் கட்கரி:
"சிறுநீரில் அதிகளவு நைட்ரஜன் உள்ளதால் அதனை வீணாக்காமல், நாட்டின் ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர் வங்கிகள் அமைத்து அதன்மூலம் விவசாயப் பயிர்களுக்குத் தேவையான உரங்களை அளிக்கலாம். இதனால், நாட்டின் யூரியா இறக்குமதி பாதியாகக் குறையும்" என்று முன்னாள் பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், "தனக்கு சொந்தமான நிலத்தில், சிறுநீரில் தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து அதனை பயிர்களுக்கு அளிக்கும்போது, அது மற்ற பயிர்களைக் காட்டிலும் நன்றாக வளர்ந்து மகசூல் தந்ததாக" தெரிவித்தார்.

சிறுநீர் வங்கிகள்:
இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 50 இலட்சம் மெட்ரிக் டன் வரை உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. அத்துடன் உள்நாட்டிலும் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குமாற்றாக, பேருந்து, தொடர்வண்டி மற்றும் விமான   நிலையங்களில் சிறுநீர் வங்கிகளை தொடங்கி அதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு உரமாக வழங்கலாம். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் பயிர்களுக்கும் இயற்கையான உரங்கள் கிடைக்கும்.

நன்றி,
ஊமை இளைஞன் 

Friday 20 September 2019

சாதாரண சிகரெட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாயைக் கூட்ட இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளதா?




மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இ- சிகரெட்டை இந்தியாவில் தடை செய்வதாக அவசரச் சட்டம் ஒன்றை நிறுவியுள்ளார். அதன்படி, இ- சிகரெட் உற்பத்தி செய்தல், விநியோகம் செய்தல், பயன்படுத்துதல் மற்றும் வைத்திருத்தல் முற்றிலுமாக இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. இங்கு, சாதாரண சிகரெட்டுகளையும் தடை செய்யாமல் இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது.

இ- சிகரெட்:
இ- சிகரெட் என்பது எலக்ட்ரானிக் நிக்கோட்டின் டெலிவரி சிஸ்டம்ஸ் (Electronic Nicotine Delivery Systems) என அழைக்கப்படுகிறது. பேனாவைப் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த இ- சிகரெட்டில் புகையிலை திரவம் (Nicotine), கரையும் தன்மை கொண்ட வாசனை திரவியங்கள் மற்றும் பேட்டரி முதலியன பொருட்கள் அடங்கியிருக்கும்.

இந்த சிகரெட்டினை வாயில் வைத்து உறிஞ்சும்போது இ- சிகரெட்டில் உள்ள சென்சார் செல்படத்தொடங்கி அதிலுள்ள புகையிலை திரவத்தை ஆவியாக்கி வெளியேற்றுகிறது. வெளியேறும் ஆவியானது மனிதனின் அட்ரினலின் ஹோர்மோனைத் தூண்டி, மூளையில் உள்ள டோபமைன் என்னும் இரசாயனத்தை சுரக்கிறது. இந்த இரசாயனம்தான் மனிதனுக்கு இன்ப உணர்வைத் தூண்டுவதால், புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்தலை தொடர்ந்து செய்கின்றனர்.

இ- சிகரெட் விற்பனை:
இ- சிகரெட் விற்பனை நாளுக்கு நாள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், அதன் கண்கவரும் வடிவங்களிலான அமைப்பு, ரசனைக்கேற்ற வாசனை, நோய்களை ஏற்படுத்தாது மற்றும் சாதாரண சிகரெட்டுகளுக்கு மாற்று இந்த இ-சிகரெட்டுகள் எனக்கூறப்படும் பொய் செய்திகள். அத்துடன், இந்த சிகரெட்டுகளில் வாசம் வராது ஆனால் அதிக நிக்கோட்டின் இருப்பதால் அருகிலிருப்பவர்களை வெகுவாக பாதிக்கிறது

சாக்லேட், ஸ்ட்ராபெரி, புதினா போன்ற150 க்கும் மேற்பட்ட சுவைகளில் 400 பிராண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த இ - சிகரெட்டின் ஆரம்ப விலை ரூ. 300 ஆகவும் அதிகபட்சமாக ரூ.4000 வரையிலும் விற்கப்பட்டு வந்தது. இ - சிகரெட்டின் தடையால், மத்திய பட்ஜெட்டில் ரூ.2028 கோடி ரூபாய்வரை தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் பொதுநலம் கருதி தடைசெய்வதாக என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தண்டனை விபரம்:
இ- சிகரெட் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறுவோருக்கு கீழ்கண்டவாறு தண்டனைகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டத்தின் படி, இ - சிகரெட் தயாரிப்பது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது, விற்பனைசெய்வது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்வதுஆகியவை குற்றச்செயலாக கருதப்படும்

1) இந்தத் தடையை முதன் முதலில் மீறுவோருக்கு, ஒராண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம்
2) இரண்டாவது முறை அல்லது தொடர்ந்து மீறுவோருக்கு மூன்றாண்டு சிறை அல்லது ரூ.5 இலட்சம் அபராதம்
3) இ- சிகரெட்டை சேமித்து வைத்திருபோருக்கு ஆறு மாதம் சிறை அல்லது ரூ. 50 ஆயிரம் அபராதம்.
4) இ- சிகரெட் வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தால், யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின்பேரில் விசாரிக்கலாம். இதற்குமுன், சந்தேகத்தின்பேரில் விசாரிக்க தடை இருந்தது.

சாதாரண சிகரெட்டுகளுக்கு தண்டனை இல்லை:
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் இந்த இ-சிகரெட்டுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளதாகவும்,. இந்த சிகரெட்டுகள் உடலுக்கு அதிக கேடு விளைவிக்கிறது. அதனால் தடை விதிப்பதாக மத்திய அமைச்சர் கூறினார். இ-சிகரெட்டுகளுக்கு தடை விதித்திருக்கிற அரசு ஏன் சாதாரண சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கவில்லை? என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது. 

ஒரு நிறுவனத்தால், மக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படுமாயின், அதனை நன்கு விசாரித்து உண்மையெனில் அந்தத் நிறுவனத்தை தடை செய்யவேண்டும். இது அரசின் தலையாய கடமையாகும். ஆனால், அரசே இதுபோன்ற திட்டங்களை ஆதரிக்கும் வண்ணம் சில நேரங்களில் செயல்படுகிறது. டாஸ்மாக்கினால் எத்தனையோ தாய்மார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. மக்களும் போராட்டம் நடத்துகிறார்கள். அத்துடன், 70 சதவீத சாலை விபத்துக்கள் மது அருந்தியதால் நடந்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் மத்திய அல்லது மாநில அரசுகள் இதுவரை மதுபானங்கள் விற்பனையை தடை செய்வதுபற்றி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இந்தநிலையில், "சாதாரன சிகரெட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாயைக் கூட்டுவதற்காக இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது" என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உண்மையில், மக்கள் மீது அக்கறைகொண்ட எந்தவொரு அரசும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அனுமதிக்காது. அதன் ஒரு பகுதியாக இன்று இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து போதைப் பொருட்களும் தடைசெய்யப்படவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது. 



நன்றி,
ஊமை இளைஞன் 

Thursday 19 September 2019

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க "கழிவுநீரிலிருந்து குடிநீர்"


டிஸ்கவரி  தொலைக்காட்சிகளில் வரும் மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பியர் கிரில்ஸ் என்னும் தொகுப்பாளர் பசி மற்றும் தாகத்தைப் போக்க சிறுநீரை அருந்துவார். பலருக்கு அது அருவருப்பையும் சிலருக்கு நகைப்பையும் உண்டாக்கும். இந்தநிலையில், சமீபத்தில் தமிழக அரசிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. அந்த அறிக்கையில் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் படிப்படியாக அமலுக்கு வரும் என அறிவித்திருக்கிறது.

கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம்:

கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் நம் நாட்டிற்கு புதிதல்ல. ஏற்கெனவே 1980களில் கழிவுநீரை குடிநீராக்கி சிபிசிஎல், எம்எஃப்எல் போன்ற நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியம் வழங்கியது. அதன் நீட்சியாக, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் இந்த வேளையில், மக்களுக்கும் அதுபோன்ற திட்டத்தை பயன்படுத்தி குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதலில் சென்னையில் அமலுக்கு வருகிறது.

சென்னை மக்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் 1200 மில்லியன் லிட்டர் தண்ணீரும், குறைந்த பட்சமாக 830 மில்லியன் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. இதில் 50 சதவீத நீர் எரிகளிலிருந்தும், 25 சதவீத நீர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாகவும், மீதமுள்ள 25 சதவீத நீர் நிலத்தடி நீரிலிருந்தும் கிடைக்கிறது. ஆனால், அனைத்து மக்களுக்கும் நீர் ஆதாரம் சரியாக கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்பதே உண்மை.

சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 550 மில்லியன் லிட்டர் கழிவுநீராக வெளியேறுகிறது. இதில் 1 சதவீதம் மட்டுமே திடக்கழிவு நீர். ஆகவே, இந்த நீரை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொடுத்தால், சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தேவைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு முறை:

1) கழிவுநீர் சுத்திகரிப்பில், முதலில் கழிவுநீரிலுள்ள திடப்பொருட்கள் நீக்கப்படும்.
2) சிறுதுகள்கள் மற்றும் நுண்கிருமிகள் நீக்கப்படும்.
3) மூன்றாவதாக, அல்ட்ரா பில்ட்ரேஷன் (Ultra Filtration) முறைமூலம் அனைத்து துகள்களும் நீக்கப்பட்டு குளோரின் மற்றும் ஓசோன் சேர்க்கப்படுகிறது, இந்த நீரானது இந்தியாவின் IS 10500 தரத்தைக் கொண்டதாக உள்ளது. இருப்பினும், இந்த நீரானது குடிநீர் பயன்பாட்டிற்கு கொடுக்காமல், ஏரிகள் மற்றும் குளங்களில் விடப்பட்டு, மீண்டும் சுத்திகரிக்கப்படுகிறது.

சென்னையில், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோயம்பேடு - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
நெசப்பாக்கம் - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
பெருங்குடி - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
கொடுங்கையூர் - 80 மில்லியன் லிட்டர் குடிநீர்

மேற்கண்ட கணக்கின்படி, சுமார் 260 மில்லியன் லிட்டர் சுத்தமான நீரை பெறலாம். இந்த திட்டங்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டுக்கும் முடிக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

திட்டத்தின் மதிப்பு:

கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சுமார் 1400 கோடி ரூபாய் ஆகும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆகும் செலவானது, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைவிட குறைவானதாகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஆயிரம் லிட்டர் கடல்நீரை குடிநீராக்குவதற்கு ரூ. 60 செலவாகிறது ஆனால் இதேஅளவு கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.6 லிருந்து ரூ.23 வரை மட்டுமே செலவாகிறது. மேலும், இத்திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மழைநீர் சேமிப்பு:



கடல் நீரை குடிநீராக்குவது, கழிவு நீரை குடிநீராக்குவது முதலிய திட்டங்கள் மூலம் அரசுக்கு பெருமாளவு செலவு ஏற்படுகிறது. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் தண்ணீரின் தேவையும் தட்டுப்பாடும் அதற்குமேல் அதிகரித்து வருகிறது. இந்த திட்டங்கள் நன்மை பயக்குமெனினும், கடல் மற்றும் கழிவுநீரை குடிநீராக்குவதற்கு பதிலாக, மழை பெய்யும் காலங்களில் கழிவுநீரிலும், கடலிலும் வீணாகக் கலக்கும் மழைநீரை ஆங்காங்கே மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்து அந்தநீரை சேமித்து மக்கள் குடிப்பதற்கு ஏற்ற நன்னீராக்கினால் இன்னும் செலவு குறைவாகும்.

தூர்வாரப்படாமல் இருக்கும் ஏறி, குளங்களை சரியாக பராமரித்து மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேறாமல் தேக்கிவைத்தல் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை உயர்த்துவதோடு வருங்கால சந்ததிகளின் தண்ணீர்ப் பற்றாக்குறையை குறைக்கும் முன்னோடித் திட்டமாக அமையும்.

நன்றி,
ஊமை இளைஞன் 

Tuesday 17 September 2019

இந்திய விடுதலையை எதிர்த்த பெரியார் - ஏன்? எதற்காக?



1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆங்கிலயே அரசு இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்கியது. நாடே சுதந்திரத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது இந்தியாவின் மூன்று முக்கிய தலைவர்கள் இந்திய விடுதலையில் அதிருப்தி கொண்டிருந்தனர். அவர்களுள் முதலாமானவர் சுதந்திர தினத்தன்று கொல்கத்தாவில் ஒரு சிறுகுடிசையில் யாருடனும் பேசாமல் மனச்சோர்வில் இருந்த தேசத் தந்தை காந்தியடிகள், இரண்டாவது "இந்த சுதந்திரம் இந்துக்களுக்கானது அல்ல" என்ற முழக்கத்தை வைத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வாக்கர், மூன்றாவது "இந்தநாள் துக்க நாள்" என அறிவித்த தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவன் என போற்றப்படும் தந்தை பெரியார்.

காங்கிரசில் பெரியார்:

காந்திய சிந்தனையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த பெரியார், தான் செய்துகொண்டிருந்த வணிகத்தொழிலை விட்டுவிட்டு 1919 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். மகாத்மா காந்தி அவர்களின் அந்நியத் துணிகள் புறக்கணிப்பு கொள்கையில் கதர் ஆடை அணிதலை வலியுறுத்தி பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்தார்.

1920 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கப் போராட்டம்,  கள்ளுக்கடை மறியல் போராட்டங்களில்  கலந்துகொண்டு சிறைசென்றார். 

1922 ஆம் ஆண்டில் மதராஸ் மாகாண காங்கிரஸ் கூட்டத்தில் மதராஸ் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925 ஆம் ஆண்டில் தீண்டாமைக்கு எதிராக நடந்த வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் நிலவிவந்த உயர்சாதி பிரிவினரின் ஆதிக்கம் மற்றும்  பாகுபாடு அவரை கொதிப்படையச் செய்தது.

சுய மரியாதை இயக்கம்: 

சேரன்மதேவியில் வ.வே.சு என்பவரால் நடத்தப்பட்டு வந்த குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு தனியாகவும் மற்ற பிறசாதி மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. அந்த ஆசிரமத்தில் பணியாற்றிவந்த ஜீவானந்தம் அவர்கள், காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதைப்பற்றி பேசினார். அவருக்கு பெரியாரும் ஆதரவளித்தார். ஆனால், காங்கிரசில் ஆதிக்க சாதியினர் அதிகம் இருந்ததால் அவர்களின் பேச்சுக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை. தொடர்ந்து வகுப்புவாரி தீர்மானத்தை  வலியுறுத்திய பெரியார், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களால் தாமதப்படுத்தப்பட்டது. அதுவரை  காங்கிரசு கட்சியிலிருந்த பெரியார், காஞ்சிபுரம் மாநாட்டிற்குப்பிறகு காங்கிரசிலிருந்து முழுவதுமாக வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். 

குடியரசு என்னும் நாளிதழைத் தொடங்கி தீண்டாமை , சாதிய பாகுபாடு மற்றும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கடுமையாக விமர்சித்தார். விதவை மறுமணம், கலப்புத்திருமணம், பெண்ணுக்கு சமஉரிமை பற்றி விரிவாக எழுதி ஆதரித்தார். அத்துடன் நீதிக்கட்சி கொண்டுவந்த அறநிலையத்துறை மூலம் கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் என்ற கருத்து காங்கிரசு கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

திராவிடநாடு கோரிக்கை:

1930 களில் திராவிடநாடு கோரிக்கையை வலுவாக வலியுறுத்தினார் பெரியார். இந்தியா, இந்திய தேசியம் மற்றும் இந்தியர் என்ற கோட்பாட்டிலிருந்து விடுவித்து திராவிட நாடு தனிநாடாக அறிவிக்கவேண்டும் என போராடினார். அதற்காக திரவிடநாடு பிரிவினை மாநாட்டை நடத்தி ஆங்கிலயே அரசை வலியுறுத்தினார்.

1944 ல் சேலத்தில் நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் நீதிக்கட்சியின் பெயரானது திராவிட இயக்கம் என மாற்றப்பட்டது. இந்த காலக்கட்டத்தில்தான் பெரியாருக்கு அண்ணாவின் நட்பு கிடைத்தது. சிறந்த உத்வேகமும், படிப்பும் கொண்ட அண்ணாவை தனது தளபதியாகவே மாற்றிக்கொண்டார்.

சுதந்திரத்தில் அதிருப்தி:

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பெரியார் இதனை துக்க தினமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், 

''சுதந்திர நாடு'' என்றால் அங்கு தாழ்ந்த நாலாஞ்ஜாதி, சூத்திரன், பஞ்சமன், பறையன், பள்ளன், சக்கிலி, தோட்டி, உயர்ந்த ஜாதி 'பார்ப்பான்' என்ற பேதமில்லா நாடாக, ''மனிதன்''மட்டுமே உள்ள நாடாக, பிறவி இழிவு இல்லா நாடாக இருப்பதுதானே ஒரு சுதந்திர நாட்டின் இலட்சணம்." 

அதற்கு காரணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டுவந்த கல்வி ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே கிடைத்தது என்பதே உண்மை. அத்துடன் பெண்களுக்கு கல்வி, சமஉரிமை, தீண்டாமை முதலியன குறைந்ததும் அவர்களின் வருகைக்குப் பின்னர்தான். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் முடிந்தும் இன்றளவும் அது முழுமையாக ஒழியவில்லை என்பது வேதனைக்குள்ளான உண்மை. அத்துடன். இந்தியாவிற்கு சுதந்திரம் காங்கிரசால் மட்டுமே கிடைத்தது என்ற மாயத்தோற்றத்தை உடைப்பதற்காகவும் விமர்சித்தார். 

நன்றி,
ஊமை இளைஞன் 

Sunday 15 September 2019

நாம் வாங்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

 

கடைக்கு சென்று கடைக்காரரிடம் 1/2 லிட்டர் பால் கொடுங்கள் என்று கேட்போம். அப்பொழுது அவர் எண்ண கலர் பால் வேண்டுமென்று கேட்பார். நாமும் "ஏதோ ஒன்னு கொடுங்க" என்று வாங்கிட்டு வருவோம். சில நேரங்களில் ஒவ்வொன்றின் விலையை கேட்டுவிட்டு     தேவைக்கு ஏற்றாற்போல் வாங்கிகொண்டு வருவோம். எல்லாமே 1/2 லிட்டர்தானே ஏன் விதவிதமான வண்ணங்கள், ஒவ்வொரு வண்ணங்களுக்கும் தனித்தனியான விலை நிர்ணயம் என என்றாவது யோசித்திருப்போமா? இல்லையெனில் வாருங்கள் அதைப்பற்றி இங்கு காணலாம்....

ஆவின் நிறுவனம்: 

தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமானது ஆவின் என்னும் வணிகப்பெயரில் அழைக்கப்படுகிறது. பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை இதன் பணிகளாகும்.

ஆவின் நிறுவனமானது நான்கு விதமான வண்ணங்களில் பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு வழங்குகிறது.

1. மெஜந்தா
2. நீலம் 
3. பச்சை 
4. ஆரஞ்சு 

இந்த வண்ணங்களானது அதில் அடங்கியுள்ள பாலின் அடர்த்தி மற்றும் கொழுப்புச்சத்தின் அளவைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk): 

பால் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பாலின் தேவையை சரி செய்வதற்காக, கொழுப்புசத்து அதிகமுள்ள பாலில் தண்ணீர் சேர்த்து அதில் அடங்கியுள்ள கொழுப்புச் சத்துக்களை குறைத்தும் பால் திடப்பொருட்களின் அளவை ஏற்றியும்  பாலின் கொள்ளளவை அதிகரிக்கின்றனர். எந்தெந்த பால் பாக்கெட்டுகள் எப்பொழுது யாருக்கு வாங்கவேண்டும் என்பதை இங்குக் காண்போம். 

மெஜந்தா (Double Toned Milk):  


மெஜந்தா நிற பாக்கெட்டுகளில் உள்ள இந்த பாலானது இருநிலை சமன்படுத்தப்படுகிறது. இதில், 1.5 சதவீத கொழுப்புச்சத்து மட்டுமே உள்ளது. ஆதலால் இந்தப்பாலை கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள் பருகலாம். இந்த பாலானது, வீடற்ற இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக UNICEF தயாரிக்கிறது. 
இந்தப்பாலின் ஒருலிட்டர் விலை ரூ. 40.

நீலம் (Toned Milk):  


ஒருமுறைசமன்படுத்தப்பட்டுகிறது. நீலநிற பாக்கெட்டுகளில் உள்ள இந்த பாலில் 3 சதவீத கொழுப்புச்சத்து  உள்ளது. இந்தபாலை டீ மற்றும் காஃபி பயன்பாட்டுக்கு நீர் கலக்காமல் பயன்படுத்தலாம். இந்தப்பாலின் ஒருலிட்டர் விலை ரூ. 43.

பச்சை (Standardised Milk):  
பச்சைநிற பாக்கெட்டுகளில் உள்ள பால் தரப்படுத்தப்பட்ட அல்லது நிலைப்படுத்தப்பட்ட பாலாகும் . இதில் 4.5 சதவீத கொழுப்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அத்துடன், தயிர், வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்திக்காகவும் பயன்படுத்தலாம். இந்தப்பாலின் ஒருலிட்டர் விலை ரூ. 47.

ஆரஞ்சு (Full Cream Milk or Fresh Milk): 


விலங்குகளிடமிருந்து (பசு, எருமை, முதலியன)  கிடைக்கும் பாலை அப்படியே நுகர்வோருக்கு கொடுப்பது. இந்த பாலில் 6 சதவீத கொழுப்புச்சத்து அடங்கியுள்ளது. பால்பொருட்கள் மற்றும் இனிப்புகள் செய்வதற்கு இந்தப் பாலை உபயோகிக்கலாம். இந்தப்பாலின் ஒருலிட்டர் விலை ரூ. 51.

பால்விலை உயர்வுக்கு மக்களிடம் வரவேற்பு: 

மக்கள்தொகை நாளுக்குநாள்  அதிகரித்துக்கொண்டிருப்பதால் பாலின் தேவையும் அதிகரிக்கிறது. பாலின் கொள்முதல் பெரும்பாலும் கிராமப்புறங்களிருந்தே கிடைப்பதாலும்,  பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாலும் ஆவின் நிறுவனம் பாலின் விலையை உயர்த்தியது. ஆனால், கிராமப்புற மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, பால்விலை உயர்த்தப்பட்டதற்கு மக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது வரவேற்கத்தக்க செய்தியாக இருந்தது.


நன்றி ,
ஊமை இளைஞன் 

Thursday 12 September 2019

மரங்களில் ஆணி அடித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 25000 அபராதம்


சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட "மரங்களின் மீது விளம்பரப் பதாகைகள் இருந்தால் ரூ. 25000 அபராதம்" என்ற அறிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சாலையோர மரங்கள்:
சென்னை மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ள சாலைகளின் இருபுறமும் பல்வேறு மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மரங்கள் அனைத்தும் நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்க அந்தந்த ஊர்களின் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், பஞ்சாயத்துக்கள் மூலம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது (சில இடங்களில் மட்டும்). ஒரு மரம் நன்றக வளர நல்ல நில அமைப்பு, சூரிய ஒளி மற்றும் காற்று அவசியம். முக்கியமாக, இயற்கைக்கு மாறாக எந்தவொரு தொந்தரவும் இருக்கக்கூடாது.

விளம்பரப் பதாகைகள்:
சில தனியார் நிறுவனங்கள் தங்களது இலாபத்திற்காக பல நேரங்களில் சாலையோர மரங்களில் ஆணி அடித்தும் கயிறுகளைக் கட்டியும் தங்களது விளம்பர பதாகைகளை வைக்கின்றனர். அத்துடன் மின் விளக்குகளால் அலங்கரித்து வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. இதன் காரணமாக, மரத்தின் வாழ்நாள் குறைந்து முன்னதாகவே வலுவிழந்துவிடுகிறது. வலுவிழந்த மரங்கள் சில நேரங்களில் காற்று பலமாக வீசும்போது முறிந்து விழுகின்றன. இதுபற்றி, சென்னை மாநகராட்சியிடம் புகார் அளிக்கப்பட்டடு அதன்பேரில் இந்த நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது.

மாநகராட்சி அறிவிப்பு:

சாலையோரங்களில் இருக்கும் மரங்களில் ஒட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள், மரத்தின் மீது சுற்றியுள்ள மின்கம்பிகள் மற்றும் கேபிள்கள் முதலியவற்றை அடுத்த 10 நாட்களுக்குள் நீக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை அல்லது ரூ.25000 வரை அபராதம் அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியின் ஆணையர் திரு. பிரகாஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

அத்துடன், இதுபோன்ற விளம்பர பதாகைகளை பொதுமக்கள் பார்க்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது, 1913 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு இலவசமாக புகார் அளிக்கலாம். பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மரங்களை பாதுகாக்க உதவவேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுள்ளது.

நன்றி,
ஊமை இளைஞன்

Wednesday 11 September 2019

ராஜீவ்காந்தி கொலை வழக்கு - எழுவர் விடுதலை சாத்தியமா?


முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ்காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டு முடிவுற்ற நிலையில், இதுவரை தமிழக ஆளுநர் திரு. பன்லாரிலால் புரோகித் அவர்களிடமிருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 28 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்ய ஏதாவது வழி இருக்கிறதா? அப்படி விடுதலை செய்தால் என்னவாகும்? வாருங்கள் களைவோம்.

பிரதமர் ராஜீவ்காந்தி கொலை:

1991, மே 20 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னையின் அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு வருகைபுரிந்த பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள், தற்கொலைப் படையை சார்ந்த பெண்ணொருவர், தான் வைத்திருந்த வெடிபொருளை வெடிக்கச்செய்ததால் கொலை செய்யப்பட்டார். இதில் ராஜிவ் காந்தி அவர்களுடன் சேர்த்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரென மொத்தம் 18 பேர் கொல்லப்பட்டனர்.

வழக்கும் தண்டனையும்:

இந்த கொலை வழக்கானது, பூந்தமல்லியில் உள்ள தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உட்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 

1998 ஆம் ஆண்டு மே 11 அன்று, உச்சநீதிமன்றத்தால் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பேரில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது

தூக்கு தண்டணை அளிக்கப்பட்ட நால்வரும் தங்களுக்கு அளித்த தண்டனையை இரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுத்தனர். ஆனால் குடியரசுத்தலைவர் அதனை நிராகரித்துவிட்டார். பின்னர், 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டணையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. அதனையடுத்து, நளினிக்கு அளிக்கப்பட்ட  தூக்கு தண்டணையானது ஆயுள்தண்டணையாக குறைக்கப்பட்டது. 

2011-செப்டம்பர் 9-ஆம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசுத்தலைவருக்கு  கோரிக்கை விடுத்த காரணத்தினால் உயர் நீதிமன்றம் அவர்களின் தண்டனையை நிறுத்தி வைத்தது. அத்துடன், உச்ச நீதிமன்றமும்  மூவரின் கருணை மனுக்களை மீண்டும் விசாரிக்க ஒப்புக்கொண்டது. 2014, பிப்ரவரி14 - ஆம் தேதி மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்ததுடன், அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.

மத்திய அரசு எதிர்ப்பு:

உச்ச நீதிமன்றம், "ஏழுபேரையும் விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்கலாம்" என்ற உத்தரவின் அடிப்படையில் 2014, பிப்ரவரி 19 - ஆம் தேதி அதிமுக அரசு ஏழுபேரையும் விடுதலை செய்ய தீர்மானித்து அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், மத்திய அரசு, "இந்த வழக்கை சிபிஐ மேற்கொண்டதால் மாநில அரசுக்கு அவர்களை விடுதலை செய்யும் அதிகாரமில்லை" எனக்கூறி உச்சநீதிமன்றத்தை நாடியதுதுடன் தமிழக அரசின் 'ஏழுபேரை விடுதலை செய்யவேண்டும்' என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.

கடந்த வருடம் 2018, செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி மீண்டும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்துகொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. அத்துடன், இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.

சட்டசபை தீர்மானமும் ஆளுநரின் அதிகாரமும்:


அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்கீழ், எந்த ஒரு வழக்கிலும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவோ, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ ஆளுனருக்கு விரிவான அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், 2018, செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி, அதிமுக அரசு மீண்டும் அமைச்சரவையைக் கூட்டி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் திரு. பன்லாரிலால் புரோகித் அவர்களிடம் அனுப்பியது.

தமிழக அமைச்சரவை ஆளுநரிடம் பரிந்துரை செய்து ஓராண்டு முடிந்தும் இன்றுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை. அதற்கு காரணம், அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க எந்தவொரு கால நிர்ணயமும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. அதனால் திரு. பன்வாரிலால் 7 பேர் விடுதலை பரிந்துரையை மேலும் கால தாமதமும் செய்யலாம்.

ராகுல் காந்தி  கருத்து:

ராஜிவ் காந்தி அவர்களின் மகன் ராகுல் காந்தி அவர்கள் சிங்கப்போரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், "என் தந்தையை கொலை செய்தவர்கள் மீது நானும் சகோதரி பிரியங்கா காந்தியும் அளவில்லா கோபம் கொண்டிருந்தோம். அதிலிருந்து மீள்வதற்கு வெகுகாலம் எடுத்துக்கொண்டோம். ஆனால் தற்போது அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டோம்" எனக்கூறினார். "சம்பந்தப்பட்டவர்களே கொலையாளிகளை மன்னித்துவிட்டேன் எனக்கூறிவிட்டார்கள். ஆதலால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன், "கொலை செய்யப்பட்டவர் ஒரு நாட்டின் பிரதமர்".

ஆளுநர் முடிவு எப்படி இருக்கும்?

இந்த வழக்கானது மத்திய மாநில அரசுகளை சார்ந்துள்ளதால், மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அந்த முடிவையே ஆளுநரும் எடுக்க வாய்ப்பிருக்கிறது. தற்போதைய மாநில அரசான அதிமுக அரசும் மத்திய அரசான பாஜக அரசும் ஒரேஅணியில் உள்ளதால் மத்திய அரசிடம் மாநில அரசு எழுவரின் விடுதலை குறித்து அழுத்தம் தெரிவித்தால் மட்டுமே எழுவரின் விடுதலையை எண்ணிப்பார்க்க முடியும்.

சிறையிலிருக்கும் ஏழுபேரும் ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற வழக்கில் கைதானவர்கள். அவ்வளவு எளிதாக எந்தவொரு அரசாங்கமும் அவர்களை விடுதலை செய்யாது. இவர்களை விடுதலை செய்தால் மீண்டுமொரு இதுபோன்ற குற்றச்செயலை செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே விடுதலை செய்துள்ளார்கள் என்ற பழியும் வரக்கூடும். இது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவாகவே பார்க்கப்படும். 

ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கவேண்டும் என்பது சட்டம். ஆனால், ஏழுபேரும் தங்களது வாழ்வின் பாதி வயதை (28 ஆண்டுகளுக்கும் மேல்) சிறைகளில் கழித்துவிட்டார்கள். ஆதலால், மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம் என்ற கோரிக்கையை ஆளுநர் ஏற்பரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சட்டங்கள் குற்றம் செய்தவரை தண்டிக்கவும், சிறைகள் தவறிழைத்தவர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளவும் அமைக்கப்பட்டது. அதனால்தான், ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் கைதிகளின் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு தண்டனையைக் குறைத்து விடுதலை செய்கிறார்கள். அப்படிப் பார்த்தால், 28 ஆண்டுகளில் எழுவரின் நன்னடத்தைகளை கருத்தில்கொண்டு அவர்களை விடுதலை செய்யலாம்.

சமூக வலைத்தளங்களில் ஆதரவு:

28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தும், அமைச்சரவை தீர்மானித்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யாமல், எந்தவொரு பதிலும் ஆளுநரிடமிருந்து வரவில்லையே எனக்கூறி சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு எதிராக பின்வரும் ஹாஷ்டாக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

#28YearsEnoughGovernor
#அநீதியே28ஆண்டுகள்போதாதா  

நல்லதொரு தீர்வை ஆளுநர் விரைவில் அளிக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. காத்திருப்போம் நல்லதொரு தீர்வுக்காக.

நன்றி,
ஊமை இளைஞன் 

Tuesday 3 September 2019

சகாயம் அரசியலுக்கு வரலாமா? வந்தால் என்ன சிக்கல்?


சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நம்மை கடந்து செல்லும் கூற்றுகளில் ஒன்று "திரு. சகாயம் ஐஏஎஸ் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்." என்ற கோரிக்கை. இதற்கு பல இளைஞர்கள் தத்தம் கருத்துகளை பதிவிட்டு அவருக்கு ஆதரவு அளிப்பதையும் காண்கிறோம். இன்றுவரை திரு. சகாயம் அவர்கள் அதற்கு எந்தவொரு பதிலையும் கூறவில்லை. ஒருவேளை திரு. சகாயம் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரது அரசியல் செல்வாக்கு எப்படி இருக்கும்? வாருங்கள் களைவோம்.

​​சகாயம் ஐஏஎஸ்:


புதுக்கோட்டை அருகிலுள்ள பெருஞ்சுனை என்னும் கிராமத்தில் பிறந்த திரு. சகாயம் அவர்கள், தன் பள்ளிப்படிப்பை பெருஞ்சுனையிலும், பட்டப்படிப்பை புதுக்கோட்டையிலும், முதுநிலை மற்றும் சட்டப்படிப்பை சென்னையிலும் பயின்று இந்திய ஆட்சிப் பணியில் தேர்வானார். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தலின்போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளாலும் மற்றும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டார். தன்னுடைய சொத்துக் கணக்குகளை வெளியிட்டு பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை வியக்க வைத்தார்.
​​
​​சகாயம் செய்த சகாயம்:


"லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்னும் கொள்கையைக் கொண்ட சகாயம் அவர்கள் ஆற்று மணல் கொள்ளையை அறவே தடுக்க மேற்கொண்ட பணியினால் பல அரசியல் நெருக்கடிக்கு ஆளானார். தன் நேர்மைக்கு பலனாக தான் பணியாற்றிய 27 ஆண்டுகளில் 26 முறை பணியிட மற்றம் செய்யப்பட்டார். தமிழகத்தில் நேர்மையான அதிகாரி என்றால் அதில் சகாயத்திற்கு முதலிடம் இருக்கும்.

நாமக்கல் ஆட்சியராக பணியாற்றிய போது, 'கிராமத்தில் தங்குவோம்', 'உழவர் உணவகம்', 'ஊன்றுகோல் திட்டம்' மற்றும் தொடுவானம் முதலிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி கண்டார். நேர்மையான பணிகள், கண்ணியமான செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலப்பணி திட்டங்கள் ஆகியவற்றை தொகுத்து "சகாயம் செய்த சகாயம்" என்ற புத்தகமும் வெளியிடபட்டுள்ளது.

அதிகாரியாக மட்டுமல்லாமல், அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவராகவும் சகாயம் திகழ்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனைகளுக்கு, " ஏரிகளை ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரி மழை நீரை சேமித்து வைத்தால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது எனவும். இந்த திட்டத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசிடம் கூறினேன் ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை" என அரசை குறைகூறினார்.

மும்மொழி கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு, "தாய்மொழி கல்வி ஒன்றே சிறந்தது. உதவிக்கு ஆங்கிலம் போதும்" எனக்கூறினார். ஆம், திரு. சகாயம் பயின்றது தாய்மொழிக்கல்வியான தமிழ்.

​​முக அரசியலும் இலவசமும்:


ஒருவர் நேர்மையான அதிகாரியாக இருப்பதாலும், சமூக வலைத்தளங்களிலும் இளைஞர்களிடையேயும் அவருக்கு அமோக ஆதரவு இருப்பதாலும் அவர் அரசியலுக்கு வரலாமென்றால் இளைஞர்கள் ஓட்டு மட்டுமே ஒருவரை முதல்வராக்குவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஆம், மறைந்த முன்னாள் முதல்வர்களாகிய திரு. மு. கருணாநிதி மற்றும் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் மேல் பல வழக்குகள் மற்றும் குற்றங்கள் இருந்ததை அனைவரும் அறிந்ததே [இதில் இளைஞர்களும் அடங்கும்]. ஆனால், தேர்தல் சமயங்களில் தன் தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் பெயர் மற்றும் முகவரிகூட தெரியாமல்​ ​இருக்கும் மக்களிடத்தில்​ அவர்களின்​ (கருணாநிதி மற்றும் ஜெயலலிதா) ​முக வசீகரமும்​, ​​​​பேச்சுக்களும் மற்றும் ​மக்களை கவரும் இலவச அறிக்கைகளும்​ தேர்தல் முடிவையே மாற்றிவிடுகிறது. ​அரசானது இலவசத் திட்டங்களின்மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நன்மைகள் செய்ய நினைத்தாலும் உண்மையில் அந்த திட்டங்கள் உரித்தானவர்களுக்கு சென்றடைவதில்லை என்பதே உண்மை. பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மக்கள் இந்த திட்டங்களை அனுபவிக்கிறார்கள். இதன்மூலம், "மக்கள் இலவசத்திற்கு அடிமையாகிவிட்டார்கள்" என்ற ஒற்றைக்கருத்தை மட்டுமே அறிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்று, ​இலவசத்திற்கு அடிமையாகி விட்ட நம் மக்கள், சகாயத்தை ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குரியாக உள்ளது.

எம்ஜியார் அவர்கள் இறந்து ​32ஆண்டுகள் முடிந்த பின்பும், எம்ஜியாருக்காக இங்கு குறைந்தபட்சம் 10 சதவீத ஓட்டுகள் உண்டு.​ ​ஆனால், ​மக்களுக்காக ​உயிருடன் போராடிக்கொண்டிருக்கும் பலருக்கு டெபாசிட் கூட இல்லாத நிலைமைதான் இன்றளவும் உள்ளது. 

​​​​அரசியலில் சமூக வலைத்தளங்களின் பங்கு:

சமூக வலைத்தளங்களிள் பெருகிவரும் மீம்ஸ்களால், ஒரு அரசின் மீது நம்பிக்கையும் (அ) மிகுந்த வெறுப்பையும் ஏற்படுத்த முடிகிறது. பல நேரங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது.​ ​சமூக வலைத்தளங்களின் தாக்கம் அரசியலில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ​,​ அதேபோல் பல நேரங்களில் வெளியாகும் தேர்தல் முடிவுகள் பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன.​ உதாரணத்திற்கு, மணிப்பூரைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஐரோம் சானு ஷர்மிளா அவர்கள். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் காரணமான, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958-ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 ​-​ஆம் தேதி ஆரம்பித்து​ ​சுமார் 15 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார். உலகின் மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டமாகும். அவருக்கு​ ​சமூக வலைத்தளங்களிலும், இளைஞர்களிடமும் நல்ல ஆதரவு அவருக்கு இருந்தது. சமூக வலைதளத்தில் அனைவரும் அவரை போற்​​றினர். தேர்தலில் நிற்க வேண்டுமென்று பதிவிட்டனர். ஆனால், உண்ணாவிரதம் முடிந்து நடைபெற்ற ஒரு தேர்தலில் ​அவருக்கு வெறும் 85 ஓட்டுகள் மட்டும்தான் கிடைத்தது, 
​​
​அரசியலில் ஊடகத்தின் பங்கு:

ஊடகங்களும் பெரும்பாலும் தங்களின் டி.ஆர்.பி-யை மனத்தில் கொண்டே செயல்படுகின்றன. ஏதாவது ஒரு நடிகர் அரசியல் கருத்துக்களை பேசிவிட்டால், அந்த நடிகர் பேசியதை வைத்தே பல கோணங்களில் விவாதங்களை நடத்துகின்றன. ​கருத்துக்கணிப்பு என்னும் பெயரில் கருத்துக்களை திணிக்கின்றனர். சமீபத்தில் திரைத்துறையில் நடைபெற்ற தேர்தலை அனைத்து மீடியாக்களும் நேரடி ஒளிபரப்பு செய்தனர் அதில் சில நடிகர்கள், "இந்தத் தேர்தலை காண்பிப்பதற்குப் பதிலாக, ஏறி, குளங்களை தூர்வாரும் இளைஞர்களை காட்டுங்கள்" என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அதையும் மக்களுக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர் நம் மீடியாக்கள். இன்றைய மீடியாக்கள் ​கருத்துக்கணிப்பு நடத்தினால், ​"சகாயத்தை விட அந்த நடிகர் அதிக வாக்குகள் பெறுவார்" என்று ஊடகங்களே சகாயம் அவர்களை பின்னுக்கு தள்ளும். மக்களும் நடிகர்களுக்குதான் வாக்களிப்பார்கள்.

தேர்தல் காலங்களில் இலவசத்திற்காகவும், ரூ. 500/1000 பணத்திற்காகவும் வாக்களித்துவிட்டு, வருடம் முழுவதும் விலைவாசி ஏறிவிட்டது என்று அன்றாட பிழைப்புக்கு கஷ்டப்படும் மக்கள் இருக்கும்வரை திரு. சகாயம் போன்ற மனிதர்கள் அரசியலுக்குள் வருவதை எண்ணிப்பார்க்கமாட்டார்கள். ​என்று மக்கள் முக அரசியலையும், இலவசத்தையும் ஒதுக்கிவிட்டு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க நினைக்கிறார்களோ அன்று மட்டுமே அரசியலுக்குள் நல்லவர்கள் வருவார்கள்.

நன்றி,

ஊமை இளைஞன்

Sunday 1 September 2019

கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியமா?



இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே , 1974 , ஜூலை 8 ல் அன்றைய பாரத பிரதமர் இந்திராகாந்தி மற்றும் முதலமைச்சர்  கலைஞர் கருணாநிதி முன்னிலையில் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானது ... இதில் , இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்தவும் , புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கலாம் எனவும் ஆனால் மீன்பிடிக்க  அனுமதியில்லையென  ஒப்பந்தம் ஆனது ...

சமதொலைவுக் கோட்பாட்டின்படி , இருநாடுகளுக்கு இடையே கடற்பரப்பில் சமமாக எல்லைக்கோடு போடவேண்டும் ஆனால் , சமமாக எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை ..  அவ்வாறு சமமாக வரையறுக்கப்பட்டால் , கச்சதீவு இந்தியாவிற்கு சொந்தமாகிவிடும் ... இதனால் , தவறாக எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது ... இது உண்மையெனில், மீண்டும் சமதொலைவு எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டு  கச்சத்தீவை திரும்பப்பெறலாம்... 

மேலும் , இலங்கைக்கு இந்தியா கச்சதீவை பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது .. இது உண்மையென்றால், இந்தியா போன்றதொரு பெரியநாடு கொடுத்ததை  திரும்ப கேட்பதென்பது அரிதான விஷயம்.... இதுபோன்ற சூழ்நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தத்தம் மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டு  நல்லமுடிவை அறிவிக்கலாம்... 

ஆனால் இங்கோ , மீனவர்களின் வாழ்வாதாரத்தை மையமாக்கி அரசியல் செய்கிறார்கள்.... ஒவ்வொரு தேர்தலிலும், கச்சதீவை மீட்போமென வெற்று வாக்குறுதிகள் மட்டுமே வந்து செல்கின்றன... ஆளும்கட்சி இவர்கள்தான் தாரைவார்த்தார்கள் என்கிறார்கள்.... எதிர்கட்சிகளோ , கச்சதீவை மீட்போம் வாக்களியுங்கள் என்கிறார்கள் (தாங்கள்தான் கொடுத்தோம் என்பதை மறந்துவிட்டு) ....

எது எவ்வாராயினும் , பாதிக்கப்படுவது மீனவர்கள்தான்.... நாம்  உண்ணும் ஒவ்வொரு மீனின்  பின்னாலும்,  ஒரு மீனவனின் வலியும் கண்ணீரும் மறைந்துள்ளது...  தண்ணீரில் அழும் மீனின் கண்ணீர் யாருக்கும் தெரியாது...  அதுபோலதான்   உள்ளது இன்றைய மீனவனின் வாழ்க்கையும்....

- ஊமை இளைஞன்