Friday 30 August 2019

​ரஷ்யாவில் நடமாடும் அணு உலைகள் அறிமுகம்


நம் நாட்டில் நடமாடும் நீதிமன்றம், நடமாடும் மருத்துவக் குழு வாகன‌ம் முதலியவற்றை பார்த்திருக்கிறோம் ஆனால் ரஷ்யாவில் முதன்முதலாக நடமாடும் அல்லது மிதக்கும் அணு உலைகளை அறிமுகம் செய்துள்ளனர். இது உலக வல்லரசு நாடுகளிடையே வரவேற்பையும் சுற்றுச்சூழல் வல்லுனர்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மிதக்கும் அணு உலைகள்:
ரஷ்யாவில் 2006 ஆம் ஆண்டு, ரோசடோம் அணுசக்தி கார்ப்பரேஷன் நிறுவனம் அகாடெமிக் லோமோனோசோவ் (Akademik Lomonosov) என்ற கப்பலில் தொடங்கப்பட்ட அணுவுலையானது, சுமார் 12 வருடங்களுக்குப்பிறகு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. நீரில் மிதக்கும் அகாடெமிக் லோமோனோசோவ் கப்பலின் எடை சுமார் 21500 டன்.  472 அடி நீளமும் 98 அடி அகலமும் கொண்ட இந்த கப்பலின்மீது இரண்டு அணுஉலைகளை அமைத்து அதன்மூலம் சுமார் 70 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 

இந்த கப்பலானது ரஸ்சியாவிலுள்ள முர்மான்ஸ் மற்றும் பெவிக் என்னும் துறைமுகங்களுக்கிடையே சுமார் 5000 கிலோமீட்டர் பயணம் செய்கிறது. இதன்மூலம் சுமார் 10000 பேர் வசிக்கும் நகர்ப்பகுதிக்கு மின்சாரம் கிடைக்கும்.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மூர்மான்ஸ்க்கிலிருந்து புறப்பட்ட இந்த கப்பலானது பெவெக் துறைமுகத்தை அடைய பருவநிலையைப் பொருத்து சுமார் 4 முதல் 6 வார காலங்கள் வரை இந்த அணு உலைக் கப்பலின் பயணம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. 

அணுஉலை புரட்சி:

இந்த அணுஉலையானது ரஷ்யாவின் ஆர்டிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ளதால் வருடம் முழுவதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அத்துடன் இந்த அணுஉலை கப்பலானது எத்தகைய இயற்கை சீற்றங்களினாலும், எதிரிகளாலும் கூட பாதிக்கப்பட வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று, பல்வேறு அணுஉலைகளை அமைத்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் முனைப்பில் ரஷ்யா உள்ளது. இது அணு உலைகள் உற்பத்தியில் பெரும்புரட்சியை ஏற்படுத்தும். 

ரஷ்யாவின் கிரீன்பீஸ் அமைப்பின் தலைவர் ரஷீத் அலிமோவ், "எந்தவொரு அணு உலையாக இருந்தாலும் அதிலிருந்து அணுக்கதிர்வீச்சு, அணுக்கழிவுகளை வெளிப்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அணுஉலையானது புயல் போன்ற இயற்கைக் சீற்றங்களிலிருந்தும் பாதுகாக்கும் அளவுக்கு தயார்செய்யப்பட்டுள்ளது" எனக்கூறினார்.

சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் அச்சம்:
நாம் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு முன் நிலையற்றதாகிவிடும். அதனால்தான் அந்நாட்டு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இந்த அணுஉலைத் திட்டத்தை முற்றிலும் எதிர்க்கின்றனர். அத்துடன், இதற்கு முன்னர் ரஷ்யாவில் நடந்த அணுசக்தி விபத்துகளை மேற்கோள்காட்டுகின்றனர்.

1) 2019-ல், ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடத்தப்பட்ட அணுக்கதிர்வீச்சு சோதனை தோல்வியில் முடிந்தது. அதில், 5 விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

2) 2019-ல், ஜூலை 1 ஆம் தேதி, லோஷாரிக் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வெடித்ததில் 14 மாலுமிகள் இறந்தனர்.

3) 2000-ல், ஆகஸ்ட் 12 ஆம் தேதி, குர்ஸ்க் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ரஷியா – நார்வே இடையே ஆர்ட்டிக் பேரண்ட்ஸ் கடலில் மூழ்கி 118 பேர் இறந்தனர்.

4) 1989 -ம் ஆண்டு, கொம்சோமொலெட்ஸ் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அதே ஷியா – நார்வே இடையே ஆர்ட்டிக் பேரண்ட்ஸ் கடலில் மூழ்கியது.

5) 1986-ம் ஆண்டு, உக்ரைன் நாட்டிலுள்ள செர்னோபில் என்ற இடத்தில் அமைந்திருந்த அணுஉலை வெடித்துச் சிதறி உலகை அதிரச் செய்தது. அணு உலை வெடித்துச் சிதறும் என்று அதுவரை யாரும் நம்பவில்லை. இந்த விபத்தால் வெகுதூரத்துக்குப் பரவிய கதிரியக்க ஆபத்து இன்றும் நீடிக்கிறது. எனவேதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிதக்கும் அணுஉலையை 'பனிக்கட்டியின் மேல் ஒரு செர்னோபில்' என வருணித்து கவலை கொள்கின்றனர்.

உண்மையில் அணுஉலை ஆபத்தா?
மிதக்கும் அணுஉலைகள் கடலில் இருப்பதால், பெருத்த இயற்கைக் சீற்றங்கள் ஏற்படும்போது நிலத்தில் இருக்கும் அணுஉலைகளை பாதுகாப்பதுபோல் நீருக்குள் இருக்கும் அணுஉலைகளை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர இயலாது.

அணுஉலையிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் மற்றும் அணுக்கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடும். அத்துடன், அதனை உண்ணும் மனிதர்களுக்கும் நோய்த்தொற்றுக்கள் ஏற்படக்கூடும்.

இதுவரை நிலங்களில் உள்ள மலைகள், நதிகளை அழித்து கட்டிடங்கள், தொழிற்சாலைகள் கட்டினார்கள். தற்பொழுது கடலையும் விட்டுவைக்கவில்லை. உலகில் வாழும் உயிர்களில் மனித இனம் மட்டுமே இயற்கை வளங்களை அழித்து வாழ்கிறது. இந்த உலகம் அனைவருக்குமானது என்பதை உணர்ந்தால் மட்டுமே மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்வான்.

நன்றி,
ஊமை இளைஞன் 

Wednesday 28 August 2019

கழிவறை இல்லை, கல்லறை செல்கிறேன்! - பெண்ணின் தற்கொலை


ஜோக்கர் படத்தில் உள்ள ஒரு காட்சியில், "கழிவறை இருக்கா, கல்யாணம் பண்ணிக்கிறேன்!" என்னும் வசனம் இருக்கும். அரசின் புதிய திட்டத்தின் மூலம் கழிவறை கட்ட அனுமதிபெற்று (உடன் கல்யாணத்திற்கு காதலியின் அனுமதியும் பெற்று) அதிகாரிகளின் அலட்சியத்தால் கழிவறை கட்டிமுடிக்கும் முன்பே கல்யாணம் முடிந்துவிடும். காதலன் காதலியை கட்டிவிடுவான் ஆனால் கழிவறையை கட்ட முடியாது. ஒருவழியாக, அரைகுறையாக கட்டிமுடித்த கழிவறைக் கட்டிடமும் சில நாட்கள் கழித்து பெய்த மழையில் நனைந்து அந்த பெண்ணின்மீது இடிந்து விழுந்துவிடும். இதுபோன்றதொரு உண்மை நிகழ்வு தமிழகத்தில், ஆனால் கழிவறைக் கட்டிடம் கட்டித் தராததால் திருமணமான பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கழிவறை இல்லை அதனால் தற்கொலை:

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஷாலினி என்பவருக்கும் சசிகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவருக்கு தற்பொழுது மூன்று குழந்தைகள். திருமணத்திற்கு முன்னரே வீட்டில் கழிவறை கட்டிமுடிக்க வேண்டுமென்பது ஷாலினியின் கோரிக்கை. ஆனால், சில காரணங்களால் கழிவறை கட்டிமுடிக்காமலேயே கல்யாணம் நடந்துவிட்டது. திருமணத்திற்குப் பின்னரும் கழிவறை கட்டிமுடிக்காததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/25/2019), கழிவறை கட்டிமுடிக்காத பிரச்சினை மீண்டும் பெரிதாக வெடித்தது. மனமுடைந்த ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனிநபர் கழிப்பறை திட்டம்:

திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், நோய்த்தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்ட குடும்பம் ஒன்றிற்கு ரூ. 12 ஆயிரம் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்தத் தொகையானது, பயனாளிகளுக்கு நேரடியாகவோ அல்லது அந்தந்த ஊராட்சியிலுள்ள வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலமாகவோ தரப்படும். ஏழைப் பொதுமக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி தங்களது வீட்டிற்கு கழிவறை கட்டிக்கொள்ளலாம். 

ஒரு அரசு எவ்வளவுதான் நல்ல திட்டங்களை அறிவித்தாலும் அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது அதிகாரிகளின் கைகளிலேயே இருக்கின்றது.  அரசின் திட்டங்கள் அனைவருக்கும்
கிடைத்துவிட்டதா என அறிவதற்கும், அதிகாரிகள் சரியாக பணிபுரிகிறார்களா என்பதை கவனிக்கவும் ஒரு குழு அமைத்தால் மக்களின் குறைகளையும் தேவைகளையும் நன்றாக அறியலாம்.

ஆளுங்கட்சியினரின் திட்டங்களில் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் எதிர்க்கட்சிகள், உண்மையில் மக்களின்மேல் அக்கறை இருக்குமானால், தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் தங்களது கட்சியின் தொண்டர்களை ஆளுங்கட்சியினரின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் பயன்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் இன்று ஒரு உயிர் பிரிந்திருக்காது.

எல்லா வீடுகளுக்கும் இண்டர்நெட் கனெக்சன்:

இந்நிலையில் தமிழக அரசானது அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லாத நிலையை அடைய அனைத்து ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் இணையதள வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இஃது தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக இருந்தாலும் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் அனைத்து மக்களுக்கும் கிடைத்துவிட்டதா என்பதை உறுதிசெய்தபின் இந்த திட்டங்களை மேம்படுத்தலாம்.

பெண்ணிண் வளர்ச்சி: 

ஒரு பெண் (சிந்து) அயல்நாட்டில் இறகுப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதை கொண்டாடும் இவ்வேளையில் மற்றொரு பெண் (ஷாலினி) கழிவறை வசதி இல்லாமல் உள்நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாள். ஏழு வருடமாக கழிவறை இல்லா வீட்டில் அந்தப் பெண் எத்தனை சங்கடங்களை அனுபவித்திருப்பாள். சாலைகளில் அல்லது தெருக்களில் கழிப்பிடம் இருந்தாலும் 5 ரூபாய் கொடுக்க மறுத்துவிட்டு மற்றவர்கள் என்ன நினைத்தாலும் என்ன சொன்னாலும் பரவாயில்லையென பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைக் கண்டுள்ளோம். அந்த மனப்பான்மைதான் திருமணமாகி ஏழு வருடங்களாகியும் கழிவறை கட்ட மனம் வரவில்லை அல்லது அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில், இன்னும் எத்தனைப் பெண்கள் இதுபோன்ற கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். பெண் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறாளோ அதே அளவிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளாள். 

இதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போதும் பெண்கள் பல இன்னல்களை சந்திப்பதுண்டு. கோவில்கள், மருத்துவமனை, பேருந்து நிலையங்கள் மற்றும் இன்னும் பல பொது இடங்களில் கூனிக்குறுகி மற்றவர்கள் பார்த்து விடக்கூடாதென தன்னை வருத்தி, பாலூட்டும் போது பால்சுரப்பதும் குறையும்; குழந்தைக்கும் பசி தீராது. மகிழ்ச்சியாக, மனநிறைவாக பாலூட்டும் போது தான் தாய்க்கும், குழந்தைக்குமான பிணைப்பு அதிகமாகும். எனவேதான் பொது இடங்களில் தாய்மார்கள் பால் கொடுக்க தமிழக அரசானது பொது இடங்களில் பாலூட்டும் அறைகளை திறந்துள்ளது. பெண்கள் ஒவ்வொன்றிற்கும் ஆண்களை சார்ந்திருக்கும் வரை இந்நிலை நீடித்துக்கொண்டே இருக்கும். அதற்காக ஆண்களை பெண்கள் சார்திருக்கக் கூடாது என சொல்லவில்லை. சில விஷயங்களில் பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கத் தேவையில்லை எனக்கூறுகிறோம்.

நன்றி,
ஊமை இளைஞன்

Monday 26 August 2019

ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் - கல்யாண சுந்தரம்



வணக்கம் தோழர்களே... நம் நாட்டில் இயற்கை பேரிடரோ அல்லது குழந்தைகளின் கல்விச் செலவுக்கோ நாம் விரும்பும் பிரபலம் நன்கொடை வழங்கினால் அதைப் பெருமையாகக் கருதி நாமே வழங்கியதுபோல் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்வோம். சில நேரங்களில் நம் பிரபலத்தின் போட்டியாளர் நன்கொடை அழித்து நாம் விரும்பிய பிரபலம் ஏதும் அழிக்காதபோது சிலர் தாமாகவே ஒரு செய்தியை திரித்து பகிர்ந்து மகிழ்ச்சிகொள்வார்கள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர்கள் சில இலட்சங்களை தரும்போதே அவர்களை தலையில் வைத்துக் கொண்டடுகிறோம். ஆனால், ஒரு தனிமனிதன் தன்வாழ்நாளில் சம்பாதித்த, கிடைத்த அனைத்தையும் மற்றவருக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவரை என்னவென்று எப்படி பாராட்டுவது புகழ்வது. அவரது பெயர் ஒன்றே அவரை பறைசாற்றும். ஆம். அவர்தான் மதிப்பிற்குரிய பாலம் கல்யாணசுந்தரம்.

பிறப்பு மற்றும் படிப்பு:
1940 ஆம் ஆண்டு மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில்,  பால்வண்ணநாதன் - தாயம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த கல்யாணசுந்தரம் அவர்கள் இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். தமிழின் மீது அதீத ஆர்வம் கொண்டதால் தமிழில் பி.ஏ. இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், தனது பெயருக்குப் பின்னால் 36 எழுத்துகளுக்குச் [பா. கல்யாணசுந்தரம்  M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS] சொந்தக்காரரான கல்யாணசுந்தரம் அவர்கள் தான் படித்த அனைத்து துறைகளிலும் முதலிடம் வகித்தார். 

1963ஆம் ஆண்டு இந்திய-சீனப் போரின் போது, அப்போதைய இந்திய பிரதமர் திரு. ஜவகர்லால் நேரு அவர்களின் வானொலிப் அறிக்கை கேட்டு, தேசியப் பாதுகாப்பு நிதிக்காக எட்டரைப் பவுன் தங்கச் சங்கிலியை முதலமைச்சர் காமராசர் அவர்களிடம் கொடுத்தார்.

வாழ்வின் மூன்று கட்டளைகள்:

தனது இளம் வயதில் அவரது தாய் திருமதி. தாயம்மாள், கல்யாணசுந்தரம் அவர்களிடம் மூன்று கட்டளைகள் சொன்னாராம். அவைகள்:

1. எதன்மீதும் பேராசை கொள்ளாதே.
2. கிடைக்கும் வருவாயில் பத்தில் ஒருபங்கை (1/10) மற்றவர்களுக்கு தானம் செய்.
3. தினமும் ஒரு உயிருக்கு நல்லது செய்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழலாம்

இந்த மூன்று கட்டளைகளையும், தன்னுடைய 79 வயதிலும் கல்யாணசுந்தரம்  அவர்கள் .கடைபிடித்து வருகிறார் என்பது ஆச்சரியமான உண்மை.

ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்:
பேராசிரியராக பணியாற்றி வந்த கல்யாண சுந்தரத்திற்கு மாதம் இருபதாயிரம் சம்பளம். ஆனால், தன் சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, ஒரு உணவகத்தில் சர்வராக பணிபுரிந்து தனது செலவுகளை பார்த்துக்கொண்டார். தொடர்ந்து 35 வருடங்கள் பேராசிரியராக சம்பாதித்த அனைத்தையும் மற்றவர்களின் நலனுக்காகவே விட்டுக்கொடுத்தார்.

உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியர்களோ அல்லது தனியார் நிறுவன ஊழியர்களோ இவ்வாறு செய்தது இல்லை என்பதால், அமெரிக்காவில் "ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் (Man of the Millennium)" என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 .5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் முப்பது கோடி ரூபாய் ) பரிசாக பெற்றார். ஆனால், அந்த பணம் முழுவதையும் ஏழை குழந்தைகளுக்கே வழங்கினார்!

ஐந்தாவது ஊதிய குழுவின் விடுபட்ட ஊதியத்தை (ரூபாய் பத்து லட்சம்) ஏழைகளுக்கும், ஆறாவது ஊதிய குழுவின் ஐந்து லட்சத்தை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் எழுதிவைத்தார்.

பாலம் தொண்டு நிறுவனம்:

சிலருக்கு எங்கு நன்கொடை கொடுப்பது என்பது தெரியாது. சிலருக்கு எங்கு நன்கொடை வாங்குவது என்பது தெரியாது. இவர்கள் இருவரையும் இணைத்து அவர்களிருவருக்கும் இடையில் ஒரு பாலமாக இருக்க தொடங்கப்பட்டதுதான் பாலம் தொண்டு நிறுவனம். அதன் தலைவராக கல்யாண சுந்தரம் அவர்கள் விளங்குகிறார்.

அப்துல் கலாமிற்கு இணையான கல்யாண சுந்தரம்:

ஒருமுறை பில் கிளிண்டன் அவர்கள் இந்தியா வந்தபோது அரசுப்பணியில் இல்லாத இருவரைச் சந்திக்க முற்பட்டார். அவர்களில் ஒருவர் அப்துல் கலாம் அவர்கள் மற்றொருவர் பாலம் கல்யாண சுந்தரம் அவர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இவரின் செயல்களை பாராட்டி, கல்யாண சுந்தரம் அவர்களை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஆனால், சில மாதங்கள் கழித்து ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் தனது இருப்பிடத்திற்கே வந்துவிட்டார்.

விருதுகள்:

1) அமெரிக்காவின் 'Man of the Millennium' விருது.

2) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தால் 'A Most Notable intellectual in the World' என்ற பட்டத்தை வழங்கியதுடன், நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்திருந்தால் அது அவருக்கு கொடுக்கவேண்டும் என்று பாராட்டியது.

3) ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.

நன்றி,
ஊமை இளைஞன்

Thursday 22 August 2019

மதராஸ் @ சென்னை உருவான வரலாறு


"வெளியூர்க்காரங்க நிறையபேரு இங்க வந்து வேலை செய்வாங்க. ஒருநாளாச்சும் இந்த ஊரப்பத்தி  திட்டியிருப்பாங்க ஆனால் இந்த ஊறவிட்டு போகமாட்டாங்க. அதுதான் தம்பி இந்த ஊர்". இந்த வசனம் மாநகரம் படத்தில் வரும் ஒரு உண்மைவரி. ஆமாங்க, "வேலையே கிடைக்கல மச்சான். பேசாம சென்னைக்கு போயி வேலைதேடலாம்ணு இருக்கேன்", நம்ம நண்பர்களே சில நேரங்களில் இவ்வாறு கூறியிருப்பார்கள்.வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சென்னையின் பங்கு மகத்தானது. தமிழ்நாட்டுல மொத்தம் 34 மாவட்டங்கள் இருக்கு. அந்த 34 மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் சென்னையில் இருப்பாங்க. அதுதான், சென்னையோட தனிச்சிறப்பு. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் இடம் மதராஸ் என்னும் நம்ம சென்னை. அதன் வரலாற்றைத்தான் இங்க பார்க்கப்போறோம்.

மதராஸ் உருவான வரலாறு:

1639 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22 ஆம் நாளன்று, கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோர் ஆங்கிலேயரின் குடியிருப்பை அதிகரிக்க, மதராசப்பட்டினம் எனும் கிராமத்தினருகே சென்னப்ப நாயக்கன் என்பவரது மகன்கள் அய்யப்பன் மற்றும் வேங்கடப்பனிடமிருந்து சிறிது நிலத்தை (இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம்) விலைக்கு வாங்கினர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிய பின்பு, அதைச் சுற்றியுள்ள தொன்மைவாய்ந்த பகுதிகளான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர் மற்றும் திருவான்மியூர் முதலிய பகுதிகள் இணைக்கப்பட்டு மதராஸ் பட்டினமாக உருவெடுத்தது. 1688ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணம் இந்தியாவின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் மதராசுக்கும் இடையில் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டு இணைக்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில், தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திர மாவட்டங்கள், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டம் மற்றும் கேரளத்தின் மலபார் மாவட்டம் முதலியன இருந்தன.

1947ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மதராஸ் அறிவிக்கப்பட்டது. பின்னர் 1956 -ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு மதராஸ் மாகாணமானது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை பெயர் மாற்றம்

1996 ஆம் ஆண்டு வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிலத்தை
வாங்கியதால், தங்கள் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' பெயரால் சென்னப்பட்டணம் என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே, தமிழக அரசு செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் மதராஸ் என்னும் பெயரை சென்னை என மாற்றம் செய்தது.

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கு நிலம் விற்கப்பட்ட இந்நாளை நாம் சென்னை தினமாக கொண்டாடுகிறோம்... இன்றுடன் சென்னைக்கு 380 வயது முடிவடைகின்றது. சென்னையுடன் சேர்ந்து நாமும் இந்நாளை கொண்டாடுவோம்..

நன்றி ,
ஊமை இளைஞன்

Saturday 17 August 2019

காதல் மோகம்!



பேதைப்பெண்ணே,
மோகம் கொள்ளாதே!

உன் மோகத்தில் தேக தாகம் தனிய
ஓநாய்களாய் பலர் அலைந்துகொண்டிருக்கிறார்கள்!

உன் கவனச்சிதறலை காசாக்க
கயவர்கள் பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

வளைதளத்தில் வசந்த வார்த்தைகள் பல பேசி 
உனக்கு வலைவிரித்துக் கொண்டிருக்கிறார்கள்!

கைப்பேசி எண்களின் மூலம் 
எண்ணிலடங்கா எண்ணங்களை உன்னுள் புகுத்த நினைக்கிறார்கள்!

காதலென்னும் பெயரில் காமத்தை முன்னிறுத்தி
உன் பெண்மையை வேட்டையாடிட
அரக்கர்கள் பலர் அலைந்துகொண்டிருக்கிறார்கள்!

அவர்களின்,

ஆசை வார்த்தையில் ஆனந்தம் கொண்டிராதே!
உண்மையறியாமல் உன்னையே இழந்துவிடாதே!!!


நன்றி,
ஊமை இளைஞன்

Thursday 15 August 2019

இன்றைய சூழ்நிலையில் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் எண்ணம் என்னவாக இருக்கும்?



"அயலானொருவன்,

அடிமை கொண்டான்...

ஆட்டிப் படைத்தான் ...

இச்சைச் சொல்லுரைத்தான்...

ஈன்றவளை பழித்தான்...

உறவைப் பிரித்தான்...

ஊமையாக்கினான்...

எட்டி உதைத்தான்...

ஏளனம் செய்தான்.....

ஐம்புலனையும் அடக்கிவைத்தான்...

ஒய்யறம் கொண்டு  ஒதுக்கி வைத்தான்...

ஓதுவார் தம்மை அருகில் வைத்தான்...

ஔரப்பிரகமாய் ஆட்டுவித்தான்...

மண்மீது மனம் சென்றது...

மதயானை பலம் வந்தது...

எதிர்த்து நின்றோம் ... எதிரிகள் கூடின...

தோட்டாக்களும் பீரங்கிக்குண்டுகளும் நெஞ்சுக்குப் பஞ்சாய் மாறின..

செங்குருதிகளை, செந்நாய்கள் ருசித்தன...

மெய்ப்பிண்டங்களை, பிணந்தின்னி கழுகுகள் இரையாக்கின...

வலிக்கவில்லை ...

சுதந்திரத்தை மறக்கவில்லை...

கொண்டோம் கனவுதேசம்... கண்டோம் சுதந்திர தேசம்...

வலிக்கிறது இப்பொழுது...

மண்ணிற்கு பெற்ற சுதந்திரத்தை, இந்த  பெண்ணிற்கு பெறவில்லையே என்று ...

குடியுரிமையை பெற்று குடிகாரர்களை  உருவாக்கினோமே என்று ...

உயிரை விட்டு ஊழலை பெருக்கிவிட்டோமே  என்று ...

73 ஆண்டுகாலம் ஆனபின்னரும்

வறுமை தீரவில்லை...

சாதிகள் ஒழியவில்லை...

மதக்கலவரங்கள் மறையவில்லை...

லஞ்சம் குறையவில்லை...

ஊழல் மாளவில்லை...

ஏழைகளின் வாழ்வாதாரம் மாறவில்லை...

வேலையில்லா திண்டாட்டம் ஓயவில்லை...

இருப்பினும்,

நம்நாட்டில்

நம் கொடியை ஏற்றி மகிழ்வதற்கு,

பல்லாயிரக்கணக்கான போலீசார்

பாதுகாப்பு தேவைப்படுகிறதே!!!"

என்று மனம் வாடியிருப்பான்...

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

இவன்,
ஊமை இளைஞன் 

Monday 12 August 2019

காவிரியின் கண்ணீர்!


கர்நாடகத்தில் பிறந்தேன்
காடு மேடெங்கும் திரிந்தேன்!

வெள்ளத்தால் விரிந்தேன்
காவிரியென மலர்ந்தேன்!

வறண்ட நிலமெல்லாம்
வஞ்சகமின்றி நகர்ந்தேன்!

பாதைகொண்ட இடமெல்லாம் 
பசுமையுடன் இருந்தேன்!

என்னுள் சில கிளை நதிகள்
கிளைகளில் பல நிலை அருவிகள்!

ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே
அரசாங்கம் அமைவதற்கு முன்னரே 
அமைத்துவிட்டேன் என் பாதையை!

அதில்,

அணையொன்று கட்டி
பூட்டொன்று பூட்டி
தாகம் தீர்க்கும் என்னை
தாண்டிச் செல்லாதே என தடுப்பதேனோ?

மனித தேகத்தின் குருதியை,
தேக பாகம் தடுத்தல் தகுமா?

யாரறிவார்?

கிளைகளும் அருவிகளும்
பிரிந்தோடும் என் குருதியென்று!

நன்றி,
ஊமை இளைஞன் 

Wednesday 7 August 2019

அணுவால் அழிந்த நகரம் - ஹிரோஷிமா


​​​ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவர்களிடம் உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ள விரும்புவான். தனக்கு அருகில் இருப்பவனிடமோ அல்லது எதிரில் இருப்பவனிடமோ காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டால் தன்னிடம் உள்ள சிறப்புத் தன்மையை அல்லது விலையுயர்ந்த பொ​​ருட்களை அவனிடம்கூறி தற்பெருமை பேசுவான். இன்னும் சுலபமாக சொல்லவேண்டுமானால் பக்கத்தில் உள்ளவன் கருப்பாகவும் தான் சிவப்பாகவும் இருக்கும்பட்சத்தில் கருப்பாக இருப்பவனை கிண்டல் செய்வார்கள். இதனால் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை. ஆனால், இரண்டு நாட்டுத் தலைவர்களின் இடையில் காழ்ப்புணர்ச்சி வந்தால் ஏற்படும் விளைவு (அ) விபரீதம் எண்ணிப்பார்க்க இயலாதவை. ​​

அரசன் தன் எதிர்நாட்டை அடைவதற்கு அல்லது அழிப்பதற்கு யானைப்படை, குதிரைப்படை மற்றும்  காலாட்படையைக்கொண்டிருப்பான் என இதிகாசத் தொடர்களில் பார்த்திருப்போம் அல்லது புத்தகங்களில் படித்திருப்போம் அல்லது சொற்பொழிவுகளில் கேட்டிருப்போம். அரசர்களுக்கிடையில் நடக்கும் போர்களில் அரசர்கள், அமைச்சர்கள், போர்வீரர்கள் மட்டுமே உயிர்துறப்பார்கள். அதிலும் போர்க்களங்களில் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், போர் நடக்கும் முன்பு அவர்களுக்குள் சில உடன்படிக்கைகள் நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, இரவில் போர் தொடுக்கக்கூடாது, பெண்கள் மற்றும் குழந்தைகளை  போர்க்களங்களில் அணுமதிக்கக்கூடாது முதலியன. ஆனால், அறிவியலின் வளர்ச்சி மேலோங்கிய இந்நாளில், மனிதனின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வாழ்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் அவையனைத்தையும் ஒருநொடிப்பொழுதில் அழிப்பதற்கும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படி உருவான ஆயுதங்களில் மனிதனின் மிகவும் மோசமான கண்டுபிடிப்பு இந்த அணு ஆயுதங்கள்.

​​இரண்டாம் உலகப்போர்:


1939 ஆண்டுகளின் இறுதியில் தொடங்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு நாடும் தாங்கள் வல்லரசாகும் முனைப்பில் நேசநாடுகள், அச்சுநாடுகள்  என இரண்டு பிரிவுகளாக பிரிந்து போர்தொடுத்தனர்.  அச்சு நாட்டைச்சார்ந்த இத்தாலியும் ஜெர்மனியும் ஒருகட்டத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்தன.ஆனால், அமெரிக்காவின் நேரெதிரியான அச்சுநாட்டைச் சார்ந்த ஜப்பானின் ஆதிக்கம் மட்டும் உச்சத்திலிருந்தது. தனியாக நின்று நேசநாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் போர்ப்படைத் தளத்தை உடைத்தெரிந்தது. அத்துடன், போர்க்கப்பல்கள் அனைத்தையும் சேதாரப்படுத்தியது. நிலைகுலைந்த அமெரிக்க அரசு, ஜப்பானை எதிர்கொள்ள தீக்குண்டுகளை வீசியது. இதனால் ஜப்பானின் ஆதிக்கம் சற்று குறைந்தது. இருப்பினும் வல்லரசுப் பாதையை நோக்கிக்கொண்டிருந்த ஜப்பான் அதற்கு பணியவில்லை, எதிர்த்து மீண்டும் போரிட்டது. நிலைமையை சமாளிக்க நேசநாடுகள் சார்பில் அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் 1945 ஆம் ஆண்டு ஜப்பானை எச்சரித்தார். அதில், "தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடையுங்கள் இல்லையேல் விளைவு பயங்கரமானதாக இருக்கும்" என்றார். செவிசாய்க்காத ஜப்பான் அரசு போரைவிடவில்லை. கொதிப்படைந்த அமெரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டை பயன்படுத்தலாமென தீர்மானித்தது.

​​லிட்டில் பாய் மற்றும் பாட் மேன்:


அணுகுண்டுகளால் ஏற்படும் விளைவுகளை முன்னரே அறிந்திருந்தும் வல்லாதிக்க எண்ணத்திலிருந்த அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதன்முதலில் அணுஆயுதத்தை போரில் பயன்படுத்தியது. அமெரிக்காவின் விமானப்படையைச்  சார்ந்த போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து 4000 கிலோ எடையும் 3 மீட்டர் நீளமும் கொண்ட 'லிட்டில் பாய்' என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவின் மையப்பகுதியில் 540 மீட்டர் உயரத்திலிருந்து வீசப்பட்டது.

ஜப்பானில் வாழும் அப்பாவி பொதுமக்கள் வழக்கம்போல் தங்களது அன்றாட வேலைகளைக்கொண்டிருந்தனர். காலை 8.15 மணியளவில் பலத்த சத்தத்துடன் சூரியனே கீழே விழுந்ததுபோல ஒளிவீசியது. அணுகுண்டு வெடித்த சிறிதுநேரத்தில் 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் அனைத்தும் முழுமையாக அழிந்ததில் சுமார் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர். ஹிரோஷிமா தாக்குதல் பற்றி அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அறிவிக்கப்பட்ட பின்புதான் ஜப்பான் அரசுக்கு முழுமையான தகவல் கிடைத்தது.

உலகம் முழுவதும்  ஹிரோஷிமா பற்றிய தகவல் கிடைப்பதற்குள், மூன்று நாளுக்குப்பின்னர் அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி, ஜப்பானிலுள்ள மற்றொரு இடமான நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு 500 மீட்டர் உயரத்திலிருந்து வீசப்பட்டது. இந்த அணுகுண்டு பெயர் பாட் மேன் (அ) குண்டு மனிதன் எனப்பெயரிட்டனர். இதில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உயிர் தப்பியவர்கள் பல ஆண்டுகள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்றுநோயினாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு இறந்தார்கள். அணுகுண்டு வீசப்பட்டு நான்கு ஆண்டுகள் ஹிரோஷிமாவில் எந்தவொரு பூக்களும் பூக்கவில்லை. இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே பிறக்கிறார்கள்.

​​ஜப்பானின் அணுஆயுத தத்துவங்கள்: 


செப்டம்பரில் 3 குண்டுகளையும் அக்டோபரில் 3 குண்டுகளையும் ஜப்பானின்மீது மீண்டும் உபயோகிக்க அமெரிக்கா முடிவுசெய்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, தோல்வியை ஒப்புக்கொள்வதாக ஜப்பான் அறிவித்தது. அதன்பின்னர், ஒருவழியாக இரண்டாம் உலகப்போர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தது. அணு ஆயுதத்தின் தன்மையை முற்றிலும் உணர்ந்திருந்த ஜப்பான், போருக்குப்பின் மூன்று தத்துவங்களை ஏற்றது.அவைகள்:

1. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை
2. அணு ஆயுதங்களை ஜப்பானில் அனுமதிப்பதில்லை
3. அணு ஆயுதங்களை உபயோகிப்பதில்லை.

​​அணுஆயுத உற்பத்தியில் இந்தியா:


தற்போதைய நிலவரப்படி உலக நாடுகளில் சுமார் 40 நாடுகளிடம் அணுஆயுத மூலப்பொருட்கள் உள்ளதாகவும் அத்துடன் 31,500-க்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் உள்ளன எனவும் சமீபத்தில் பத்திரிக்கைகளில் வெளியாகின. ஒரு நாட்டின் வலிமையானது ஆயுதங்களைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான், அமெரிக்கா அரசானது உலக வல்லரசில் தன்னை நிலைநாற்றிக்கொள்ள ஆண்டொன்றுக்கு ரூ. 2900 கோடி வரை அணுஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்குகிறது. 1998-ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது மகிழ்ச்சியென்றாலும் அகிம்சையால் சுதந்திரம் பெற்ற நம்நாட்டில் அணுஆயுதத்தைக் கொண்டு பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகக் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

2009-ல் ஐ.நா.வில்  நடைபெற்ற பொதுக்குழுவில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், "அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க இந்தத் தீர்மானம் வழிவகுக்கும். இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலும்." என்றார். ஆசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான்​, ​
ரஷ்யா​, ​மற்றும் சீனா நாடுகளிடம் அணுஆயுதங்கள் உள்ளன. இதில் சீனா மட்டும் 'அணு ஆயுதப் பரவல் தடுப்பு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் பாகிஸ்தானும் அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை பாகிஸ்தானும், பாகிஸ்தானை இந்தியாவும் பழிசுமத்தி அதில் கையெழுத்திட மறுத்தது.​​

​​அணு உலையில் பாதுகாப்பு​:​

அணுஆயுதங்கள் ஒருபுறமிருக்க, மாநிலங்கள் தோறும் அதுவும் கடற்படையையொட்டி பல்வேறு அணுஉலைகளை இந்தியா அமைத்துவருகிறது. 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அமெரிக்காவில் உள்ள 12 அணுஉலைகளை  ஹாக்கர்கள் (ஹாக்கர்ஸ்) ஹேக் செய்து பெருத்த சேதத்தை உருவாக்கினர். ஆம், அணு உலையின் வெப்பத்திறனை அதிகரித்து சேதாரப்படுத்தியதில் பலகோடி ரூபாய் மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் அணுஉலையின் வெப்பத்திறனை அதிகரிக்கும்போது அணுஉலையானது வெடித்துச் சிதறும் தன்மைகொண்டது. அனுஉலை பாதுகாப்பாக உள்ளது என அரசின் தரப்பில் கூறப்பட்டாலும், எதிர்வரும் காலங்களில் அணுஉலை பாதுகாப்பாக இருக்குமென உறுதியாகக் கூறமுடியாது. மழை மற்றும் மற்ற இயற்கை சீற்றங்களில் கூட அவ்வளவாக பாதுகாப்பளிக்க முடியாதபோது, அணுஉலையில் விபத்தோ அல்லது எதிரிகளால் ஏதேனும் ஆபத்தோ ஏற்படும்போது எப்படி நிலைமையை சமாளிக்க முடியும் என்று ஆட்சியாளர்கள்தான் பதில்கூற வேண்டும்.

நன்றி,
​​ஊமை இளைஞன் 

Monday 5 August 2019

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் - நிலவில் கால்பதித்த முதல் மனிதன்


1932 ஆம் ஆண்டு இரண்டு வயது சிறுவனொருவன் தனது தந்தையுடன் விமான சாகச நிகழ்ச்சிக்கு செல்கிறான். அங்கு நடந்த சாகச நிகழ்ச்சியைக் கண்டு உள்ளம் கொள்ளைகொண்டு ஆர்ப்பரிக்கிறான். அதன்பின்னர் தனது தந்தையுடன் அவனது ஆறாம் வயதில் விமானத்தில் பறக்கிறான். அதிலிருந்து அவனுக்கு விமானத்தின்மீது அளவில்லா பிரியம் உண்டாகி தாணும் ஒருவிமானியாக வரவேண்டுமென்று உறுதிகொண்டு இளம்வயதிலேயே விமானியாக உருவெடுத்து பல்வேறு விமானங்களை இயக்கி இறுதியில் நிலவிலும் தன் கால்களை பதிக்கிறான்  அந்த சிறுவன். அவனது பெயர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். 

ஆம்ஸ்ட்ராங் பிறப்பு மற்றும் படிப்பு:

1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டா நகரில் ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கல் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார் ஆம்ஸ்ட்ராங். அவரது தந்தை ஓஹியோ மாநிலத்தின் ஆடிட்டராக  பணிபுரிந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு இரண்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பின்னர் 1936 ஆம் ஆண்டு "டின் கூஸ்" என்று அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடர் விமானத்தில் இருவரும் பயணம் செய்தனர். அதிலிருந்தே ஆம்ஸ்ட்ராங்கிற்கு விமானத்தின்மீது தனிப்பிரியம் உண்டானது. 

வாப்கோநெட்டா விமானநிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை முடித்த ஆர்ம்ஸ்ட்ராங் தனது 16-வது வயதில் விமானம் ஓட்டிக்கான உரிமத்தையும், விமான ஒட்டுனர் உரிமத்தையும் பெற்றார். அத்துடன் சாரணர் ஆண் இயக்கத்தில் அதிக ஈடுபாடுகள் கொண்டிருந்தமையால் அமெரிக்காவின் புகழ்பெற்ற விருதான ஈகிள் ஸ்கவுட் மற்றும் சில்வர் பஃபேலா முதலிய விருதுகளை பெற்றார்.

கொரியா போரில்  ஆம்ஸ்ட்ராங்:

1949 -ஆம் ஆண்டு விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தலமான பென்சாகோலாவிலிருந்து அழைப்பு வந்திருந்தது. 18 மாதங்கள் நீடித்த பயிற்சியில் ஆம்ஸ்ட்ராங் வெற்றிபெற்று, கப்பல் விமானப் படை ஸ்கோட்ரான் 7 இல் தனது முதல்பணியை ஆரம்பித்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஃபெடரல் ஸ்கோட்ரான் 51 (VF-51), அனைத்து ஜெட் விமானப்படைக்கு நியமிக்கப்பட்டார். 1951 -ஆண்டு ஜூன்  மாத இறுதியில், எசெக்ஸ் கப்பல் தனது VF-51 விமானங்களுடன் கொரியாவுக்கு புறப்பட்டது.

முதலில் ஆம்ஸ்ட்ராங் புகைப்பட உளவுத் திட்டத்தின் துணை விமானியாக கொரிய யுத்தத்தில் பங்கேற்றார். பின்னர், வொன்சனின் மேற்குப் பகுதியான மஜோன்-நியின் தெற்கே பிரதானப் போக்குவரத்து மற்றும் சேமிப்பக வசதிகள் மீது ஆயுதமேந்திய விமானதுடன் அவர் பறந்தார். சுமார் 350 ம்ph (560 kம்/h) வேகத்தில் சென்ற   ஆம்ஸ்ட்ராங்கின் F9F பாந்தர் விமானம், விமான எதிர்ப்பு ஏவுகனையால் தாக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் விமானத்தை நட்பு பிரதேசத்திற்கு பறந்து சென்று அவர் தண்ணீரில் விமானத்தை இறக்க திட்டமிட்டார் ஆனால், ஆபத்துக் கால தப்பிக்கும் வழிமுறையை பயன்படுத்தி வெளியேற முயன்று நிலத்தில் இருக்கையுடன் தூக்கி வீசிப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொரியா மீது 78 முறை பறந்தார் மொத்தம் 121 மணி நேரம் காற்றில் பறந்தார்.

அப்பல்லோ திட்டம்:

அப்பல்லோ திட்டம் என்பது மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்து மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக கொண்டுவருவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. 1960 முதல் 1969 -க்கு முன்புவரை 3 விண்வெளிவீரர்களை இந்த ஆராய்ச்சியில் இழந்தது. இதனால், இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது நாசா. இருப்பினும், அப்பல்லோ 11 விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி 39ஏ ஏவுதளத்திலிருந்து நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது நாசா.

சந்திரனை அடைந்த அப்பல்லோவின் கட்டுப்பாட்டு ஓடத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கிக் கொள்ள, நீல் ஆம்ஸ்ட்ரோங் முதலி்ல் நிலவில் காலடி எடுத்துவைத்தார். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து இரண்டாவதாக  எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். நான்கு நாள் நிலவுப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது அப்பல்லோ 11. திரும்புவதற்கு முன்பு, எட்வின் ஆல்ட்ரினும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் நிலவில் அமெரிக்க கொடியை நாட்டினர். அப்போது அவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்தனர்.

பூமிக்கு திரும்பிய மூவருக்கும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் , ஆம்ஸ்ட்ராங்கிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், 17 நாடுகளில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் ஆம்ஸ்ட்ராங் பணியாற்றினார். 

நிலவு பயணமும் சந்தேகங்களும்:

நிலவைப் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் 1930 - லேயே சோவியத் யூனியன் ஆரம்பித்தது. 20 -க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட சோவியத் யூனியன் 1957 -ல் லைக்கா என்னும் நாயை விண்வெளிக்கு அணுப்பி உயிருடன் பூமிக்கு திரும்ப கொண்டுவந்தனர். பின்னர், மூன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய சிறிது நேரத்திலேயே விண்கலம் வெடித்துச் சிதறியது. இதனால் சோவியத் யூனியன் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஆராய்ச்சியை கைவிட்டது. எதிலும் போட்டிபோட்டுக்கொள்ளும் அமெரிக்கா சோவியத் யூனியனுடனான நிலவுப் பயணத்திலும் போட்டியிட்டு சோவியத் யூனியன் தோல்வியடைந்த, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை தாங்கள் தொடர்வதாக அறிவித்தனர். 



20/6/1969 அன்று அப்பலோ 11 விண்கலத்திட்டத்தின் படி நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் காலடிவைத்ததாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. நாசாவின் நிலவுத் திட்டத்தை துவக்கத்திலிருந்தே சந்தேகத்துடன் பார்த்துவந்த ரஷ்யர்கள், அடுக்கடுக்கான பின்வரும் கேள்விகளை வைத்தது. ஆனால், நாசாவின் பதில் அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை.

கேள்வி 1: அமெரிக்கா அப்போலோ 11-க்குப் பிறகு ஏன் அமெரிக்கா எந்தவொரு நிலவு ஆராய்ச்சியையும் தொடரவில்லை?

கேள்வி 2: நிலவில் காற்று இல்லை பின்னர் எப்படி அமெரிக்க கொடி அசைந்தது?
நாசா பதில்: நிலவில் காற்று இல்லை எனக் கூறுவது உண்மைதான். ஆனால், அது கொடிக்கம்பம் ஊன்றும்போது ஏற்பட்ட அதிர்வு மேலே சென்று கொடியை அடைய கொடியும் அதிர்ந்தது. அதனால்தான் கொடி அசைவதுபோல உள்ளது .

கேள்வி 3: நிலவிற்கு ஒளிதரும் ஒரே ஒரு கோள் சூரியன். ஆதலால், ஒரே திசையில் தான் விண்வெளிவீரர்களின் நிழல்கள் விழவேண்டும். ஆனால், புகைப்படத்தில் ஏன் இரண்டு திசைகளில் நிழல்கள் விழுகின்றன? 
நாசா பதில்: நிலவின் தரை புவியின் தரை போன்று நீண்டதூர சமமான தரை அல்ல, பல குன்றுகள் மலை வடிவங்களாலான தரை. எனவே, குன்றுகளில் பட்டுத்தெறித்த ஒளியினால் நிழலில் மாற்றம் ஏற்பட்டது.

கேள்வி 4: நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஏன் ஒரு நட்சத்திரம்கூட இடம்பெறவில்லை? 
நாசா பதில்: நிலவிலிருந்து படங்கள் எடுக்கப்பட்டது காலை நேரம். எனவே சூரிய ஒளியில் நட்சத்திரங்கள் தென்படவில்லை.

கேள்வி 5: நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலுள்ள ஒரு பாறையில் எப்படி 'C' என்னும் குறியீடு உள்ளது? 
நாசா பதில்: இது உண்மைப்படமல்ல. யாரோ எடிட் செய்துள்ளனர்.

கேள்வி 6: பதிவான ஒவ்வொரு புகைப்படத்திலும் '+' (cross - hairs) என்னும் குறியீடு உள்ளது. ஆதலால், இந்த புகைப்படங்கள் அனைத்தும் திட்டமிட்டு எடுக்கப்பட்டு, நம்பும்படியாக எடிட் செய்யப்பட்டது எனக்கூறினர். இந்தக் கேள்விக்கு இன்றுவரை நாசா எந்தவொரு பதிலையும் கூறவில்லை.

கேள்வி 7: புகைப்படத்திலுள்ள பாதச்சுவடுகள் எதோ ஈரப்பதமுள்ள மண் மீது படிந்த சுவடுகள் போன்று மிகத் தெளிவாக இருப்பதாக உள்ளது. நிலவின் மண்ணில் ஈரப்பதம் இல்லாதபோது எவ்வாறு அங்கே இத்தனை துல்லியமாக சுவடுகளை பதிக்க முடியும்?  

நாசா பதில்: ரெகலெத் எனப்படும் நிலவு மண் எரிமலை சாம்பலைப் போன்றது. நன்றாக அரைக்கப்பட்ட மாவுடன் இதனை ஒப்பிடலாம். எனவே அதன் மீது நீங்கள் நடக்கும் போது இயற்கையாகவே அது ஒன்றோடு ஒன்று எளிதில் குழைந்து பின் பிணைந்து உங்கள் காலனியின் பதிவை உண்டாக்கிவிடும்.

இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், நாசாவின் பதில்களோ திருப்தி அளிக்கவில்லையென முன்னணி விஞ்ஞானிகள் பலர் கூறுகின்றனர். இன்றுவரை நாசாவால் இந்த கேள்விகளுக்கு நம்பும்படியாக எந்தவொரு ஆதாரத்தையும் தரவில்லை. அதுமட்டுமல்லாமல், விண்வெளிப்பயணம் செய்த ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகிய மூவரும் எந்தவொரு மீடியாக்களையும் சந்திக்கவில்லை.

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிக்காலம்:
2012- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி, ஆம்ஸ்ட்ராங்கிற்கு இதயத்தில் மாற்றுப்பாதை (bypass) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப்பின் உடல் நலத்தில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் திடீரென்று அவர் உடல் நலத்தில் சிக்கல்கள் உருவாகியதால் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று சின்சினாட்டியில் இறந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர் - அவருடைய காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும்" என்ற அறிக்கையை வெளியிட்டு கெளரவப்படுத்தியது.

நன்றி,
ஊமை இளைஞன் 

Sunday 4 August 2019

இந்தியாவின் சொத்து - தோழர் ஜீவானந்தம்



நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு ஊரில் கோவில்மணி அடிப்பதைக் கேட்டு சிறுவர்கள் இருவர்  கோவிலினுள் நுழைகின்றனர். அதைக்கண்ட பெரியவர்கள் (வயதால்) சிறுவர்கள் இருவரையும் தடுக்கின்றனர். அதில், ஒருசிறுவனிடம், "கோவிலில் உனக்கென்ன வேலை. உள்நுழைந்ததால் இந்த கோவிலே தீட்டாகிவிட்டது. இனிமேல் நீ கோவிலில் நுழையக்கூடாது" என கடுமையாக எச்சரிக்கிறார்கள். மற்றொரு சிறுவனிடம்,"அவனுடன் உனக்கென்ன சேர்க்கை. இனி அவனுடன் சேரக்கூடாது" என்கின்றனர். மேலும், அவனது தந்தையை அழைத்து கண்டிக்கச் சொல்கிறார்கள். அவரது தந்தையும் அவனை கடுமையாக கண்டிக்கிறார். கண்டித்துக்கொண்டிருந்த தந்தையிடம், "தான் செய்ததில் தவறில்லையே" என வாதிடுகிறான். ஆனால், அங்கிருந்த யாரும் செவிசாய்க்காததால் மனம்வாடி வீட்டை விட்டு வெளியேறுவதென்று முடிவெடுத்து பின் வெளியேறுகிறான். ஆதிக்க சாதியில் பிறந்தாலும், உயர்சாதி எனக்கூறப்படும் மக்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் "ஆலயத்தில் நுழையக்கூடாது. மீறி நுழைந்தால் அது தீட்டு" என்ற வர்ணாசிரம கோட்பாட்டின்மீது வெறுப்புணர்வுகொண்டு, தனது சிறுவயதிலேயே "அனைவரும் சமம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்" என்ற மனப்பாங்குடன் விளங்கினான் அந்த சிறுவன். சிறுவயதில் சொரிமுத்து என்று அழைக்கப்பட்டு பின்னாளில் ஜீவானந்தம் என்னும் பொதுவுடைமைவாதியாக உருவெடுத்தான். அவனது நண்பர் பெயர் மண்ணடி மாணிக்கம்.


ஜீவானந்தம் பிறப்பு :

1907-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21ஆம் தேதி, நாகர்கோயிவின் அருகேயுள்ள பூதப்பாண்டி என்னும் கிராமத்தில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் ஜீவானந்தம். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சொரிமுத்து. இளம் வயதிலேயே ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனது நண்பனுடன் ஆலயத்திற்குள் நுழைந்ததற்காக அவரது தந்தை கண்டித்தார். தான் செய்தது தவறில்லையென என்பதை நன்கு உணர்ந்து பின் வீட்டைவிட்டு வெளியேறினார்.

தமிழ் கலாச்சாரத்தின்மீதும், இலக்கியத்தின் மீதும் அளவுகடந்த மரியாதை கொண்டதனால் சொரிமுத்து என்னும் பெயரை 'உயிர் இன்பன்' மாற்றிக்கொண்டார். தனித்தமிழ் ஆர்வலரான மறைமலை அடிகளின் மீது அளவுகடந்த அன்புகொண்டார். மறைமலை அடிகளாரை சந்திக்கச் சென்ற உயிர் இன்பன் வெளியில் நின்று அடிகளாரின் வீட்டு வாசல் கதவைத் தட்டினார். அப்போது மறைமலை அடிகளார், உள்ளிருந்தவாறே, "யாரது, போஸ்ட் மேனா?' என்றார். அந்த சந்திப்பிலிருந்து தமிழின் மீதான பிடிப்பு தளர்ந்து  'உயிர் இன்பன்' என்னும் தனது பெயரை ஜீவனந்தமாக மாற்றிக்கொண்டார்.

 இந்தியாவின் சொத்து ஜீவா:

காங்கிரஸ் இயக்கக் கோட்பாடுகளின்மீது அதிக ஈர்ப்புகொண்டதால், காங்கிரஸ் இயக்கத் தலைவர் வ. வே. சுப்பிரமணியம் அவர்களால் தொடங்கப்பட்ட "பரத்வாஜ்" என்னும் ஆசிரமத்தில் தன்னை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். அங்கு, பிராமண மாணவர்களுக்கு தனியாகவும் மற்ற பிறசாதி மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட ஜீவானந்தம், காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதைப்பற்றி பேசினார். அவருக்கு பெரியாரும் ஆதரவளித்தார். ஆனால், காங்கிரசில் ஆதிக்க சாதியினர் அதிகம் இருந்ததால் அவர்களின் பேச்சுக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை. அதனால், "பரத்வாஜ்" ஆசிரமத்திலிருந்து வெளியேறி 'சிராவயல்' என்னும் ஆசிரமத்தை தொடங்கினார். அதுவரை காங்கிரசு கட்சியிலிருந்த பெரியார், காஞ்சிபுரம் மாநாட்டிற்குப்பிறகு காங்கிரசிலிருந்து முழுவதுமாக வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியிலிருந்தாலும், ஜீவானந்தம் பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றினார்.

1927 - ஆம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த காந்தியடிகள் ஜீவானந்தம் தொடங்கிய சிராவயல் ஆசிரமத்திற்கு வருகைபுரிந்தார். அப்பொழுது, காந்தியடிகள், "உங்களது சொத்து மதிப்பு எவ்வளவு?" என ஜீவாவிடம் வினவினார். அதற்கு ஜீவா, "இந்தியாதான் எனது சொத்து" என்று பதிலளித்தார். ஜீவாவின் தேசியபற்றை பார்த்து வியந்த காந்தியடிகள், "இல்லை இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து" எனக்கூறி பாராட்டினார்.

ஜீவாவும் சிறைவாசமும்:

சுயமரியாதை இயக்கத்தோடு இந்திய விடுதலை போராட்டத்திலும் பங்குகொண்டார். 1930-ல் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரின் தமிழ் உரைநடையும் ஆழ்ந்த கருத்துகளும் மக்களிடையே உத்வேகத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தின. சுதாரித்த அன்றைய அரசு ஜீவாவை உரையாற்றக்கூடாது என "வாய்ப் பூட்டுச் சட்டம்' போட்டனர் ஆனால் மறுநாள் ஜீவா தடையை மீறி கூட்டத்தில் உரையாற்றினார். அதனால் அவர் முதன்முதலாக சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையில் பகத்சிங்கின் நண்பர்களான பூதகேஸ்வ தத், குந்தலால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியோரையும் சந்தித்தார். இவர்களுடன், சோஷலிஸம், கம்யூனிஸம் போன்ற சித்தாந்தங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் நன்கு கற்றுக்கொண்டார். பொதுவுடமைப் புத்தகங்கள் பல படித்தார். தண்டனை முடிந்த பிறகு கம்யூனிஸ்டாக சிறையிலிருந்து வெளியேறினார்.

சிறையிலிருந்து திரும்பிய ஜீவா அவர்கள் சிங்காரவேலர் அவர்களின் நூலகத்திலிருந்த பொதுவுடமை புத்தகங்களை விரும்பி படித்தார். அதன் உட்கருத்துகளை ஆழமாக உணர்ந்து பின்னர் சிறந்த பொதுவுடைமைவாதியாக உருப்பெற்றார். 1933-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பெரியார், சிங்காரவேலர் ஆகியோருடன் ஜீவா தலைமை தாங்கினார். அத்துடன் மாநாட்டிற்குப் பிறகு சுமார் 200 நாத்திகப் பாடல்களை ஜீவா எழுதியதாக கூறப்படுகிறது.

பகத்சிங் எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்ததற்காக ஜீவாவை சிறையில் அடைத்தனர். அதனால் பெரியார், தான் நடத்திய சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் மூலம் ஜீவா மொழிபெயர்த்த 'நான் ஏன் நாத்திகனானேன்?" கடிதத்தை வெளியிட்டார். அதற்காக பெரியார் கைது செய்யப்பட்டு பின்னர் 'மன்னிப்பு கடிதம்' எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். ஜீவா இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் பெரியாருக்கும் ஜீவாவிற்கும் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டது.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி துவக்கம்:
சுயமரியாதை இயக்கத்துக்குள் பொதுவுடமைக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் அன்றைய அரசு, பொதுவுடைமை கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுத்தது. அரசின் ஆணைப்படி, பெரியார் பொதுவுடைமை கருத்துக்கள் பரப்பப்படுவதை நிறுத்தினார் ஆனால் ஜீவா அதற்கு
சம்மதிக்கவில்லை. இதனால், சுயமரியாதை இயக்கத்திலும் விரிசல் ஏற்பட்டு ஜீவா மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் இணைந்து 'காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை தொடங்கினர். அதன் பொதுச்செயலாளராக ஜீவா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937 ஆம் ஆண்டு வத்தலகுண்டுவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்வில் அன்றைய மதராஸ் மாகாண முதலமைச்சர் ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டனர்.அதில், ஜீவா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பின்னர் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் "ஜமீன் ஒழிப்பு தீர்மானம்" கொண்டுவரப்பட்டது.

ஜீவா சந்தித்த போராட்டங்கள்:

பசுமலையில் உள்ள மகாலட்சுமி மில்லில்  தொடங்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக ஜீவாவும், டி.எல்.சசிவர்ணமும் பொறுப்பேற்றனர். தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அடங்கிய கோப்புக்கள் முதலமைச்சர் இராஜாஜி அவர்களின் மேசைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரசு அதற்கு செவிசாய்க்காததால் தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஜீவாவும் இணைந்து கொண்டார். இறுதியில், தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கம் சிறைவைக்கப்பட்டார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆண் தொழிலாளர்களும் சிறை வைக்கப்பட்டதால், பெண்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இறுதியில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்று நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தது. அதில், ஜீவா கையெழுத்திட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். அதன்பின்னர், மக்களிடையேயும் தொழிலாளர்களுக்கும் சோஷலிஸ்ட் கருத்துக்களை கொண்டு செல்ல 'ஜன சக்தி' என்னும் பத்திரிகையை தொடங்கினார்.

1939 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில், தொழிலாளர் போராட்டம் நடத்திய ஜீவாவை ஓராண்டு  கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தனர். இதனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும், சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் ஜீவா.

1940-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது கம்யூனிஸ்ட்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. அதனால் முக்கியத் தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இன்னும் சிலரோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அந்த சமயத்தில் ஜீவா அவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.வி.காட்டேவைச் சந்தித்தார். அதனால் ஜீவா நாடுகடத்தப்பட்டார். இரண்டாம் உலகப்போரில் பிரெஞ்சு அரசும் ஆங்கில அரசும் இணைந்து பங்கேற்றதால் பாண்டிச்சேரியிலும் ஜீவா அனுமதிக்கப்படவில்லை. இறுதியில், சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஜீவா, காரைக்காலுக்குச் சென்றார்.

1946-ல் கப்பற்படை எழுச்சியின்போது முன்னணி வகித்த அனைத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மீது ஆங்கில அரசு கடுமையான ஒடுக்குமுறை நடத்தியது. மாகாண அரசுகள், கம்யூனிஸ்ட்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தன. கட்சியின் கட்டுப்பாட்டால் ஜீவா போன்ற தலைவர்கள் 1946 நவம்பர் முதல் 1947 ஆகஸ்ட் வரை தலைமறைவாகவே இருக்க நேர்ந்தது. ஒருவழியாக 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் இந்திய திருநாடு விடுதலை பெற்றது. ஜீவா அதனை மகிழ்ச்சிபொங்க வரவேற்றார்.

ஜீவாவும் காமராஜரும்:

இந்திய விடுதலைக்குப்பின் ஜீவா தாம்பரத்திலுள்ள ஒரு குடிசைவீட்டில் தனது இரண்டாவது மனைவி பத்மாவதியுடன் தங்குகிறார். சில வருடங்களுக்குப் பிறகு, காமராஜர் முதலைச்சரான பிறகு பள்ளிக்கூடம் ஒன்றை திறக்க அங்கு வருகிறார். அந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் காமராஜர் ஜீவாவின் வீட்டிற்கு சென்று பள்ளி திறப்பிற்கு வருமாறு அழைக்கிறார். "நீ போடா. நான் பின்னாடியே வாரேன்" என்கிறார். பின்பு, ஒரு மணிநேரம் கழித்து பள்ளி திறப்பு விழாவிற்கு செல்கிறார் ஜீவா. "ஏன்டா இவ்வளவு தாமதம்?" என்ற காமராஜரிடம், "என்கிட்ட இருந்த ஒரு வேட்டியை துவைத்து காய போட்டிருந்தேன். அதான் காய்ந்ததும் கட்டிக்கிட்டு வந்தேன்" என்றார் ஜீவா. இந்திய அரசியலில், முதலமைச்சரின் நண்பர், சட்ட மன்ற உறுப்பினர் உடுத்துவதற்கு ஒரு வேட்டி மட்டும்தான் வைத்திருந்தார் என்பது வியக்கத்தக்க ஒன்றாகவே இருக்கிறது.

காமராசர் அவர்களின் ஆட்சியை இன்றளவும் போற்றுகின்றோம் என்றால் அதற்கு அவர்மட்டுமே காரணமில்லை. அவருடன் பணியாற்றிய அதிகாரிகளும், அமைச்சர்களும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நண்பர்களும்தான் காரணம். காமராஜரும் ஜீவாவும் அரசியலில் எதிர் எதிர் துருவத்தில் இருந்தாலும் மிகுந்த நட்புடனே இருவரும் இருந்தனர். ஒருவனின் வெற்றி மற்றும் தோல்வியானது அவனது நண்பர்கள் மற்றும் நண்பர்களின்  செயல்பாடுகள் தீர்மானிக்கிறது. அதற்கு ஜீவானந்தம் மற்றும் காமராசர் இடையேயான நட்பு ஒரு உதாரணம்.

ஜீவாவின் இறுதிக்காலம்:

1963 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் இரவன்று ஜனசக்தி மற்றும் தாமரை பத்திரிக்கைகளி$ன் அலுவல்களை முடித்துவிட்டு உறங்கச் சென்றவருக்கு திடீரென்று மார்புவலி ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நினைவு திரும்பிய  பின்னர் காமராசருக்கும் மனைவி பத்மாவதிக்கும் தெரியப்படுத்த சொல்லிவிட்டு உரங்கச் சென்றவர் அப்படியே உறங்கிவிட்டார்.

நன்றி,
ஊமை இளைஞன்