Friday 30 August 2019

​ரஷ்யாவில் நடமாடும் அணு உலைகள் அறிமுகம்


நம் நாட்டில் நடமாடும் நீதிமன்றம், நடமாடும் மருத்துவக் குழு வாகன‌ம் முதலியவற்றை பார்த்திருக்கிறோம் ஆனால் ரஷ்யாவில் முதன்முதலாக நடமாடும் அல்லது மிதக்கும் அணு உலைகளை அறிமுகம் செய்துள்ளனர். இது உலக வல்லரசு நாடுகளிடையே வரவேற்பையும் சுற்றுச்சூழல் வல்லுனர்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மிதக்கும் அணு உலைகள்:
ரஷ்யாவில் 2006 ஆம் ஆண்டு, ரோசடோம் அணுசக்தி கார்ப்பரேஷன் நிறுவனம் அகாடெமிக் லோமோனோசோவ் (Akademik Lomonosov) என்ற கப்பலில் தொடங்கப்பட்ட அணுவுலையானது, சுமார் 12 வருடங்களுக்குப்பிறகு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. நீரில் மிதக்கும் அகாடெமிக் லோமோனோசோவ் கப்பலின் எடை சுமார் 21500 டன்.  472 அடி நீளமும் 98 அடி அகலமும் கொண்ட இந்த கப்பலின்மீது இரண்டு அணுஉலைகளை அமைத்து அதன்மூலம் சுமார் 70 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 

இந்த கப்பலானது ரஸ்சியாவிலுள்ள முர்மான்ஸ் மற்றும் பெவிக் என்னும் துறைமுகங்களுக்கிடையே சுமார் 5000 கிலோமீட்டர் பயணம் செய்கிறது. இதன்மூலம் சுமார் 10000 பேர் வசிக்கும் நகர்ப்பகுதிக்கு மின்சாரம் கிடைக்கும்.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மூர்மான்ஸ்க்கிலிருந்து புறப்பட்ட இந்த கப்பலானது பெவெக் துறைமுகத்தை அடைய பருவநிலையைப் பொருத்து சுமார் 4 முதல் 6 வார காலங்கள் வரை இந்த அணு உலைக் கப்பலின் பயணம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. 

அணுஉலை புரட்சி:

இந்த அணுஉலையானது ரஷ்யாவின் ஆர்டிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ளதால் வருடம் முழுவதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அத்துடன் இந்த அணுஉலை கப்பலானது எத்தகைய இயற்கை சீற்றங்களினாலும், எதிரிகளாலும் கூட பாதிக்கப்பட வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று, பல்வேறு அணுஉலைகளை அமைத்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் முனைப்பில் ரஷ்யா உள்ளது. இது அணு உலைகள் உற்பத்தியில் பெரும்புரட்சியை ஏற்படுத்தும். 

ரஷ்யாவின் கிரீன்பீஸ் அமைப்பின் தலைவர் ரஷீத் அலிமோவ், "எந்தவொரு அணு உலையாக இருந்தாலும் அதிலிருந்து அணுக்கதிர்வீச்சு, அணுக்கழிவுகளை வெளிப்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அணுஉலையானது புயல் போன்ற இயற்கைக் சீற்றங்களிலிருந்தும் பாதுகாக்கும் அளவுக்கு தயார்செய்யப்பட்டுள்ளது" எனக்கூறினார்.

சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் அச்சம்:
நாம் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு முன் நிலையற்றதாகிவிடும். அதனால்தான் அந்நாட்டு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இந்த அணுஉலைத் திட்டத்தை முற்றிலும் எதிர்க்கின்றனர். அத்துடன், இதற்கு முன்னர் ரஷ்யாவில் நடந்த அணுசக்தி விபத்துகளை மேற்கோள்காட்டுகின்றனர்.

1) 2019-ல், ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடத்தப்பட்ட அணுக்கதிர்வீச்சு சோதனை தோல்வியில் முடிந்தது. அதில், 5 விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

2) 2019-ல், ஜூலை 1 ஆம் தேதி, லோஷாரிக் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வெடித்ததில் 14 மாலுமிகள் இறந்தனர்.

3) 2000-ல், ஆகஸ்ட் 12 ஆம் தேதி, குர்ஸ்க் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ரஷியா – நார்வே இடையே ஆர்ட்டிக் பேரண்ட்ஸ் கடலில் மூழ்கி 118 பேர் இறந்தனர்.

4) 1989 -ம் ஆண்டு, கொம்சோமொலெட்ஸ் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அதே ஷியா – நார்வே இடையே ஆர்ட்டிக் பேரண்ட்ஸ் கடலில் மூழ்கியது.

5) 1986-ம் ஆண்டு, உக்ரைன் நாட்டிலுள்ள செர்னோபில் என்ற இடத்தில் அமைந்திருந்த அணுஉலை வெடித்துச் சிதறி உலகை அதிரச் செய்தது. அணு உலை வெடித்துச் சிதறும் என்று அதுவரை யாரும் நம்பவில்லை. இந்த விபத்தால் வெகுதூரத்துக்குப் பரவிய கதிரியக்க ஆபத்து இன்றும் நீடிக்கிறது. எனவேதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிதக்கும் அணுஉலையை 'பனிக்கட்டியின் மேல் ஒரு செர்னோபில்' என வருணித்து கவலை கொள்கின்றனர்.

உண்மையில் அணுஉலை ஆபத்தா?
மிதக்கும் அணுஉலைகள் கடலில் இருப்பதால், பெருத்த இயற்கைக் சீற்றங்கள் ஏற்படும்போது நிலத்தில் இருக்கும் அணுஉலைகளை பாதுகாப்பதுபோல் நீருக்குள் இருக்கும் அணுஉலைகளை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர இயலாது.

அணுஉலையிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் மற்றும் அணுக்கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடும். அத்துடன், அதனை உண்ணும் மனிதர்களுக்கும் நோய்த்தொற்றுக்கள் ஏற்படக்கூடும்.

இதுவரை நிலங்களில் உள்ள மலைகள், நதிகளை அழித்து கட்டிடங்கள், தொழிற்சாலைகள் கட்டினார்கள். தற்பொழுது கடலையும் விட்டுவைக்கவில்லை. உலகில் வாழும் உயிர்களில் மனித இனம் மட்டுமே இயற்கை வளங்களை அழித்து வாழ்கிறது. இந்த உலகம் அனைவருக்குமானது என்பதை உணர்ந்தால் மட்டுமே மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்வான்.

நன்றி,
ஊமை இளைஞன் 

No comments:

Post a Comment