Friday 27 December 2019

மண்ணின் காதல்....


கீழ்வெண்மணி - ஒரு படி நெல்லுக்கு 44 உயிர்கள்...


'உந்தன் கோபப் பார்வை போதும்' எனப் பயிர்கள் சொன்னதாலோ என்னவோ செஞ்சூரியன் மாலையில் மங்கிக்கொண்டிருக்கிறான். பறவைகளும் தேடலை முடித்துக்கொண்டு கூட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாநகரின் கீழ்வெண்மணி என்னும் கிராமத்தில், நிலச்சுவான்தாரர் சவரிராஜ் நாயுடு என்பவரது வீட்டினைநோக்கி சிலர் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிரே வந்த கிழவரொருவர், சென்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் வினவுகிறார்.

"தம்பி, எல்லாரும் எங்க போயிட்டு இருக்கீங்க?"

"அதுவா பெருசு, எல்லாரும் ஜமீன்தார பாக்க போயிட்டு இருக்கோம்..."

"எதுக்கு?"

"வாங்குற கூலி வயித்துக்கே பத்தல... நாள் முழுசா ஒழைச்சாலும், ஒருபடி நெல்லுதான் கிடைக்கு. வெளியூர் போயி பொழைக்கவும் வக்கில்ல... விவசாய சங்கத்துல இருக்குற ஆளுங்கெல்லாம் சேந்து, ஜமீந்தார நேர்ல போய் பாத்து பேசியாச்சு ஆனாலும் சரியாகலா. இப்போ என்னனா, கேள்வி கேட்ட ரெண்டுபேத்த அவுங்க ஆளுங்க, வூட்டுல கட்டிவச்சி அடிக்கிறாங்களாம்! அதான் என்னனு கேக்க கெளம்பிட்டோம்." என்கிறார் பதட்டத்துடன்.

சாணிப்பாலும் சவுக்கடியும்:

1960 கால கட்டத்தில் பெரும்பாலான நிலங்கள் நிலச்சுவான்தாரர்களிடம்தான் இருந்தது. நாள் முழுவதும் வேலை செய்தால் ஒருபடி நெல் கூலியாகத் தரப்படும். உடற்சோர்வு காரணமாக யாரேனும் அமர்ந்தால்கூட, அவர்களுக்கு சாணிப்பால் தரப்படும், அதாவது, மாட்டுச் சாணத்தில் நீர் ஊற்றி அதனை குடிக்கச்சொல்வார்கள். குடிக்க மறுப்பவர்களுக்கு ஜமீன்தாரர்களின் அடியாட்கள் மூலம் சவுக்கடி கொடுப்பர். பின்பு, 1967 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த மணியம்மை மற்றும் சீனிவாசராவ் போன்றோர்களின் விழிப்புணர்வினால் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தின் விவசாயிகளை ஒருங்கிணைத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, விவசாய சங்கத்தினர் சிலர் தங்களது கோரிக்கையை ஜமீன்தாரரிடம் கொண்டு செல்கின்றனர்.

விவசாய சங்கத்திலிருந்து வருபவர்களை கண்டதும், "என்ன வேண்டும்? எதுக்கு இவ்வளவு பேர் வந்துருக்கிறீர்கள்" என்கிறார் ஜமீன்தாரர்.

"உழைக்கும் ஊதியத்திற்கு ஏற்ப கூலி வேண்டும்" என்கிறார்கள்.

"அதுதான், தினக்கூலியாக ஒருபடி நெல் தருகிறோமே?" என்கிறார் ஜமீன்தாரர்.

"அது போதவில்லை! அரைப்படி நெல் சேர்த்து கொடுங்கள் போதும்...இல்லையெனில், போராட்டம் தொடரும்... வயல்களில் வேலை செய்யமாட்டோம்.." என்கிறார்கள் விவசாயிகள்.

"அடிமை நாய்களா! எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?" என மேலும் கோபமுறுகிறார் ஜமீன்தாரர்.

"அய்யா... நிலம் உங்களுடையது. உழைப்பு எங்களுடையது. நாங்கள் கேட்பது, உழைத்த உழைப்பிற்கான கூலி. அவ்வளவுதான்" என்கிறார்கள்.  

இவ்வளவு நாட்கள் தாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தவர்கள், இன்று தங்களை எதிர்ப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கோபம்கொண்ட ஜமீன்தாரர்கள், உள்ளூர் ஆட்களை பணியவைக்க, தங்களால் ஏற்படுத்தப்பட்ட "நெல் உற்பத்தியாளர்கள்' சங்கத்தின் மூலம் வெளியூர் ஆட்களை திரட்டி வேலைகொடுத்தனர். இதனால் ஜமீன்தாரர்களுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததது. 

அதிகாரத்தின் கோபப் பசியில் 44 உயிர்கள் பலி:

விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இருப்பதால்தானே இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள் என எண்ணிய ஜமீன்தாரர்கள், விவசாய சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். நிலைமை கைமீறிப் போக, விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து, காவல்துறையிடம் முறையிடுகின்றனர். அன்றைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செல்வாக்குகளால், அதிகார வர்க்கம் காவல்துறையை 'கப் சிப்' ஆக்கிவிட்டது. 

25.12.1968 அன்று, சவரிராஜ் நாயுடு என்னும் ஜமீன்தார், தனது வீட்டில், விவசாய சங்கத்தைச் சார்ந்த முத்துசாமி மற்றும் கணபதி என்பவர்களை கட்டிவைத்து அடித்து துன்புறுத்துவதாக செய்தி பரவியதையடுத்து, விவசாய சங்கத்தினர் ஜமீன்தார் வீட்டை நோக்கிப் பயணித்தனர். இருவரையும் கட்டவிழ்த்துவிட்டு வீட்டிற்கு செல்கின்றனர். கட்டவிழ்ப்பதில், ஜமீன்தாரர்களின் ஆட்களுக்கும் விவசாய சங்கத்தினர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறுகிறது. தகவலறிந்த கோபால கிருஷ்ண´நாயுடு என்னும் ஜமீன்தார், தனது ஆட்களையும் காவல்துறையில் இருந்த சிலரையும் கூட்டிக்கொண்டு கீழ்வெண்மணி என்னும் கிராமத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுடுகின்றனர். இருவரும் அடிதடியில் இறங்கினர். 

ஒருகட்டத்தில், துப்பாக்கியை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் அனைவரும் ஓடி ஒழிகின்றனர். கிராமத்தின் இறுதியில் உள்ள, ராமையா என்பவரது குடிசையில் 44 பேரும் உள்ளே புகுந்து தாளிட்டுக் கொள்கின்றனர். கோபப்படுவது விஷத்தை அருந்துவதற்கு சமம். தன்னையும் அழிக்கும் தன்னைச் சுற்றியவர்களையும் அழிக்கும் என்பதற்கு கோபால கிருஷ்ண ராயுடு ஒரு உதாரணம். கோபக்கனலில் தன்னிலை இழந்த கோபால கிருஷ்ண ராயுடு, அவர்கள் ஒளிந்திருந்த குடிசையின் வெளியே தாளிட்டு குடிசையைத் தீயிடச் சொன்னார். ஆட்களும் அவ்வாறே செய்தனர். 

குடிசை எரிகிறது...

குழந்தைகள் கதறுகின்றனர்...

பெரியவர்கள் அலறுகின்றனர்...

தீயின் பசியில்,

சிறு குழந்தையின் பிஞ்சு நெஞ்சும் பஞ்சாய் எறிகிறது...
தேகம் காய்ந்து தீஞ்சு போகிறது...

அய்யோ,

பாராட்டி சீராட்டி
வளர்த்த பிள்ளையை
பாவிகள்,
தீயிட்டு கொள்கின்றனரே! என்ற அழுகுரலும் கேட்கிறது...

உள்ளிருந்த பெண்மணி ஒருவர் தான் வைத்திருந்த கைக்குழந்தையை காப்பாற்ற வெளியில் வீசுகிறாள். ஆனால் குடிசையைச் சுற்றியிருந்த ஜமீன்தாரர் ஆட்கள் வீசிய குழந்தையை மீண்டும் உள்ளே தூக்கிப்போடுகின்றனர். தீச்சுவாலையில் ஆறுபேர் வெளியில் வருகின்றனர். ஆனால் ஜமீன்தாரர் ஆட்கள் அவர்களை மீண்டும் உள்ளே தள்ளிவிடுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக 44 பேரின் உயிரைத்தின்று தீயும் தன் பசியைப் போக்கிக்கொண்டது.

பசி ஆரிய தீயானது, தணிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தது. பூட்டிய கதவைத் திறந்த காவல்துறையினர், மாதம்மாள் என்னும் பெண்ணொருத்தி எறிந்த நிலையிலும் தன் கைக்குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு கல்லும் இதயம் வெடித்து விரிசல் அடைந்தது ஆனால் இந்த கல்நெஞ்சக்காரர்களின் மனசுதான் கல்லாகி இருண்டுப் போனது.

நீதி தோற்றது...தர்மம் வென்றது:

விவசாயிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது...
10 ஆண்டு சிறையென தீர்ப்பு வந்தது...
பணம், மேல்முறையீடு செய்தது...
"கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள், தாங்களே சென்று கொலை செய்திருக்கமாட்டார்கள்" என தீர்ப்பு வந்தது... நிதி நீதியை சூழ்ந்தது...

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்" என்பதற்கு ஏற்ப, காலம் கடந்து தர்மம் வென்றது!

ஆம்,1980-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் தலைமறைவு புரட்சியாளர்களான நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள் மிராசுதார் கோபால கிருஷ்ண நாயுடுவை தியாகிகள் நினைவிடத்தின் அருகில் வெட்டிக் கொன்றனர்.

"என்னிடம் பணம் உள்ளது, அரசியல் செல்வாக்கு உள்ளது. என்னால் எதைவேண்டுமானாலும் செய்யமுடியும். நீதியைக்கூட நிதியால் வென்று விடுவேன்" என்று சிலர் கருதலாம். அவ்வாறு கருதுபவர்களுக்கு ஒன்று மட்டும் கூறுகிறேன், "நீதி தோற்கலாம்... தர்மம் தோற்காது" என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள்.

நன்றி,
ஊமை இளைஞன்

Sunday 17 November 2019

உலகின் சிறந்த மற்றும் மோசமான சாலைகள் கொண்ட 10 நகரங்கள்


உச்சநீதிமன்றம் வாகன ஓட்டிகள்
அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணியவேண்டும் என பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், நாட்டிலுள்ள  சாலைகளின் தரத்தையும் அவற்றால் ஏற்படும் விபத்துக்களையும் நீதிமன்றம் கணக்கில் கொள்ளாதது அனைவருக்கும் ஏமாற்றமே. இந்தநிலையில், சமீபத்திய ஆய்வறிக்கையொன்று நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், உலகின் மிக மோசமான சாலைகளைக் கொண்ட 100 நகரங்களின் வரிசையில் இந்தியாவின் மும்பை நகரம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது.

உலகின் சிறந்த மற்றும் மோசமான சாலைகள் கொண்ட 10 நகரங்கள் 

ஐரோப்பாவின் கார்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மிஸ்டர் ஆட்டோ என்ற நிறுவனம், வாகன எரிவாயு, சாலையின் அமைப்பு, சாலை வரி போன்ற 15 அம்சங்களைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், இந்தியாவின் மும்பை நகரம் நூற்றுக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்று கடைசி இடமான 100-வது இடத்தைப் பெற்றுள்ளது. 


உலகின் சிறந்த சாலை அமைப்பு  கொண்ட முதல் 10 நாடுகளில் கனடாவின் கல்கரி முதலிடத்திலும், ஐக்கிய நாட்டின் துபாய் இரண்டாவது இடத்திலும், கனடாவின் மற்றொரு நகரமான ஒட்டாவா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், உலகின் மிக மோசமான சாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் இந்தியாவின் மும்பை முதலிடத்திலும், மங்கோலியாவின் உடான்பாட்டார் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மற்றொரு நகரமான கொல்கத்தா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சாலைகளும் சட்டங்களும்:

சமீபத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகன விதிகளை மீறுவோருக்கு பின்வரும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன: 

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம். 

இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் ரூ.2,000 அபராதம். 

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம். 

செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவோர்களுக்கு ரூ.1,000  முதல் ரூ.5,000 வரை அபராதம்.

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் செல்வோருக்கு ரூ.10,000 அபராதம்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5,000 அபராதம்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10,000 அபராதம்.

வேகமாக வாகனம் ஓட்டினாலோ அல்லது ரேஸிங்கில் ஈடுபட்டாலோ ரூ.5,000 அபராதம்.

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஒரு டன்னிற்கு ரூ.2,000 அபராதம்.

அரசு இயற்றிடும் சட்டங்களை மக்கள் பின்பற்றவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கும் நீதிமன்றம், அவர்கள் பயணம் செய்யும் சாலைகளின் தரத்தையும் சோதித்து அதன்பின்னர் சட்டம் இயற்றினால் நன்றாக இருக்கும். மோட்டார் வாகன சட்டத்தை மீறுவோருக்கு அதிக அபராதம் வசூலிப்பது தவறில்லை ஆனால் அபராதம் வசூலிப்பதற்குமுன் அரசு மக்களுக்கு சரியான சாலைவசதியை அமைத்துள்ளதா என சரிபார்க்கவேண்டும். 

நன்றி,
ஊமை இளைஞன்  

Friday 15 November 2019

பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து உருவாகும் செங்கற்கள்


பிளாஸ்டிக் கழிவுகளை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் , அடுத்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 12 இலட்சம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் இருக்கும் என உலகப் பொருளாதார மையம் கூறுகின்றது. இந்தியாவில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உண்டாக்குப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக, உலகில் பிளாஸ்டிக்குகளின் ஆதிக்கம் மேலொங்கிய நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்  கூடாது மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசு சட்டம் இயற்றினாலும் சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்களைத் தவிர்த்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தவர்கள் யாருமில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்குப் பிறகும் பெருவணிகர்கள் மற்றும் நிறுவனங்களில் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்திதான் வந்தனர் என்பதுதான் உண்மை. ஒருபுறத்தில் பிளாஸ்டிக்கினால் தீமைகள் இருந்தாலும், பிளாஸ்டிக்கினால் சில நன்மைகள் உள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அந்தவகையில், சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் செங்கற்கள். 

பிளாஸ்டிக் செங்கற்கள் தயாரிக்கும் முறை: 


குப்பைகளில் வீணாகக் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வேறுசில பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீரைக் கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.

தூய்மைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் நன்கு உலர்த்தப்பட்டபின்பு அரவை இயந்திரத்தின்மூலம் மணல்​ ​போன்று நன்றாக தூள் செய்யப்படுகிறது.​​

தூளாக்கப்பட்ட ​​பிளாஸ்டிக் துகள்கள் நன்கு சூடேற்றப்பட்டு திரவநிலைக்கு மாற்றப்படுகிறது. பின்பு அதனுடன் ஆற்றுமணல் சேர்க்கப்பட்டு கலக்கப்படுகிறது.​​ பின் திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாற்ற குளிர்விக்கப்படுகிறது.​ திடநிலைக்கு மாற்றம் செய்த செங்கற்கள் அளவிற்கேற்றவாறு தனித்தனியாக வெட்டப்படுகிறது.​

இவ்வாறாக உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்கள், 180 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவைத் தாங்கும் திறன் மற்றும் 20 டன் எடையைத் தாங்கும் சக்திகொண்டதாக உள்ளது​.​ ​தரைதளத்திற்கு கற்களை தயாரிக்கும்போது மட்டும் அதனுடன் ரெட் ஆக்சைடுகள் சேர்க்கப்படுகின்றன. ​​​

​மேற்கண்ட முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களுடன் (60 சதவீதம்), 20 சதவீத சிமெண்ட் மற்றும் கிரானைட் கற்கள் சேர்த்து அரைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஜல்லிகள் தயாரிக்கப்படுகிறது. ​

பிளாஸ்டிக் செங்கற்கள் பயனுள்ளதா?

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகஅளவில் பெருகிவருகின்றன. அதனுடன், மணல், சிமெண்ட் மற்றும் செங்கற்களின் விலையும் கூடிவருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை முழுவதும் அழிக்கமுடியாது என்ற நிலையில், இதுபோன்று மறுசுழற்சி செய்து அவற்றை பயன்படும் வகையில் உற்பத்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் செங்கற்கள் அதிகபட்சம் 180 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை மட்டுமே தாங்கக்கூடியது. அதிக அளவிலான வெப்பம் ஏற்படும்போது உருகும் நிலைக்குத் தள்ளப்படும். 


சாதாரண இயற்கையான சூழலில் கிடைக்கும் கற்களினால் வீட்டின் உள் பகுதியில் சற்று குளிர்ந்து காணப்படும். ஆனால் இந்தவகையில் கட்டப்படும் கட்டிடங்களினால் இயற்கையாகவே சற்று வெப்பசலனத்துடன் காணப்படும். ஆற்றுமணல் கொள்ளை ஓரளவுக்கு குறைந்துவிடும். 

பெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் எத்தனையோ பேர் வீடில்லாமல் உள்ளனர். அரசு அளிக்கும் திட்டத்தின்மூலம் வீடு கட்டிக்கொள்ளும் எத்தனையோ குடும்பங்கள் இன்றளவும் உள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளின் மூலம் தயாரிக்கப்படும் செங்கற்கள் மற்றும் தரைதள கற்களுக்கு செலவிடும் தொகை மிகக்குறைவு என்பதுடன் சுற்றுச்சூழலையும் மக்களையும் அதீத குப்பைகளிலிருந்து பரவும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. நிச்சயம் இவை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே நம் கருத்து. 

நன்றி,
ஊமை இளைஞன்  

Sunday 10 November 2019

தினமும் நாம் அருந்தும் தேநீரின் (TEA) கதை


தினமும் தண்ணீருக்கு அடுத்ததாக அதிகளவு குடிக்கும் பானம் தேநீராகத்தான் இருக்கும். அது எப்படி உருவானது என்பதை என்றாவது நாம் யோசித்திருப்போமா? வாருங்கள் பார்ப்போம்.

தேநீர் செடி பற்றிய சீனக்கதைகள்:


கிமு 2737 களில், சீனாவைச் சார்ந்த 'ஷென்னாங்' என்ற வேளாண் மருத்துவர், மூலிகைச்செடிகளின் மகத்துவத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் மலைப்பகுதிகளுக்கு சென்று அங்கு கிடைக்கும் பல்வேறு விதமானச் செடிகளை மென்று ஆராய்ந்து வந்தார். சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட செடிகளை உண்ட ஷென்னாங், மலைப்பகுதியில் அலைந்து திரிந்து களைப்புற்று அமர்ந்திருந்த நேரத்தில், அருகில் தளதளவென்று வளர்ந்து நின்ற ஒரு செடியின் இலையினை மென்று சுவைத்தார். களைப்புற்றிருந்த அவருக்கு, அந்த செடியினை உண்டபின்பு புத்துணர்ச்சி கிட்டியது. அந்த செடிதான், இன்று நாம் விரும்பி சுவைக்கும் தேநீர் தயாரிக்க பயன்படும் தேயிலை செடி என்று சீனக்கதையொன்று கூறுகிறது.இன்னொரு கதையில், வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ஷென்னாங் என்னும் சீனப் பேரரசன், சுடுநீர் அருந்திக்கொண்டிருக்கும், அருகிலிருந்த செடியிலிருந்து பறந்து வந்த இலைகள் அருந்திக்கொண்டிருந்த சுடுநீரில் விழுந்தனவாம். அப்பொழுது, சுடுநீரின் நிறம் மாறியதுடன், சுடுநீரிலிருந்து வந்த வாசனையை முகர்ந்தபோது அவனுக்கு புதுவிதமான உற்சாகத்தைக் கொடுத்ததாம். அதிலிருந்து சீன மக்கள் அதனை உண்டு வந்ததாக மற்றொரு கதை கூறுகிறது. 

மற்றொரு கதையில், ஒரு பௌத்த துறவி தியானம் செய்யும் பொழுது அடிக்கடி துாங்கிவிடுவாராம். தன் தூக்கத்தினால்தான் ஞானம் அடைய முடியவில்லை என எண்ணி தியானத்தின்போது துாங்காமல் இருப்பதற்காக, தனது இமைகளை வெட்டி வீசிவிட்டு தியானம் மேற்கொண்டு ஞானத்தை அடைந்தாரம், அவர் இமைகளை வீசிய இடத்தில் சில நாட்கள் கழித்து ஒரு செடி முளைத்ததாம். அந்த செடிதான் தேநீர் செடி. அதனால்தான், தேயிலையிலிருந்து இலையிலிருந்து கிடைக்கும் தேநீரை அருந்துவோர்க்கு துாக்கம் போய் உற்சாகம் வருகின்றது என்றொரு சீனக்கதையும் உள்ளது. 

மேற்கண்ட கதைகளில் உண்மை எதுவாயினும், தேநீரின் பிறப்பிடம் சீனா என்பது உறுதியாகிறது.

தேயிலை உற்பத்தி வளர்ச்சி:


4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, சீனாவில் பயிரிடப்பட்டு வந்த தேயிலையானது, முதலில் தற்போது நாம் உண்ணும் கீரையைப்போல் உணவாக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில், உணவிற்குப் பதிலாக பானமாக மாறியது. ஆரம்பகால சீன இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தேநீரானது முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஜப்பானைச் சார்ந்த துறவி ஒருவரின் சீன வருகைக்குப்பின்னர், தேயிலை ஜப்பானை அடைந்து அங்கும் பயிரிடப்பட்டது. அதன்பின்னர், டச்சுக்காரர்கள் தேயிலை வணிகத்தைக் சீனாவுடன் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் பரப்பினர். அது தனது அண்டைநாடான பிரான்சையும் அடைந்தது. முதலில், தேநீரின் மருத்துவ குணத்தைக் கொண்டே உலகம் முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் தேநீர் பற்றிய செய்தி பரவியது. 

TEA- என்பதன் விரிவாக்கம்:



இங்கிலாந்தின் அரசர் சார்ள்ஸ் மற்றும் போர்ச்சுக்கீசிய இளவரசியான கேத்தரின் ஆஃப் ப்ரகான்ஸா திருமணத்தின்போது தேயிலை திருமண சீர்வரிசைகள் அளிக்கப்பட்டது. தேயிலை அடங்கிய அந்தப்பெட்டியில் 'Transporte de Ervas Aromalsicus' என அச்சிடப்பட்டிருந்தது. அதன் முதல் மூன்று எழுத்துக்களே TEA என அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் மோட்சா (Motcha) என்று அழைக்கப்பட்ட தேயிலைக்கு TEA எனப் பெயர்வந்ததற்கு, சார்ள்ஸ் மற்றும் கேத்தரின் அவர்களின் திருமணம் முக்கிய காரணம்.

தேநீரின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும் முதன்முதலில் தேநீரில் பாலை கலந்து குடித்தது ஐரோப்பிய நாடுகள்தான். அதனைத் தொடர்ந்து பிரித்தானிய நாடுகள், மேற்கு இந்தியத் தீவுகளிலுருந்து கொண்டுவரப்பட்ட கரும்பு சர்க்கரையை தேநீருடன் சேர்த்து பருகினார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக தேநீர் தயாரிக்கபடுகிறது. இந்தியாவில் தேநீருடன், பால் , இஞ்சி, ஏலக்காய் சேர்க்கப்பட்டு பரிமாறப்படுகிறது.  நேபாளத்தில், உப்பு மற்றும் பால் சேர்க்கப்படுகிறது. 


பிரித்தானிய நாடு - சீனா தேயிலை போர்: 

சீனாவில் விளையும் தேயிலைகளைப் பெறுவதற்கு வெள்ளிக்காசுகளை கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். நாளடைவில் வெள்ளிக்காசுகளின் தட்டுப்பாடு ஏற்படவே, பிரித்தானிய அரசு மேற்குவங்காளத்தில் விளைந்த ஓபியம் என்ற போதைச்செடியினை கொடுத்து தேயிலையை வாங்கினர் . ஆனால், ஓபியத்திற்கு பெரும்பலான சீன மக்கள் அடிமையாகவே சீனா அரசு ஓபியத்தை தடைசெய்ய முடிவெடுத்து ஹாங்கோங் கடற்கைரைப் பகுதியில் நின்றிருந்த கப்பல்களில் உள்ள ஓபியத்தை அழித்தது. கோபம்கொண்ட பிரித்தானிய அரசு, சீனாவின்மீது  மூன்றுமுறைப் போர்தொடுத்து வென்றது.

இருப்பினும்,  சீனாவின் தேயிலை உற்பத்தி மற்றும் விதையின் தன்மைபற்றி அறியமுடியவில்லை. எனவே, பிரித்தனியா அரசு, 1848-ல் தாவரவியல் அறிஞரான ராபர்ட் போர்சூன் (Robert Fortune)  என்பவரை இரகசிய உளவாளியாக அனுப்பி தேயிலையின் உற்பத்தி பற்றி அறிந்துகொண்டபின்னர், தேயிலை சாகுபடியில் தேர்ச்சிபெற்ற 80 விவசாயிகளுடன் திரும்பி இந்தியாவில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் பயிரிட்டு வென்றனர். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் நீலகிரி, இலங்கையின் கண்டி மற்றும் கென்யாவிலும் பயிரிடப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வணிகப்பொருளாக மாறியது.

தேயிலை உற்பத்தியில் இந்தியா:

இந்தியாவில் தேயிலை உற்பத்தியானது அசாம் , நீலகிரி மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இங்குவிளையும் தேயிலைக்கு சிறப்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலகில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் 25 சதவீதம் இந்தியாவிலிருந்து பெறப்படுகிறது.

உலக அளவில் நான்காவது ஏற்றுமதியாளராகவும், இந்தியா இருக்கிறது. இதில், 2015 -16-ல், 4,467 கோடி ரூபாய்க்கும், 2016-17ல், 4,602 கோடி ரூபாய்க்கும், 2017-18-ல் 5,059 கோடி ரூபாய்க்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வரலாறுகள் பல கொண்ட தேநீரானது, மன அழுத்தம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்துவதாக கூறப்படுகின்றது. அத்துடன், டிசம்பர் 15 ஆம் நாளானது தேயிலை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

நன்றி,
ஊமை இளைஞன்

Sunday 20 October 2019

பஞ்சமி நிலங்களும் அதன் வரலாறுகளும்!


நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் வைக்கப்பட்ட சில காட்சிகள் பஞ்சமி நிலம் மற்றும் மீட்பு பற்றி பேசியது. அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அதனை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலினை, பாமக நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள்,"திமுகவின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக  குற்றம்சாட்டினார். ஆனால் திரு. ஸ்டாலின் அவர்கள் அதனை மறுத்து, "அஃது பட்டா நிலமல்ல, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம்" எனக்கூறி 1985 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட மனைப்பத்திரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால், இன்றளவும் பிரச்சனை ஓயவில்லை. ஒருபுறம் இது இருக்க, திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் "பஞ்சமி நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் உரியவர்களிடம் திருப்பித் தரவேண்டும்.  அத்துடன், அரசு பஞ்சமி நில மீட்புக்குழு ஒன்றை அமைத்து உரியவர்களுக்கு அதனை அளித்திடவேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். பஞ்சமி நிலம் என்றால் என்ன? ஏன் அதை திருப்பி ஒப்படைக்கவேண்டும்? ஏன் அது உருவாக்கப்பட்டது? எனப்பல கேள்விகளுக்கு இங்கு விடையைக்  காண்போம். பஞ்சமி நிலங்கள் என்றால் என்பதை பார்ப்பதற்கு முன்னால் அது உருவாக்கப்படக் காரணமான மிராசிமுறைப் பற்றிக்காண்போம்.

மிராசி முறை:

கிராமத்துக்குப் பொதுவாக இருந்த நிலங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களை மிராசுதாரர்கள் என அழைத்தனர். இதற்கு மிராசிமுறை என பெயரிடப்பட்டது. அத்துடன், அந்த நிலங்களை குத்தகைக்குவிட்டு வரிவிதிக்கவும், வரிவசூல் செய்து ஆங்கிலேய அரசிடம் செலுத்தவும் அனுமதியளிக்கப்பட்டது. உடன், கிராமத்தில் இருந்த தரிசு நிலங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு விடப்பட்டது. அதனை அவர்கள் விருப்பப்பட்டவர்களுக்கு கொடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டது. இதனால், ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஏற்கெனவே, சாதியரீதியாக பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு, தரிசு நிலங்களைக்கூட பயன்படுத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது. அரசும், தரிசுநிலம் வேண்டி யாரெனும் மனு அளித்தால் மிராசுகள் அனுமதியளித்தபின்பே அவர்களுக்கு அனுமதிவழங்கினர். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க மறுத்தனர். காரணம், நிலமற்றவர்களுக்கு நிலங்களை வழங்கினால், தங்களது நிலத்தில் வேலைசெய்ய வரமாட்டார்கள் எனவும் வீட்டுவேலைகளுக்கு உகந்த இவர்களை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவேண்டும் எனவும் எண்ணினர்.  

 ஜேம்ஸ் ட்ரெமென்கீர்:


1891 ஆம் ஆண்டு,  அன்றைய செங்கல்பட்டு மாகாணத்தின் ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்னும் ஆங்கிலேய அதிகாரி "பறையர்கள் பற்றிய குறிப்புகள் (Notes of Paraias)" என்னும் பெயரில் அறிக்கையொன்றை தயாரித்து ஆங்கிலயே அரசிடம் ஒப்படைத்தார். அதன்படி, "ஒடுக்கப்பட்ட மக்களின் வாழவை மேம்படுத்த வேண்டுமாயின், அவர்களுக்கு நிலங்கள் வழங்கவேண்டும்" என அந்த அறிக்கை கூறியது. இந்த அறிக்கை, 1892 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ஆங்கிலய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் , பஞ்சமி நில சட்டம் என அழைக்கப்பட்டது.

பஞ்சமி நில சட்டம்: 

ஒடுக்கப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில், ஆங்கிலய அரசால் இயற்றப்பட பஞ்சமி நில சட்டத்தில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இருந்தன. இந்த சட்டத்தின்படி, 

1) பஞ்சமி நில சட்டத்தின்படி அளிக்கப்பட்ட நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். 

2) முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்ககோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. 

3) வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.

பஞ்சமி நில சட்டத்தின் மூலம் மதராஸ் மாகாணத்தில் மட்டும் சுமார் 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், தரிசு நிலம் எனவும் வகைப்படுத்தினர்.

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு: 

இந்திய விடுதலைக்குப்பிறகு, 1950-களில் ஆச்சார்ய வினோபா அவர்களின் பூமிதான இயக்கத்தின்படியும், 1960-களில் வந்த கூட்டுறவு திட்டத்தின்படியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அரசு மக்களுக்கு எவ்வளவுதான் நலத்திட்டங்களை வகுத்திட்டாலும் அந்தத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதில்லை. மேலும், இன்றளவும் பெரும்பாலான திட்டங்களை பற்றிய புரிதல் இன்றளவும் வெகுமக்களை சென்றடைவதில்லை. இதன்காரணமாக, சாதியரீதியன தாக்குதல் மற்றும் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையால் பெரும்பலான நிலங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரிடமிருந்து பறிக்கப்பட்டது. சிலர் ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரிலேயே நிலங்களை வாங்கி அனுபவித்து வருகின்றனர்.

பஞ்சமி நில மீட்பு போராட்டம்: 

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் உள்ள திருவண்ணாமலை, வடஆற்காடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஏறத்தாழ 77 சதவீத பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இதன் எதிரொலியாக, முதல் பஞ்சமி நிலமீட்பு போராட்டம், 1994 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கியது. இந்த போராட்டத்தில், ஜான் தாமஸ் மற்றும் ஏழுமலை என்னும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டம் வலுபெறவே, 1996 ஆம் ஆண்டு அன்றய அதிமுக அரசு பஞ்சமி நிலமீட்புக் குழு ஒன்றை அமைத்தது ஆனால் அவர்களின் ஆட்சி முடிவடைந்ததால் அஃது கிடப்பில் போடப்பட்டு, பத்து வருடங்கள் கழித்து, 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுகவால் மீண்டும் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதிலும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் மீண்டுமொரு குழு அமைக்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. 

1892 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சமி நிலம் சார்ந்த சட்டம் 127 ஆண்டுகள் முடிவடைந்தும் இன்றும் தொடர்கிறது. இதற்கு காரணம் பொறுப்பற்ற ஆட்சியாளர்களின் மனநிலைதான் முக்கிய காரணம். ஒருவேலை அவர்களே பல இடங்களில் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்திருப்பதால் என்னவோ இன்றளவும் எந்தவொரு முடிவும் எட்டாமல் உள்ளது.

நன்றி,
ஊமை இளைஞன்

Thursday 17 October 2019

வாழை நார் மற்றும் பருத்தி துணியிலிருந்து நாப்கின் தயாரிப்பு!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தாலும் சில அத்தியாவசியமான பொருட்களின் தயாரிப்பில் பிளாஸ்டிக்குகள் முக்கிய பங்குவகிக்கின்றன. அவற்றில், ஒருமுறை பயன்படுத்தி எறியப்படும் நாப்கின்கள். பெண்கள் தன் வாழ்நாளில் சுமார் ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் நாப்கின்களை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. செயற்கையாக தயாரிக்கப்படும் நாப்கின்களின் விலை அதிகமாக உள்ளதாலும், ஒருமுறை மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என்பதாலும், பலர் இயற்கை நாப்கின்களை நோக்கி நகர்கின்றனர். அந்த வகையில், வாழை நார் மற்றும் பருத்தித் துணிகளிலிருந்து நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

செயற்கை நாப்கின்கள் தயாரிக்கும் முறை:


நாப்கின்களில் முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக்கினாலும், இரண்டாவது லேயர் ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ பேப்பரைக்கொண்டும், மூன்றாவது லேயரில் ஜெல்லும் (பெட்ரோலிய பொருளால் தயாரானது), நான்காவது லேயரில் பாலித்தீனும் (நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை) கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இரண்டாவது லேயரில் உள்ள டிஸ்யூ பேப்பரை ப்ளீச் செய்ய ஹைப்போ குளோரைட் மற்றும் டையாக்சின் போன்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டையாக்சின் வேதிப்பொருளானது அதிகநேரம் பெண்களின் பிறப்புறுப்பின்மீது உபயோகப்படுத்தும் போது, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த நாப்கின்கள் மக்குவதற்கு சுமார் 60 வருடம் எடுத்துக்கொள்வதுடன் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.

வாழை நாரிலிருந்து நாப்கின்கள்:


டெல்லியில், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உதவியுடன் ‘சான்பே’ என்ற தொழில்முனைவு நிறுவனம், வாழை நாரிலிருந்து சானிட்டரி நாப்கின்களை தயாரித்துள்ளது. இதுபற்றி, சான்பே நிறுவனத்தின் அதிகாரி ஆர்சிட் அகர்வால் கூறுகையில்," இன்று சந்தைகளில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் செயற்கைப் பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால், அவை மக்குவதற்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகும். பலர் இதை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதால் தொற்று நோய் ஏற்படும் பாதிப்பும் உள்ளது." என கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறிய அகர்வால், "நாப்கினை எரிப்பதனால் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் வெளிபடுகிறது. அதே நேரம் இதன் விலையும் அதிக அளவில் உள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் எங்கள் நிறுவனம் வாழை நாரில் நாப்கின் தயாரிக்க முடிவு செய்தோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த நாப்கின்கள் 2 ஆண்டுகள் வரை இருக்கும், இவற்றை 120 முறை வரை மீண்டும் பயன்படுத்தலாம். மேலும் 199 ரூபாய்க்கு இரண்டு நாப்கின்கள் விற்க உள்ளோம்" எனவும் கூறினார்.

பருத்தி துணியிலிருந்து நாப்கின்கள்:




கோவையில், தையல் தொழிலில் ஈடுபட்டு வந்த இஷானா என்னும் பெண்,  பருத்தித் துணியிலிருந்து நாப்கின்களை உருவாக்கி விற்பனை செய்துவருகிறார். இதுபற்றி அவர்கூறுகையில், "நம் உடலை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டும். பருத்தித் துணியில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின்கள் எளிதில் மக்கும் தன்மையுடன் இருக்கிறது. அத்துடன், இதனை பயன்படுத்திவிட்டு மீண்டும் துவைத்து உபயோகிக்கலாம். இந்தவகையான நாப்கின்களை பயன்படுத்துவதால் நம்முடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது" என்றார்.

இயற்கை நாப்கின்களின் நன்மைகள்:


> இயற்கையான நாப்கின்களில் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மாறாக, வாழை நார் மற்றும் பருத்தித் துணிகளால் தயாரிக்கப்படுவதால் எளிதில் மக்கும் திறனைக் கொண்டது. சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்காது.

> முக்கியமாக, வேதிப்பொருட்கள் எதுவும் கலக்கவில்லை என்பதால் நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

> செயற்கை நாப்கின்களுக்கு செலவிடும் தொகையைவிட இதற்கு செலவிடும் தொகை குறைவு.

எந்தன் உளறல்: அறிவியல் எந்த அளவுக்கு நம்மை முன்னேற்றி இருக்கிறதோ அதே அளவில் சுற்றுச்சூழலை பாதித்திருக்கிறது. அதனை பாதுகாப்பது நம் தலையாய கடமை மட்டுமல்லாது அடுத்த சந்ததிகளுக்கு பாதுகாப்பான உலகை விட்டுச்செல்வது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆதலால், அனைத்திற்கும் செயற்கையையே சார்ந்திராமல் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ளவேண்டும். அரசும், இந்த மாதிரியான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோரை அங்கீகரித்து மக்களுக்கு பயன்படும் வகையில் உதவிசெய்திட வேண்டும்.

நன்றி,
ஊமை இளைஞன்

Friday 11 October 2019

மொபைல் செயலி (App) மூலம் வைட்டமின் குறைபாட்டை அறியலாம்!


நம் உடலில் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரும் நம்மை பரிசோதித்துவிட்டு, உங்களுக்கு ஊட்டச் சத்துக்குறைபாடு உள்ளது ஆதலால் நல்ல வைட்டமின் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுங்கள் என்று கூறுவார். அத்துடன், வைட்டமின் மாத்திரைகளை மருந்துச் சீட்டில் எழுதித் தருவார். மருத்துவமனையின் வசதிக்கேற்ப கட்டணத்தையும் செலுத்திவிட்டு மாத்திரைகளை வாங்கிவருவோம். இந்த நிலை தற்பொழுது மாறவுள்ளது. ஆம், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களின் வருகைக்குப் பின்னர், செல்போன்கள் மனித வாழ்வியலின் அங்கமாக செயல்படுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிந்துகொள்ளவும், தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் பயன்பட்டுவந்த செல்போன்களைக்கொண்டு வைட்டமின் குறைபாட்டினைக் கண்டறியும் செயலி (APP) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

வைட்டமின் குறைபாடு:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தால் உணவின் தேவை மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. கலப்பட உணவுகளால் கிடைக்கும் உணவும் சத்தானதாக இருப்பதில்லை. கலப்பட உணவை உட்கொள்ளும்போது உடலின் ஊட்டச்சத்துக்கள் குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகவேண்டியிருக்கிறது. உலகில் வைட்டமின் குறைபாடுகளால் 2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிபேர் ஜிங்க் வைட்டமின் குறைபாட்டால் உயிரிழந்துள்ளனர். இரும்பு மற்றும் கால்சியம் வைட்டமின் குறைபாட்டால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் இறக்கின்றனர். இந்த வைட்டமின் குறைபாடுகளை மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்வதில் இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்ட-கேம் (Vita - Cam)


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டிலுள்ள அஜ்மன் என்னும் பல்கலைக்கழகத்தில் பயிலும் அஹமத் சைப், முகமத் ஐட் காசீம், வெஸ்ஸம் ஷெஹிப் மற்றும் சைபிதின் ஓ.எஸ். அல்ஹகாயினி என்னும் மருத்துவ மாணவர்கள் இணைந்து உடலின் கண், நாக்கு, உதடுகள் மற்றும்  நகங்களை படமெடுத்து (Photos) அதன்மூலம் உடலிலுள்ள வைட்டமின் சத்துக்குறைபாடுகளை உடனடியாக அறிந்துகொள்ளும் செயலியை வடிவமைத்துள்ளனர். அத்துடன், இந்த செயலிமூலம் வைட்டமின் குறைபாட்டை சரிசெய்வதற்கு என்ன செய்யவேண்டும்? என்னென்ன சாப்பிடவேண்டும்? என்ற தகவல்களையும் பெறமுடிகிறது. இந்த செயலிக்கு வைட்ட-கேம் (Vita - Cam) அதாவது வைட்டமின் கேமரா (Vitamin - Camera) எனப்பெயரிட்டுள்ளனர். இந்த செயலியை உருவாக்கியதற்கு அவர்களுக்கு AED 50,000 (இந்திய மதிப்பில் ரூ. 966,920.30) பரிசாக வழங்கப்பட்டது.

வைட்ட-கேம் செயல்பாடு:


முதலில் வைட்டமின் குறைபாடுகள் மற்றும் அதன் அறிகுறிகளின் மாதிரிகள் (புகைப்படங்கள்)சேகரிக்கப்படுகிறது. அதாவது, வைட்டமின் குறைபாடுள்ள நபரின் கண், நாக்கு, உதடுகள் மற்றும் நகங்களின் அமைப்பு, வடிவம், நிறம் அல்லது தோற்றம் போன்றவை சேகரிக்கப்படுகிறது. படமெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பின் புகைப்படத்தையும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்து பிரித்தெடுக்கப்படுகிறதுபின்னர், பிரித்தெடுக்கப்பட்ட மாதிரிகளின் தன்மைக்கேற்ப அவர்களின் வைட்டமின் குறைபாடுகள் திரையில் தோன்றுகிறது. மேலும், வைட்டமின் குறைபாட்டின் தன்மைக்கேற்ப அவர்கள் என்னென்ன உணவு எடுக்கவேண்டும்? என்ற தகவலைக் கொடுக்கிறது. உதாரணத்திற்கு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கீரைகள் சாப்பிட வேண்டும் போன்ற தகவல்களை வழங்குகிறது.

வைட்ட-கேம் செயலியின் எதிர்கால திட்டங்கள்:

தற்போது உள்ள செயலியின் மூலம் எப்படி குணப்படுத்துவது? என்னென்னெ சாப்பிடவேண்டும்? போன்ற தகவல்கள் மட்டுமே அடங்கியுள்ளது. வரும் காலங்களில், மருத்துவத்துறையில் சிறந்த வல்லுநர்களை செயலியுடன் இணைத்து அவர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளுமாறு செயலியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கென குறைந்த கட்டணத்தை வசூல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

நன்றி,

  • ஊமை இளைஞன் 

Wednesday 9 October 2019

ஆபத்தில் முடிந்த அறிவுரை - சிறுகதை


நம் வாழ்வில் சந்திக்கும் சில பிரச்சனைகளில் முக்கியமானது "அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறி, அதில் தாமே மாட்டிக்கொள்வது". அதைப்பற்றிய ஒரு சிறுகதையை இங்கு காண்போம். இந்தக் கதையை சிறுவயதில் நீங்கள் கேட்டிருக்கலாம். அக்கதையுடன் எனது சிறிய கற்பனையை சேர்த்துள்ளேன். பிடித்திருந்தால் பகிருங்கள்:

அடர்ந்த ஒரு காட்டிலே நெடிய மரங்கள். மரத்திலே பல கிளைகள். கிளைகளின் இடையிலே பல கூடுகள். கூட்டுக்குள்ளே பல வண்ணப் பறவைகள். பறவைகளிலே, தூக்குனங்குருவி ஒன்று கூட்டுக்கு வெளியே தன்
சிறகுகளை சிற்றலைகளாய் சிறகடித்துக்கொண்டிருக்கிறது ஒருபுறம்.

அதே அடர்ந்த வனத்திலே, வகைவகையான விலங்குகள் விதவிதமான ஒலிகளுடன். ஊரும் பாம்புகள், மேயும் மான்கள். மான்களை வேட்டையாடிடும் சிங்கங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள். அவைகள் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சிகளை ருசிக்க காத்திருக்கும் ஓநாய்கள், கழுகுகள் மறுபுறம்.

இவ்விரண்டு பகுதிகளுக்கிடையே மரங்களிலும் , நிலங்களிலும் தாவிக் குதித்துக்கொண்டிருக்கிறது குரங்கொன்று. குரங்கிற்கு குடிலில்லை. குடில் இருக்கவும் அதற்கு அவசியமில்லை.

வெண்மேகம் கருக்கிறது. மஞ்சள் வெயிலும் மறைகிறது. சூறைக்காற்று திக்குமுக்காடி சுதந்திரமாய் திரியுது. அரைமணித்துளி கடந்தபின்னே ஆர்ப்பரித்து ஆனந்தமாய் அடர்ந்த காட்டை அடைகிறது மழைத்துளி.

சிறுதுளியொன்று தூக்குனங்குருவிமீது விழுகையில் பதறிப்போய் பனைமரத்தின் மேலுள்ள தன் கூட்டுக்குள் சென்றது. சிங்கங்களும், சிறுத்தைகளும் அதனதன் குகைக்குள் சென்றன. ஊரும் பாம்பும் தாவும் மான்களும் தத்தம் இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டன. அதுவரை  துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த குரங்குகள் மட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தது.

கூட்டிற்கு வெளியே முதலில் தன் அலகையும் பின்னர் தலையையும் நீட்டிய அந்த குருவி, மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த குரங்கொன்றை கண்களால் கண்டது. கண்டதும் அதன்மேல் கரிசனம் கொண்டது.

குரங்கை நோக்கி, "குதூகலித்த நாட்களில் கொஞ்சம் செலவிட்டு குடில் அமைத்திருந்தால், மழையில் நனைந்து குளிரிலிலே நடுங்கி வேதனையுறுவதை தவிர்த்திருக்கலாமல்லவா? இம்மழை பொய்த்து பின்வரும் கோடை காலத்தில், தங்களின் குதூகலத்தை கொஞ்சம் ஒதுக்கி குடில் அமையுங்கள். எதிர்வரும் காலத்தில் இன்பமாய் வாழுங்கள்" எனக்  கூறிக்கொண்டிருக்கும்போதே பேரிடி வந்து பிரளயத்தை உண்டாக்கியது. குருவியும் கூட்டிற்குள் சென்றது. குரங்கு சிந்தனையில் மூழ்கியது.

மழை நின்றது
மதி வந்தது - உடன்
உயிர்களுக்கு உறக்கமும் வந்தது.

விடியும் நேரம் ....

கதிரொளி கிளம்பியது
காரிருள் விலகியது
உறக்கம் கலைந்தது
பறவைகள் பறந்தன
ஊர்வன ஊர்ந்தன
விலங்குகள் நடந்தன
உணவின் தேடலை தொடங்கின சிந்தனையின் மூழ்கிய குரங்கைத் தவிர...

"சின்னஞ்சிறு குருவி எனக்கு அறிவுரை கூறுவதா?" என எண்ணத் தொடங்கியது.

கண் விழித்தது
கர்வம் கொண்டது
மரத்தின்மீது ஏறத்தொடங்கியது.

உச்சியை அடைந்தது
இடக்கை மரத்தில்
வலக்கை கூட்டில்
எறிந்தது கூட்டை
அஃது அடைந்தது காட்டை.

மீண்டுமொரு மாலைப் பொழுது...

இரைதேடச் சென்ற குருவி தன்னலகில்
தானியங்களை சுமந்து வந்தது.

மரத்தின் உச்சியை அடைந்தது
அடைந்தபின், உருக்குலைந்து நின்றது.

மரத்தைச் சுற்றிலும் மணிக்கணக்காய் சுற்றியது.

ஏளனச் சிரிப்போன்று எதிர்த்திசையில் கேட்டது!

யாரென்று பார்த்தது.

மரத்திலே மந்தியொன்று மதிமழுங்கிய  நிலையில்...

கனியளவு குருவிக்கும் காடளவு கோபம் வந்தது. தன்னிலை நினைத்து, "குண்டுமணிக் கண்ணிலும் குடங்குடமாய் கண்ணீர் வந்தது".

கோபம் கலந்த சோகத்தில்,"ஆனதுக்கு புத்தி சொன்னா அறிவுண்டு நெனவுண்டு, இந்த ஈனனுக்கு புத்தி சொல்லி இல்லறத்தை இழந்துவிட்டேனே" எனக் கூறியது.

அதாவது, நாம் சொல்லக்கூடிய அறிவுரையை சரியான நபர்களிடம் சொல்லவேண்டும். அத்துடன் அதனை கேட்டு நடப்பவராக இருத்தல்வேண்டும். நாம் சொல்லக்கூடிய அறிவுரையால் நமக்கு துன்பம் ஏற்படாமல் இருத்தல்வேண்டும் என்பதே இக்கதையின் மையக்கருத்து.

நன்றி,
ஊமை இளைஞன் 

Saturday 28 September 2019

நிலுவையில் 1.66 இலட்சம் பாலியல் வழக்குகள் - இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு!


சமீபத்தில் வெளிவந்த ஆய்வறிக்கையொன்று இந்திய தேசத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், இன்னும் 1.66 இலட்சத்திற்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் உள்ள 389 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 - க்கும் மேலான பாலியல் வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், இந்த வழக்குகள் அனைத்தும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழுள்ள வழக்குகள் எனவும் தெரிவித்துள்ளது.

போக்ஸோ சட்டம் (POCSO)


கடந்த 2012 ஆம் ஆண்டு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக (The Protection of Children from Sexual Offenses) உருவாக்கப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களை இங்கு காண்போம்:

> பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகள் (ஆண்/பெண்) பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானால், இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்படும்.

> இந்த சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் விதிப்படி, குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவருக்கு, குறைந்தபட்ச தண்டனையாக 7 வருட சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 5 மற்றும் 6 ஆம் விதிப்படி, குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர், குழந்தையின் பெற்றோர், பாதுகாவலர், காவல்துறையை சார்ந்தவர் அல்லது ஆசிரியராக இருப்பின், குறைந்தபட்ச தண்டனையாக 10 வருட சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 7 மற்றும் 8 ஆம் விதிப்படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை (private parts) தொடுவது அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட வற்புறுத்துவது போன்ற குற்றங்களுக்கு, குறைந்தபட்ச தண்டனையாக 3 வருட சிறையும், அதிகபட்சமாக 8 வருட சிறை தண்டனையும் அளிக்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 9 மற்றும் 10 ஆம் விதிப்படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை (private parts) தொடுவது அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட வற்புறுத்துவது போன்ற குற்றங்களை செய்தவர் பெற்றோர், பாதுகாவலர், காவல்துறையை சார்ந்தவர் அல்லது ஆசிரியராக இருப்பின், குறைந்தபட்ச தண்டனையாக 5 வருட சிறையும், அதிகபட்சமாக 7 வருட சிறை தண்டனையும் அளிக்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 11 மற்றும் 12 ஆம் விதிப்படி, குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, போன்களில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியலுக்கு அழைப்பது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 13 மற்றும் 14 ஆம் விதிப்படி, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது போன்ற குற்றங்களுக்கு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 18 ஆம் விதிப்படி, குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

> பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பவருக்கு, குற்றத்தினை செய்தவருக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை வழங்கப்படும்.

> இந்த சட்டத்தின் கீழ், ஒருவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டால், பாதிப்புக்குள்ளானவர் குற்றத்தை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்தான் தவறு நடக்கவில்லை என நிரூபிக்கவேண்டும். அத்துடன், வழக்குத் தொடரப்பட்ட சிறுவர்/சிறுமியரை விசாரிக்கும்போது, காவல்துறையினர் சீருடையில் இருக்கக்கூடாது மற்றும் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக்கூடாது.

> பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவர்/சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல்துறையும் வெளியிடக் கூடாது‌. அத்துடன், இந்த வழக்குகள் ஒரு வருடத்திற்குள் விரைந்து முடிக்கவேண்டும்.

சிறப்பு நீதிமன்றங்கள்:


இதுவரை நிலுவையில் உள்ள ஒரு இலட்சத்து அறுபத்து ஆறாயிரம் (1.66 இலட்சம்) வழக்குகளை விரைந்து முடிக்க நாடு முழுவதும் சுமார் 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் புதியதாக அமைக்கப்படுகின்றன. நீதி மன்றத்தின் எண்ணிக்கையானது, அந்தந்த மாநிலத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப்ப் பொறுத்து அமையும். இதன்மூலம், ஆண்டொன்றுக்கு ஒரு நீதிமன்றத்தில் 165 வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்:



அண்மையில், தாமஸ் ரியூட்டர்ஸ் பவுண்டேசன் (Thomas Reuters Foundation) என்னும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், 2018 ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் முறையே ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா நாடுகள் உள்ளன.

உலகிற்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த நாடு, பெண்களை தெய்வமாக கருதும் நாடு, பாயும் நதிகளுக்கு பெண்களின் பெயரைச்சூட்டி வணங்கிடும் நாடு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தில் உள்ளதென்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தலைகுனிவாகத்தான் எண்ணவேண்டும்.

கடுமையான சட்டங்கள்:


சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது, "பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கவேண்டும்" என்ற கருத்திற்கு ஆதரவுகள் மேலோங்கி நிற்கும். ஆனால், உண்மையில் தூக்கு தண்டனை ஒரு தீர்வா என ஆராய்ந்தால் நிச்சயம் தீர்வாகாது. ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற சட்டத்தினால், அனைவரும் ஹெல்மெட் அணிந்துவிட்டார்களா என்ன? ஆக, கடுமையான சட்டங்கள் பொதுவெளியில் மட்டுமே தவறுகளை குறைக்குமே தவிர ஒருபோதும் குற்றம் நடவாமல் இருக்காது. 

பாலியல் குற்றங்கள் முற்றிலும் இல்லாமல்போக என்ன செய்யவேண்டும்?

> பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் பாலியல் கல்வியை பள்ளிக்கல்வியிலிருந்தே இருபாலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

> பெண், காம இச்சை போக்கும் இயந்திரமல்ல தம்மைப் போன்றதொரு மனித உயிரே என ஆண்கள் உணர்ந்திட வேண்டும்.

> ஆண் பெண் பாகுபாடற்ற சமூகத்தை அமைத்திடல் வேண்டும். 


நன்றி,
ஊமை இளைஞன் 

Wednesday 25 September 2019

டோல்கேட்டில் கொடுக்கப்படும் இரசீதில் (Receipt) உள்ள பயன்கள்


நாம் நமது காரிலோ அல்லது வேனிலோ நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது இடையே அமைந்துள்ள சுங்கச்சாவடியில் (டோல்கேட்) கட்டணம் செலுத்தவேண்டும். இந்த சுங்க கட்டண வசூலுக்கு அனைத்து மக்களிடமும் எதிர்ப்பு உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த சுங்க கட்டணங்கள் எதற்காக வசூலிக்கிறார்கள் என்பது இங்கு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாருங்கள் அதைப்பற்றி இங்கு காண்போம்.

சுங்கச்சாவடிகள்:

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு, சுங்கசாவடிகள் அமைத்து அதன்வழியே கடந்துசெல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சாலைகளை எந்த கட்டுமான நிறுவனம் கட்டுகிறதோ அந்த கட்டுமான நிறுவனங்களுக்கே அரசு லீசுக்கு விடுகிறது. சுங்கச்சாவடிகளை லீசுக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தேவைப்பட்டால் சுங்கக் கட்டணங்களை 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியா முழுவதும் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன.

வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் மாறுபடும். இந்த கட்டணமானது, சாலையின் அமைப்பு, சாலையின் அகலம், அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள், கழிப்பிட வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தொலைபேசி முதலியவற்றை கணக்கில்கொண்டு வசூலிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடிகளின் விதிமுறைகள்: [நன்றி: தினகரன் நாளிதழ்]

1) கடந்த, 2008ல் திருத்தி அமைக்கப்பட்ட, சுங்க கட்டண சட்ட விதிகளின்படியே, கட்டணம் வசூலிக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இடையே குறைந்த பட்சம், 60 கி.மீ., இடைவெளி இருக்க வேண்டும்.

2) ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்தலாம். 2008ம் ஆண்டுக்கு முன் அமைத்த சாலைகளுக்கு, ஒரு ரூபாய்; அதன்பின் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு, ஐந்து ரூபாய் என, கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.

3) சாலையில், 75 சதவீதம் விரிவாக்கப் பணியைமுடித்தபிறகே, சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டு கட்டணம் முழுவதையும் வசூலித்த பின், கட்டணத்தை, 40 சதவீதமாக குறைக்க வேண்டும்.

4) விதிமுறையை மீறி, அதிக எடை ஏற்றிச்செல்லும் வாகனங்களிடம், 10 மடங்கு அபராதம் வசூலிக்க வேண்டும். அதிக எடை ஏற்றிச்செல்ல, எந்த வாகனத்தையும்அனுமதிக்க கூடாது.

5) வாகன ஓட்டுனர்கள், பயணிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

6) உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.

சுங்கச்சாவடி ரசீது:

சுங்கச்சாவடியில், வாகனத்திற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணமானது சாலைகளை பராமரிப்பதற்கு மட்டுமல்ல. வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்கு வழங்கப்பட்ட இரசீதைக்கொண்டு பின்வரும் உதவிகளை பெறலாம்:

1) நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ அல்லது அவசர மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்பட்டாலோ, இரசீதின் பின்பக்கம் உள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டு மருத்துவ அல்லது ஆம்புலன்ஸ் வசதியினைப் பெறலாம்.

2) நெடுஞ்சாலையில் சென்ற வாகனம் பழுதாகியோ அல்லது பஞ்சராகி நின்றாலோ, அதிலுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால், வாகனத்தை பழுதுபார்க்க விரைந்து ஆட்கள் வந்துவிடுவார்கள். அத்துடன், அது அவர்களின் கடமையாகும்.

3) நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் வாகனம் நின்றுவிட்டால், அதிலுள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டால் 5 முதல் 10 லிட்டர் வரை பெட்ரோல் அல்லது டீசலைக் கொண்டுவந்து தருவார்கள். இதற்கு நாம் தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆனால், இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிவதில்லை.அதனாலேயே, பலர் இதனை எதிர்க்கிறார்கள். அதற்காக, இதனை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. மக்கள் ஒரு திட்டத்தை எதிர்க்கும்போது அல்லது அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அதன் நன்மை மற்றும் தீமைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

அனுமதி இலவசம்:


சுங்கச்சாவடியில், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்தவர்கள் செல்லும் வாகனங்கள் (குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத்தலைவர், முதலமைச்சர், ஆளுனர், காவல்துறை, நீதிபதிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் அடங்குவர்) இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.

சில நேரங்களில் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தங்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டி சுங்கச்சாவடிகளில் உள்ள அலுவலர்களிடம் தகராறு செய்வதை ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் கண்டிருப்போம். ஆனால், அவர்களின் செயலுக்கு எந்தவொரு அரசியல் தலைவரிடமிருந்தும் கண்டிப்போ அல்லது அறிவிப்போ வந்ததில்லை. கடைசிவரைக்கும் போராடி கட்டணத்தை சரியாக செலுத்துவது சாமானியர்கள் மட்டுமே.

நன்றி,
ஊமை இளைஞன்

Saturday 21 September 2019

மனிதனின் சிறுநீரிலிருந்து பயிர்களுக்கு உரம்


மனிதனின் உணவுத்தேவை அதிகரித்து வரும் நிலையில் அதன் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான விவசாயக் குடிமக்கள் விவசாயத்தை தவிர்த்து மாற்று வேலைகளுக்கு சென்றுவிட்டது ஒரு காரணமாக இருந்தாலும், அவர்கள் விவசாயத்தை தவிர்த்ததற்கு முக்கிய காரணம் சரியான விளைச்சலின்மை. பண்டைய காலங்களில் மண்ணின் உரமாக இருந்தது செடி கொடிகள், இலைகள், தழைகள் மற்றும் கால்நடைக் கழிவுகள் மட்டுமே. இன்றோ, விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் கொடுக்கப்படும் யூரியா போன்ற பூச்சிக்கொல்லி உரங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தி மண்ணானது மலடாகும் தன்மைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையே, இயற்கை ஆசான் நம்மாழ்வார் அவர்கள், "மண்ணின் வளம் மனித மற்றும் மாட்டுக் கழிவுகளால் மேம்படும்" என்றார். அதற்கு ஆதரவாக, சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்திற்குப் பதிலாக, மனிதனின் சிறுநீரிலிருந்தே இயற்கை உரத்தை தயாரித்து பயிர்களுக்கு அளிக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

சிறுநீரில் உரம்:

சமீபத்தில், ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு (இ.ஓ.ஓ.எஸ்.,) குளியலறை கலன்களை தயாரிக்கும் லாபென் மற்றும் சுவிட்சர்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி.) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து மனிதக் கழிவுகளிலிருந்து இயற்கை உரத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உரம் தயாரிப்பதற்கு தேவைப்படும் நைட்ரஜன் வாயுவை பிரித்தெடுக்க அதிக ஆற்றல் தேவைப்படும். இதற்கு மாற்றாக வீணாக வெளியேறும் சிறுநீரிலிருந்து நைட்ரஜனை பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.  மனித சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதிலிருந்து பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை பிரித்தெடுத்து அதிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இ.ஓ.ஓ.எஸ் மற்றும் லாபென் அமைப்புகள் இணைந்து, கழிப்பிடங்களில் உள்ள மனிதக் கழிவுகளிலிருந்து சிறுநீரை மட்டும் பிரித்தெடுக்க "கலன்" ஒன்றை தயாரித்தனர். இந்த கலனில் ஒருவர் சிறுநீர் கழித்ததும், அதனை சுத்திகரிக்க 1.5 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

2) இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி. அமைப்பு கார்பன் வடிகட்டிகளை பயன்படுத்தி, கலனிலிருந்து பிரித்தெடுத்த சிறுநீரில் உள்ள கிருமிகளை நீக்கினர். கிருமிகள் நீக்கிய சிறுநீரிலிருந்து பயிர்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் மீண்டும் வடிகட்டப்பட்டு திரவ வடிவிலான உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் உரத்திற்கு 'ஆரின்' என பெயரிட்டனர்.

இந்த முறையைப் பயன்படுத்தி, 1000 லிட்டர் சிறுநீரைக் கொண்டு சுமார் 100 லிட்டர் வரையிலான ஆரின் உரத்தை உற்பத்தி செய்யலாம்.

நிதின் கட்கரி:
"சிறுநீரில் அதிகளவு நைட்ரஜன் உள்ளதால் அதனை வீணாக்காமல், நாட்டின் ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர் வங்கிகள் அமைத்து அதன்மூலம் விவசாயப் பயிர்களுக்குத் தேவையான உரங்களை அளிக்கலாம். இதனால், நாட்டின் யூரியா இறக்குமதி பாதியாகக் குறையும்" என்று முன்னாள் பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், "தனக்கு சொந்தமான நிலத்தில், சிறுநீரில் தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து அதனை பயிர்களுக்கு அளிக்கும்போது, அது மற்ற பயிர்களைக் காட்டிலும் நன்றாக வளர்ந்து மகசூல் தந்ததாக" தெரிவித்தார்.

சிறுநீர் வங்கிகள்:
இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 50 இலட்சம் மெட்ரிக் டன் வரை உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. அத்துடன் உள்நாட்டிலும் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குமாற்றாக, பேருந்து, தொடர்வண்டி மற்றும் விமான   நிலையங்களில் சிறுநீர் வங்கிகளை தொடங்கி அதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு உரமாக வழங்கலாம். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் பயிர்களுக்கும் இயற்கையான உரங்கள் கிடைக்கும்.

நன்றி,
ஊமை இளைஞன் 

Friday 20 September 2019

சாதாரண சிகரெட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாயைக் கூட்ட இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளதா?




மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இ- சிகரெட்டை இந்தியாவில் தடை செய்வதாக அவசரச் சட்டம் ஒன்றை நிறுவியுள்ளார். அதன்படி, இ- சிகரெட் உற்பத்தி செய்தல், விநியோகம் செய்தல், பயன்படுத்துதல் மற்றும் வைத்திருத்தல் முற்றிலுமாக இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. இங்கு, சாதாரண சிகரெட்டுகளையும் தடை செய்யாமல் இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது.

இ- சிகரெட்:
இ- சிகரெட் என்பது எலக்ட்ரானிக் நிக்கோட்டின் டெலிவரி சிஸ்டம்ஸ் (Electronic Nicotine Delivery Systems) என அழைக்கப்படுகிறது. பேனாவைப் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த இ- சிகரெட்டில் புகையிலை திரவம் (Nicotine), கரையும் தன்மை கொண்ட வாசனை திரவியங்கள் மற்றும் பேட்டரி முதலியன பொருட்கள் அடங்கியிருக்கும்.

இந்த சிகரெட்டினை வாயில் வைத்து உறிஞ்சும்போது இ- சிகரெட்டில் உள்ள சென்சார் செல்படத்தொடங்கி அதிலுள்ள புகையிலை திரவத்தை ஆவியாக்கி வெளியேற்றுகிறது. வெளியேறும் ஆவியானது மனிதனின் அட்ரினலின் ஹோர்மோனைத் தூண்டி, மூளையில் உள்ள டோபமைன் என்னும் இரசாயனத்தை சுரக்கிறது. இந்த இரசாயனம்தான் மனிதனுக்கு இன்ப உணர்வைத் தூண்டுவதால், புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்தலை தொடர்ந்து செய்கின்றனர்.

இ- சிகரெட் விற்பனை:
இ- சிகரெட் விற்பனை நாளுக்கு நாள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், அதன் கண்கவரும் வடிவங்களிலான அமைப்பு, ரசனைக்கேற்ற வாசனை, நோய்களை ஏற்படுத்தாது மற்றும் சாதாரண சிகரெட்டுகளுக்கு மாற்று இந்த இ-சிகரெட்டுகள் எனக்கூறப்படும் பொய் செய்திகள். அத்துடன், இந்த சிகரெட்டுகளில் வாசம் வராது ஆனால் அதிக நிக்கோட்டின் இருப்பதால் அருகிலிருப்பவர்களை வெகுவாக பாதிக்கிறது

சாக்லேட், ஸ்ட்ராபெரி, புதினா போன்ற150 க்கும் மேற்பட்ட சுவைகளில் 400 பிராண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த இ - சிகரெட்டின் ஆரம்ப விலை ரூ. 300 ஆகவும் அதிகபட்சமாக ரூ.4000 வரையிலும் விற்கப்பட்டு வந்தது. இ - சிகரெட்டின் தடையால், மத்திய பட்ஜெட்டில் ரூ.2028 கோடி ரூபாய்வரை தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் பொதுநலம் கருதி தடைசெய்வதாக என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தண்டனை விபரம்:
இ- சிகரெட் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறுவோருக்கு கீழ்கண்டவாறு தண்டனைகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டத்தின் படி, இ - சிகரெட் தயாரிப்பது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது, விற்பனைசெய்வது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்வதுஆகியவை குற்றச்செயலாக கருதப்படும்

1) இந்தத் தடையை முதன் முதலில் மீறுவோருக்கு, ஒராண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம்
2) இரண்டாவது முறை அல்லது தொடர்ந்து மீறுவோருக்கு மூன்றாண்டு சிறை அல்லது ரூ.5 இலட்சம் அபராதம்
3) இ- சிகரெட்டை சேமித்து வைத்திருபோருக்கு ஆறு மாதம் சிறை அல்லது ரூ. 50 ஆயிரம் அபராதம்.
4) இ- சிகரெட் வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தால், யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின்பேரில் விசாரிக்கலாம். இதற்குமுன், சந்தேகத்தின்பேரில் விசாரிக்க தடை இருந்தது.

சாதாரண சிகரெட்டுகளுக்கு தண்டனை இல்லை:
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் இந்த இ-சிகரெட்டுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளதாகவும்,. இந்த சிகரெட்டுகள் உடலுக்கு அதிக கேடு விளைவிக்கிறது. அதனால் தடை விதிப்பதாக மத்திய அமைச்சர் கூறினார். இ-சிகரெட்டுகளுக்கு தடை விதித்திருக்கிற அரசு ஏன் சாதாரண சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கவில்லை? என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது. 

ஒரு நிறுவனத்தால், மக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படுமாயின், அதனை நன்கு விசாரித்து உண்மையெனில் அந்தத் நிறுவனத்தை தடை செய்யவேண்டும். இது அரசின் தலையாய கடமையாகும். ஆனால், அரசே இதுபோன்ற திட்டங்களை ஆதரிக்கும் வண்ணம் சில நேரங்களில் செயல்படுகிறது. டாஸ்மாக்கினால் எத்தனையோ தாய்மார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. மக்களும் போராட்டம் நடத்துகிறார்கள். அத்துடன், 70 சதவீத சாலை விபத்துக்கள் மது அருந்தியதால் நடந்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் மத்திய அல்லது மாநில அரசுகள் இதுவரை மதுபானங்கள் விற்பனையை தடை செய்வதுபற்றி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இந்தநிலையில், "சாதாரன சிகரெட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாயைக் கூட்டுவதற்காக இ-சிகரெட்டுகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது" என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உண்மையில், மக்கள் மீது அக்கறைகொண்ட எந்தவொரு அரசும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அனுமதிக்காது. அதன் ஒரு பகுதியாக இன்று இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து போதைப் பொருட்களும் தடைசெய்யப்படவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது. 



நன்றி,
ஊமை இளைஞன் 

Thursday 19 September 2019

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க "கழிவுநீரிலிருந்து குடிநீர்"


டிஸ்கவரி  தொலைக்காட்சிகளில் வரும் மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பியர் கிரில்ஸ் என்னும் தொகுப்பாளர் பசி மற்றும் தாகத்தைப் போக்க சிறுநீரை அருந்துவார். பலருக்கு அது அருவருப்பையும் சிலருக்கு நகைப்பையும் உண்டாக்கும். இந்தநிலையில், சமீபத்தில் தமிழக அரசிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. அந்த அறிக்கையில் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் படிப்படியாக அமலுக்கு வரும் என அறிவித்திருக்கிறது.

கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம்:

கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் நம் நாட்டிற்கு புதிதல்ல. ஏற்கெனவே 1980களில் கழிவுநீரை குடிநீராக்கி சிபிசிஎல், எம்எஃப்எல் போன்ற நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியம் வழங்கியது. அதன் நீட்சியாக, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் இந்த வேளையில், மக்களுக்கும் அதுபோன்ற திட்டத்தை பயன்படுத்தி குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதலில் சென்னையில் அமலுக்கு வருகிறது.

சென்னை மக்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் 1200 மில்லியன் லிட்டர் தண்ணீரும், குறைந்த பட்சமாக 830 மில்லியன் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. இதில் 50 சதவீத நீர் எரிகளிலிருந்தும், 25 சதவீத நீர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாகவும், மீதமுள்ள 25 சதவீத நீர் நிலத்தடி நீரிலிருந்தும் கிடைக்கிறது. ஆனால், அனைத்து மக்களுக்கும் நீர் ஆதாரம் சரியாக கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்பதே உண்மை.

சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 550 மில்லியன் லிட்டர் கழிவுநீராக வெளியேறுகிறது. இதில் 1 சதவீதம் மட்டுமே திடக்கழிவு நீர். ஆகவே, இந்த நீரை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொடுத்தால், சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தேவைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு முறை:

1) கழிவுநீர் சுத்திகரிப்பில், முதலில் கழிவுநீரிலுள்ள திடப்பொருட்கள் நீக்கப்படும்.
2) சிறுதுகள்கள் மற்றும் நுண்கிருமிகள் நீக்கப்படும்.
3) மூன்றாவதாக, அல்ட்ரா பில்ட்ரேஷன் (Ultra Filtration) முறைமூலம் அனைத்து துகள்களும் நீக்கப்பட்டு குளோரின் மற்றும் ஓசோன் சேர்க்கப்படுகிறது, இந்த நீரானது இந்தியாவின் IS 10500 தரத்தைக் கொண்டதாக உள்ளது. இருப்பினும், இந்த நீரானது குடிநீர் பயன்பாட்டிற்கு கொடுக்காமல், ஏரிகள் மற்றும் குளங்களில் விடப்பட்டு, மீண்டும் சுத்திகரிக்கப்படுகிறது.

சென்னையில், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோயம்பேடு - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
நெசப்பாக்கம் - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
பெருங்குடி - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
கொடுங்கையூர் - 80 மில்லியன் லிட்டர் குடிநீர்

மேற்கண்ட கணக்கின்படி, சுமார் 260 மில்லியன் லிட்டர் சுத்தமான நீரை பெறலாம். இந்த திட்டங்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டுக்கும் முடிக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

திட்டத்தின் மதிப்பு:

கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சுமார் 1400 கோடி ரூபாய் ஆகும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆகும் செலவானது, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைவிட குறைவானதாகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஆயிரம் லிட்டர் கடல்நீரை குடிநீராக்குவதற்கு ரூ. 60 செலவாகிறது ஆனால் இதேஅளவு கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.6 லிருந்து ரூ.23 வரை மட்டுமே செலவாகிறது. மேலும், இத்திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மழைநீர் சேமிப்பு:



கடல் நீரை குடிநீராக்குவது, கழிவு நீரை குடிநீராக்குவது முதலிய திட்டங்கள் மூலம் அரசுக்கு பெருமாளவு செலவு ஏற்படுகிறது. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் தண்ணீரின் தேவையும் தட்டுப்பாடும் அதற்குமேல் அதிகரித்து வருகிறது. இந்த திட்டங்கள் நன்மை பயக்குமெனினும், கடல் மற்றும் கழிவுநீரை குடிநீராக்குவதற்கு பதிலாக, மழை பெய்யும் காலங்களில் கழிவுநீரிலும், கடலிலும் வீணாகக் கலக்கும் மழைநீரை ஆங்காங்கே மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்து அந்தநீரை சேமித்து மக்கள் குடிப்பதற்கு ஏற்ற நன்னீராக்கினால் இன்னும் செலவு குறைவாகும்.

தூர்வாரப்படாமல் இருக்கும் ஏறி, குளங்களை சரியாக பராமரித்து மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேறாமல் தேக்கிவைத்தல் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை உயர்த்துவதோடு வருங்கால சந்ததிகளின் தண்ணீர்ப் பற்றாக்குறையை குறைக்கும் முன்னோடித் திட்டமாக அமையும்.

நன்றி,
ஊமை இளைஞன்