Wednesday 17 July 2019

காகிதப்பூக்களான கண்ணாடிப் பூக்களின் வாழ்க்கை..!!



செங்கதிரவன் செப்பனே தன் வேளையை துவக்கிவிட்டான். பச்சிளம் குழந்தையும் பால்குடித்துவிட்டு தவழ்ந்துகொண்டிருக்கிறது. கொக்கரிக்கும் சேவல்களும், கருநிறக் காக்கைகளும், கொஞ்சும் கிளிகளும், பறக்கும் குருவிகளும், அகவும் மயில்களும் இரைதேடத் துவங்கிவிட்டன. கடிகார முட்களும், தன் நாணயத்தை நிரூபிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், நீலவேணியோ நித்திரையில் இருக்கிறாள். முந்தைய நாள் இரவு தன் ஊரில் நடைபெற்ற பட்டிமன்ற போட்டியில் கலந்துகொண்டு தனது அணியின் வெற்றியில் களிப்புற்று உறங்க அதிகாலை 2 மணியாகிவிட்டது.

பெயர்தான் நீலவேணி ஆனால் அவள் நிறமோ மாமேனி. குளித்தலையில் உள்ள தெப்பக்குள தெருவில் அவள் அம்மாவுடன் வசித்து வருகிறாள். அவளது தந்தை இரண்டு வருடத்திற்குமுன் நடந்த வெடிவிபத்தில் காலமானார். அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகையில் ஒருவழியாக தன் பட்டப் படிப்பை முடித்தாள் நீலவேணி (உடன் அரசு கொடுத்த இழப்பீடும் முடிந்தது). பல கம்பெனிக்கு சென்று வேலைதேடிவிட்டு வேலை ஏதும் கிடைக்காததால் வீட்டிலேயே அம்மாவுக்கு உதவியாக இருக்கிறாள். இந்தவருடத்திற்குள் அவளுக்கு கல்யாணம் செய்துவைக்கவேண்டும் என்பது அவளது அம்மாவின் எண்ணம்.

பெண் பிள்ளையென்றால் “காலையில் 5 மணிக்கு எழுந்து, வாசலில் நீர் தெளித்து பின் கோலமிட்டு, பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி அதன்பின் சமைத்து முடித்துவிட்டு, வேறு ஏதாவது வேலையிருக்கா என்று பார்க்கவேண்டும்" என்ற அவளின் அம்மாவின் நினைப்பிற்கு அப்படியே நேரெதிர் நீலவேணி. பெண்ணென்றால் "ஆணுக்கு நிகரானவள். ஆண்களால் செய்யக்கூடிய அனைத்து நல்ல விஷயங்களையும் பெண்ணாலும் செய்ய முடியும்." என்ற நோக்கம் கொண்டவள். பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்களை வெளிக்கொணர்வதில் ஆர்வம் கொண்டவள். தனது தெருவில் உள்ள பெண்களை குழுக்களாக சேர்த்துக்கொண்டு "பெண்ணால் முடியும்"  என்ற அமைப்பின் தலைவியாக இருக்கிறாள். இந்த அமைப்பின் மூலம் “கணவனையிழந்து ஏழ்மையில் வாடும் பெண்களின், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு” உதவி வருகிறாள்.

சில மாதங்களுக்குப் பிறகு நீலவேணியின் தோழியொருத்தி அவளைக் காண வந்தாள். வெகுநாட்களுக்கு பிறகு இருவரும் காண்பதால், 'மழை பெய்யாமல் காய்ந்துபோன வறண்ட காட்டிலும் மகிழ்ச்சி வெள்ளமொன்று' முகம் நனைத்து செல்கிறது. இருவரும் புன்னகை மழையில் நனைந்து கொண்டிருந்தனர். மழையொன்று வந்தால் இடியும் வருமல்லவா? வந்தது ‘ஐயோ’ என்ற கூக்குரல்! ஆங்காங்கே அலறல் சத்தங்கள். அலறியடித்துக்கொண்டு ஓடும் மக்கள். என்னவாயிற்று? இருவரும் திகைப்புடன் திரும்ப,


தள்ளாத வயதிலும் தாடியுடன் வெண்தாடிக் கிழவரொருவர் பாதம் படபடக்க செல்கிறார். கைக்குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு தாயொருத்தி தள்ளாடிச் செல்கிறாள். பட்டிதொட்டியெங்கும் அலறல்கள் அடைந்துவிட்டது. கிணத்தடியில் தண்ணிக்கு சண்டைபோட்ட சனங்கயெல்லாம் ஜக்கம்மாவின் வீட்டின்முன் கூடியது. ஜக்கம்மாவின் ஒப்பாரியில் ஓரொரு செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் முழுவதும் கேட்க யாரும் முன்வரல. இருப்பினும், சொல்லும் ஆர்வத்தில் 'உண்மையை ஊமையாக்கி' ஆளாளுக்கு ஒரு செய்தி அருகிலிருந்தவர்களிடம். எதுவும் உண்மையில்லை. கடல்போல கூடிய கூட்டத்துல, கூட்டத்தின் முன்னே நீந்தி வந்தாள் நீலவேணி. ஜக்கம்மாவின் கண்ணை துடைத்தாள். கட்டியணைத்து காரணம் கேட்டாள. கரைபுரண்ட கண்ணீர் வெள்ளம் கவலை நிறைந்து கண்களிலே நின்றது ஜக்கம்மாளுக்கு. தன் விதியை நினைத்து விவரிக்க துவங்கினாள்.


ஒத்தப் புள்ளையொன்னு
உசுருபோக பெத்தெடுத்தேன்...

கண்ணு படாமலிருக்க
கருத்தம்மானு பெருவச்சேன்...

ஆத்தான்னு கூப்பிடத்தான்
ஆசைப்பட்டு வளத்துவந்தேன்...

கண்ணூமணியவளுக்கு
காது ரெண்டும் கேக்கலையே...

ஆறு வயசாச்சு இன்னும்
ஆத்தான்னும் கூப்பிடல...

விதியேனு நானிருந்தேன்
வீதிவரை போயிவந்தேன்...

உறவா நினைச்சுதானே
விட்டுபுட்டு ஊறுபோனேன்...

பாம்புதான் தீண்டுமா
இந்த பாலுமுகம் பாக்கையிலே...

காமப் பசிதான் தோணுமா
பச்சப்புள்ள அவ கதறயிலே...!!


ஜக்கம்மாவின் மகள் கருத்தம்மா.  பெயருக்கேற்றாற்போல் கருத்தாகவும்  கருப்பாகவும் கலையாகவும் இருப்பாள். வான்பறக்கும் மேகமும் கருத்தம்மாவின் புன்னகையை சற்றுநேரம் ரசித்து செல்லும். சந்தனக் காற்றும் கருத்தம்மாவின் கன்னம் உரச காத்திருக்கும்.  சூறைக்காற்றும் அவளை சூழ்ந்து விளையாடிக்கொள்ளும். இரத்தம் கேட்டிடும் மிருகங்களும், கருத்தம்மாவிடம் முத்தம் கேட்டுச்  செல்லும். மொத்தத்தில் குழந்தைகளும் கொஞ்சிடும் குழந்தையவள். ஆனால் ஏனோ ஆண்டவன், தன்னைப்போலவே 'பேசும் திறமையையும் கேளும் தன்மையையும்' தர மறுத்துவிட்டான்.  வரும் ஆடி முடிந்தால் ஆறு வயது முடிகிறது கருத்தம்மாளுக்கு.


கடந்த திங்களன்று ஜக்கம்மா கடைத்தெருவுக்கு காய்கறி வாங்க சென்றாள். செல்லும்முன், பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கருத்தம்மாவை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டாள். வீடு திரும்பிய ஜக்கம்மா விவரமறியா  பிள்ளையின் முகம்கண்டு கணக்கிறாள். காலிடையில் காயம்கண்டதும் கனத்த நெஞ்சம் வெடிக்கிறது. காரணம் கேக்கிறாள். கருவிழிகள் கண்ணீரில் மூழ்குகின்றது. விவரிக்கமுடியா சோகங்கள் அரங்கேறுகிறது. நெஞ்சம் படபடத்து வார்த்தைகள் தடம்புரண்டு வெளியேற துடிக்கின்றது. பின் ஐயோ என வெடித்து வெளியேறுகிறது. ஆறு வயது குழந்தையை அருகிலுள்ளவர்களிடம்  விட்டுச்செல்வது தவறா? தவறுதான். ஆறு வயது முடிவதற்குள் அவள் அழகை அழித்து விட்டான் ஆறறிவு அரக்கன். காய்கறி வாங்கிவருவதற்குள் கருத்தம்மாவின் உடலை காயமாக்கிவிட்டான் காமுகனொருவன். அதுசரி, கருணைகாட்ட வேண்டிய குழந்தைகளிடம் காமத்தை காட்டும் மிருகங்கள், பாசம் காட்டவேண்டிய குழந்தையை படுக்கைக்கு அழைக்கும் படுபாவிகள் பசுந்தோல் போர்த்திய புலிகளாய் உலாவும் உலகமல்லவா இது!.


நீலவேணி கருத்தம்மாவின் அருகில் செல்கிறாள். கட்டியணைக்கிறாள். விவரிக்கமுடியா வேதனைகள் உள்ளுக்குள்ளே ஆனால் கண்ணீரைத் தவிர வேறொன்றும் இல்லை. உண்மையும் ஊமையாய் நிற்கிறது கருத்தம்மாளுடன். ஊரே அங்கு திரண்டதால் ஜக்கம்மாவின் வீடே பஞ்சாயத்து தளமானது. ஊர்ப் பெரியவர் "இந்த பாவ காரியத்தை செஞ்சவன் எவனாயிருந்தாலும் இங்க வந்து சொல்லிப்புடுங்க.. இல்லாட்டி விஷயம் போலீசுக்கு போயிடும்" என மிரட்டுகிறார். ஆனால், யாரும் ஒத்துக்கொள்வதா தெரியல. விஷயம் போலீசுக்கு போயிடுச்சு. நீலவேணியின் "பெண்ணால் முடியும்"  என்ற அமைப்பின்மூலம் வழக்கு தொடரப்படுகிறது. சிறப்பு தனிப்படை காவல்துறையினரால் அமைக்கப்படுகிறது.


செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறுகிறது. சமூக வலைத்தளங்களில் ஆதரவுகள் பெருகுகிறது. கொச்சை வார்த்தைகள் கோலோச்சுகிறது. ஆதரவாக, வாட்ஸப் ஸ்டேட்டஸ்கள் மற்றும் மெமீஸ்கள் பெருகுகிறது. ஷேர் மற்றும் லைக்குகள்  பறக்கிறது. அரசியல் ஆதாயங்கள் ஜக்கம்மாவின் வீடு தேடிச்செல்கிறது. ஒவ்வொரு சாதிக்கும் ஓட்டுகள் பிரிகிறது. புதிய செய்திகள் வருகிறது. லைக்குகள் குறைகிறது. தலைப்பு செய்திகள் காகிதப்பூப்போல் காய்ந்துபோகிறது. உடைந்தது என்னவோ கருத்தம்மாவின் கண்ணாடி வாழ்க்கை மட்டுமே. இறுதிவரை, ஜக்கம்மாளும் நீலவேணி மட்டும் அடிக்கடி காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர் (வந்து வந்து கால்தான் தேய்ந்தது காமுகனை கண்டபாடில்லை). 

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment