Sunday 20 October 2019

பஞ்சமி நிலங்களும் அதன் வரலாறுகளும்!


நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் வைக்கப்பட்ட சில காட்சிகள் பஞ்சமி நிலம் மற்றும் மீட்பு பற்றி பேசியது. அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அதனை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலினை, பாமக நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள்,"திமுகவின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக  குற்றம்சாட்டினார். ஆனால் திரு. ஸ்டாலின் அவர்கள் அதனை மறுத்து, "அஃது பட்டா நிலமல்ல, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம்" எனக்கூறி 1985 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட மனைப்பத்திரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால், இன்றளவும் பிரச்சனை ஓயவில்லை. ஒருபுறம் இது இருக்க, திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் "பஞ்சமி நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் உரியவர்களிடம் திருப்பித் தரவேண்டும்.  அத்துடன், அரசு பஞ்சமி நில மீட்புக்குழு ஒன்றை அமைத்து உரியவர்களுக்கு அதனை அளித்திடவேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். பஞ்சமி நிலம் என்றால் என்ன? ஏன் அதை திருப்பி ஒப்படைக்கவேண்டும்? ஏன் அது உருவாக்கப்பட்டது? எனப்பல கேள்விகளுக்கு இங்கு விடையைக்  காண்போம். பஞ்சமி நிலங்கள் என்றால் என்பதை பார்ப்பதற்கு முன்னால் அது உருவாக்கப்படக் காரணமான மிராசிமுறைப் பற்றிக்காண்போம்.

மிராசி முறை:

கிராமத்துக்குப் பொதுவாக இருந்த நிலங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களை மிராசுதாரர்கள் என அழைத்தனர். இதற்கு மிராசிமுறை என பெயரிடப்பட்டது. அத்துடன், அந்த நிலங்களை குத்தகைக்குவிட்டு வரிவிதிக்கவும், வரிவசூல் செய்து ஆங்கிலேய அரசிடம் செலுத்தவும் அனுமதியளிக்கப்பட்டது. உடன், கிராமத்தில் இருந்த தரிசு நிலங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு விடப்பட்டது. அதனை அவர்கள் விருப்பப்பட்டவர்களுக்கு கொடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டது. இதனால், ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஏற்கெனவே, சாதியரீதியாக பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு, தரிசு நிலங்களைக்கூட பயன்படுத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது. அரசும், தரிசுநிலம் வேண்டி யாரெனும் மனு அளித்தால் மிராசுகள் அனுமதியளித்தபின்பே அவர்களுக்கு அனுமதிவழங்கினர். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க மறுத்தனர். காரணம், நிலமற்றவர்களுக்கு நிலங்களை வழங்கினால், தங்களது நிலத்தில் வேலைசெய்ய வரமாட்டார்கள் எனவும் வீட்டுவேலைகளுக்கு உகந்த இவர்களை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவேண்டும் எனவும் எண்ணினர்.  

 ஜேம்ஸ் ட்ரெமென்கீர்:


1891 ஆம் ஆண்டு,  அன்றைய செங்கல்பட்டு மாகாணத்தின் ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்னும் ஆங்கிலேய அதிகாரி "பறையர்கள் பற்றிய குறிப்புகள் (Notes of Paraias)" என்னும் பெயரில் அறிக்கையொன்றை தயாரித்து ஆங்கிலயே அரசிடம் ஒப்படைத்தார். அதன்படி, "ஒடுக்கப்பட்ட மக்களின் வாழவை மேம்படுத்த வேண்டுமாயின், அவர்களுக்கு நிலங்கள் வழங்கவேண்டும்" என அந்த அறிக்கை கூறியது. இந்த அறிக்கை, 1892 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ஆங்கிலய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் , பஞ்சமி நில சட்டம் என அழைக்கப்பட்டது.

பஞ்சமி நில சட்டம்: 

ஒடுக்கப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில், ஆங்கிலய அரசால் இயற்றப்பட பஞ்சமி நில சட்டத்தில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இருந்தன. இந்த சட்டத்தின்படி, 

1) பஞ்சமி நில சட்டத்தின்படி அளிக்கப்பட்ட நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். 

2) முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்ககோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. 

3) வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.

பஞ்சமி நில சட்டத்தின் மூலம் மதராஸ் மாகாணத்தில் மட்டும் சுமார் 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், தரிசு நிலம் எனவும் வகைப்படுத்தினர்.

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு: 

இந்திய விடுதலைக்குப்பிறகு, 1950-களில் ஆச்சார்ய வினோபா அவர்களின் பூமிதான இயக்கத்தின்படியும், 1960-களில் வந்த கூட்டுறவு திட்டத்தின்படியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அரசு மக்களுக்கு எவ்வளவுதான் நலத்திட்டங்களை வகுத்திட்டாலும் அந்தத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதில்லை. மேலும், இன்றளவும் பெரும்பாலான திட்டங்களை பற்றிய புரிதல் இன்றளவும் வெகுமக்களை சென்றடைவதில்லை. இதன்காரணமாக, சாதியரீதியன தாக்குதல் மற்றும் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையால் பெரும்பலான நிலங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரிடமிருந்து பறிக்கப்பட்டது. சிலர் ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரிலேயே நிலங்களை வாங்கி அனுபவித்து வருகின்றனர்.

பஞ்சமி நில மீட்பு போராட்டம்: 

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் உள்ள திருவண்ணாமலை, வடஆற்காடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஏறத்தாழ 77 சதவீத பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இதன் எதிரொலியாக, முதல் பஞ்சமி நிலமீட்பு போராட்டம், 1994 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கியது. இந்த போராட்டத்தில், ஜான் தாமஸ் மற்றும் ஏழுமலை என்னும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டம் வலுபெறவே, 1996 ஆம் ஆண்டு அன்றய அதிமுக அரசு பஞ்சமி நிலமீட்புக் குழு ஒன்றை அமைத்தது ஆனால் அவர்களின் ஆட்சி முடிவடைந்ததால் அஃது கிடப்பில் போடப்பட்டு, பத்து வருடங்கள் கழித்து, 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுகவால் மீண்டும் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதிலும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் மீண்டுமொரு குழு அமைக்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. 

1892 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சமி நிலம் சார்ந்த சட்டம் 127 ஆண்டுகள் முடிவடைந்தும் இன்றும் தொடர்கிறது. இதற்கு காரணம் பொறுப்பற்ற ஆட்சியாளர்களின் மனநிலைதான் முக்கிய காரணம். ஒருவேலை அவர்களே பல இடங்களில் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்திருப்பதால் என்னவோ இன்றளவும் எந்தவொரு முடிவும் எட்டாமல் உள்ளது.

நன்றி,
ஊமை இளைஞன்

Thursday 17 October 2019

வாழை நார் மற்றும் பருத்தி துணியிலிருந்து நாப்கின் தயாரிப்பு!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தாலும் சில அத்தியாவசியமான பொருட்களின் தயாரிப்பில் பிளாஸ்டிக்குகள் முக்கிய பங்குவகிக்கின்றன. அவற்றில், ஒருமுறை பயன்படுத்தி எறியப்படும் நாப்கின்கள். பெண்கள் தன் வாழ்நாளில் சுமார் ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் நாப்கின்களை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. செயற்கையாக தயாரிக்கப்படும் நாப்கின்களின் விலை அதிகமாக உள்ளதாலும், ஒருமுறை மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என்பதாலும், பலர் இயற்கை நாப்கின்களை நோக்கி நகர்கின்றனர். அந்த வகையில், வாழை நார் மற்றும் பருத்தித் துணிகளிலிருந்து நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

செயற்கை நாப்கின்கள் தயாரிக்கும் முறை:


நாப்கின்களில் முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக்கினாலும், இரண்டாவது லேயர் ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ பேப்பரைக்கொண்டும், மூன்றாவது லேயரில் ஜெல்லும் (பெட்ரோலிய பொருளால் தயாரானது), நான்காவது லேயரில் பாலித்தீனும் (நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை) கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இரண்டாவது லேயரில் உள்ள டிஸ்யூ பேப்பரை ப்ளீச் செய்ய ஹைப்போ குளோரைட் மற்றும் டையாக்சின் போன்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டையாக்சின் வேதிப்பொருளானது அதிகநேரம் பெண்களின் பிறப்புறுப்பின்மீது உபயோகப்படுத்தும் போது, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த நாப்கின்கள் மக்குவதற்கு சுமார் 60 வருடம் எடுத்துக்கொள்வதுடன் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.

வாழை நாரிலிருந்து நாப்கின்கள்:


டெல்லியில், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உதவியுடன் ‘சான்பே’ என்ற தொழில்முனைவு நிறுவனம், வாழை நாரிலிருந்து சானிட்டரி நாப்கின்களை தயாரித்துள்ளது. இதுபற்றி, சான்பே நிறுவனத்தின் அதிகாரி ஆர்சிட் அகர்வால் கூறுகையில்," இன்று சந்தைகளில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் செயற்கைப் பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால், அவை மக்குவதற்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகும். பலர் இதை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதால் தொற்று நோய் ஏற்படும் பாதிப்பும் உள்ளது." என கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறிய அகர்வால், "நாப்கினை எரிப்பதனால் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் வெளிபடுகிறது. அதே நேரம் இதன் விலையும் அதிக அளவில் உள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் எங்கள் நிறுவனம் வாழை நாரில் நாப்கின் தயாரிக்க முடிவு செய்தோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த நாப்கின்கள் 2 ஆண்டுகள் வரை இருக்கும், இவற்றை 120 முறை வரை மீண்டும் பயன்படுத்தலாம். மேலும் 199 ரூபாய்க்கு இரண்டு நாப்கின்கள் விற்க உள்ளோம்" எனவும் கூறினார்.

பருத்தி துணியிலிருந்து நாப்கின்கள்:




கோவையில், தையல் தொழிலில் ஈடுபட்டு வந்த இஷானா என்னும் பெண்,  பருத்தித் துணியிலிருந்து நாப்கின்களை உருவாக்கி விற்பனை செய்துவருகிறார். இதுபற்றி அவர்கூறுகையில், "நம் உடலை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டும். பருத்தித் துணியில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின்கள் எளிதில் மக்கும் தன்மையுடன் இருக்கிறது. அத்துடன், இதனை பயன்படுத்திவிட்டு மீண்டும் துவைத்து உபயோகிக்கலாம். இந்தவகையான நாப்கின்களை பயன்படுத்துவதால் நம்முடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது" என்றார்.

இயற்கை நாப்கின்களின் நன்மைகள்:


> இயற்கையான நாப்கின்களில் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மாறாக, வாழை நார் மற்றும் பருத்தித் துணிகளால் தயாரிக்கப்படுவதால் எளிதில் மக்கும் திறனைக் கொண்டது. சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்காது.

> முக்கியமாக, வேதிப்பொருட்கள் எதுவும் கலக்கவில்லை என்பதால் நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

> செயற்கை நாப்கின்களுக்கு செலவிடும் தொகையைவிட இதற்கு செலவிடும் தொகை குறைவு.

எந்தன் உளறல்: அறிவியல் எந்த அளவுக்கு நம்மை முன்னேற்றி இருக்கிறதோ அதே அளவில் சுற்றுச்சூழலை பாதித்திருக்கிறது. அதனை பாதுகாப்பது நம் தலையாய கடமை மட்டுமல்லாது அடுத்த சந்ததிகளுக்கு பாதுகாப்பான உலகை விட்டுச்செல்வது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆதலால், அனைத்திற்கும் செயற்கையையே சார்ந்திராமல் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ளவேண்டும். அரசும், இந்த மாதிரியான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோரை அங்கீகரித்து மக்களுக்கு பயன்படும் வகையில் உதவிசெய்திட வேண்டும்.

நன்றி,
ஊமை இளைஞன்

Friday 11 October 2019

மொபைல் செயலி (App) மூலம் வைட்டமின் குறைபாட்டை அறியலாம்!


நம் உடலில் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரும் நம்மை பரிசோதித்துவிட்டு, உங்களுக்கு ஊட்டச் சத்துக்குறைபாடு உள்ளது ஆதலால் நல்ல வைட்டமின் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுங்கள் என்று கூறுவார். அத்துடன், வைட்டமின் மாத்திரைகளை மருந்துச் சீட்டில் எழுதித் தருவார். மருத்துவமனையின் வசதிக்கேற்ப கட்டணத்தையும் செலுத்திவிட்டு மாத்திரைகளை வாங்கிவருவோம். இந்த நிலை தற்பொழுது மாறவுள்ளது. ஆம், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களின் வருகைக்குப் பின்னர், செல்போன்கள் மனித வாழ்வியலின் அங்கமாக செயல்படுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிந்துகொள்ளவும், தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் பயன்பட்டுவந்த செல்போன்களைக்கொண்டு வைட்டமின் குறைபாட்டினைக் கண்டறியும் செயலி (APP) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

வைட்டமின் குறைபாடு:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தால் உணவின் தேவை மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. கலப்பட உணவுகளால் கிடைக்கும் உணவும் சத்தானதாக இருப்பதில்லை. கலப்பட உணவை உட்கொள்ளும்போது உடலின் ஊட்டச்சத்துக்கள் குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகவேண்டியிருக்கிறது. உலகில் வைட்டமின் குறைபாடுகளால் 2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிபேர் ஜிங்க் வைட்டமின் குறைபாட்டால் உயிரிழந்துள்ளனர். இரும்பு மற்றும் கால்சியம் வைட்டமின் குறைபாட்டால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் இறக்கின்றனர். இந்த வைட்டமின் குறைபாடுகளை மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்வதில் இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்ட-கேம் (Vita - Cam)


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டிலுள்ள அஜ்மன் என்னும் பல்கலைக்கழகத்தில் பயிலும் அஹமத் சைப், முகமத் ஐட் காசீம், வெஸ்ஸம் ஷெஹிப் மற்றும் சைபிதின் ஓ.எஸ். அல்ஹகாயினி என்னும் மருத்துவ மாணவர்கள் இணைந்து உடலின் கண், நாக்கு, உதடுகள் மற்றும்  நகங்களை படமெடுத்து (Photos) அதன்மூலம் உடலிலுள்ள வைட்டமின் சத்துக்குறைபாடுகளை உடனடியாக அறிந்துகொள்ளும் செயலியை வடிவமைத்துள்ளனர். அத்துடன், இந்த செயலிமூலம் வைட்டமின் குறைபாட்டை சரிசெய்வதற்கு என்ன செய்யவேண்டும்? என்னென்ன சாப்பிடவேண்டும்? என்ற தகவல்களையும் பெறமுடிகிறது. இந்த செயலிக்கு வைட்ட-கேம் (Vita - Cam) அதாவது வைட்டமின் கேமரா (Vitamin - Camera) எனப்பெயரிட்டுள்ளனர். இந்த செயலியை உருவாக்கியதற்கு அவர்களுக்கு AED 50,000 (இந்திய மதிப்பில் ரூ. 966,920.30) பரிசாக வழங்கப்பட்டது.

வைட்ட-கேம் செயல்பாடு:


முதலில் வைட்டமின் குறைபாடுகள் மற்றும் அதன் அறிகுறிகளின் மாதிரிகள் (புகைப்படங்கள்)சேகரிக்கப்படுகிறது. அதாவது, வைட்டமின் குறைபாடுள்ள நபரின் கண், நாக்கு, உதடுகள் மற்றும் நகங்களின் அமைப்பு, வடிவம், நிறம் அல்லது தோற்றம் போன்றவை சேகரிக்கப்படுகிறது. படமெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பின் புகைப்படத்தையும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்து பிரித்தெடுக்கப்படுகிறதுபின்னர், பிரித்தெடுக்கப்பட்ட மாதிரிகளின் தன்மைக்கேற்ப அவர்களின் வைட்டமின் குறைபாடுகள் திரையில் தோன்றுகிறது. மேலும், வைட்டமின் குறைபாட்டின் தன்மைக்கேற்ப அவர்கள் என்னென்ன உணவு எடுக்கவேண்டும்? என்ற தகவலைக் கொடுக்கிறது. உதாரணத்திற்கு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கீரைகள் சாப்பிட வேண்டும் போன்ற தகவல்களை வழங்குகிறது.

வைட்ட-கேம் செயலியின் எதிர்கால திட்டங்கள்:

தற்போது உள்ள செயலியின் மூலம் எப்படி குணப்படுத்துவது? என்னென்னெ சாப்பிடவேண்டும்? போன்ற தகவல்கள் மட்டுமே அடங்கியுள்ளது. வரும் காலங்களில், மருத்துவத்துறையில் சிறந்த வல்லுநர்களை செயலியுடன் இணைத்து அவர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளுமாறு செயலியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கென குறைந்த கட்டணத்தை வசூல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

நன்றி,

  • ஊமை இளைஞன் 

Wednesday 9 October 2019

ஆபத்தில் முடிந்த அறிவுரை - சிறுகதை


நம் வாழ்வில் சந்திக்கும் சில பிரச்சனைகளில் முக்கியமானது "அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறி, அதில் தாமே மாட்டிக்கொள்வது". அதைப்பற்றிய ஒரு சிறுகதையை இங்கு காண்போம். இந்தக் கதையை சிறுவயதில் நீங்கள் கேட்டிருக்கலாம். அக்கதையுடன் எனது சிறிய கற்பனையை சேர்த்துள்ளேன். பிடித்திருந்தால் பகிருங்கள்:

அடர்ந்த ஒரு காட்டிலே நெடிய மரங்கள். மரத்திலே பல கிளைகள். கிளைகளின் இடையிலே பல கூடுகள். கூட்டுக்குள்ளே பல வண்ணப் பறவைகள். பறவைகளிலே, தூக்குனங்குருவி ஒன்று கூட்டுக்கு வெளியே தன்
சிறகுகளை சிற்றலைகளாய் சிறகடித்துக்கொண்டிருக்கிறது ஒருபுறம்.

அதே அடர்ந்த வனத்திலே, வகைவகையான விலங்குகள் விதவிதமான ஒலிகளுடன். ஊரும் பாம்புகள், மேயும் மான்கள். மான்களை வேட்டையாடிடும் சிங்கங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள். அவைகள் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சிகளை ருசிக்க காத்திருக்கும் ஓநாய்கள், கழுகுகள் மறுபுறம்.

இவ்விரண்டு பகுதிகளுக்கிடையே மரங்களிலும் , நிலங்களிலும் தாவிக் குதித்துக்கொண்டிருக்கிறது குரங்கொன்று. குரங்கிற்கு குடிலில்லை. குடில் இருக்கவும் அதற்கு அவசியமில்லை.

வெண்மேகம் கருக்கிறது. மஞ்சள் வெயிலும் மறைகிறது. சூறைக்காற்று திக்குமுக்காடி சுதந்திரமாய் திரியுது. அரைமணித்துளி கடந்தபின்னே ஆர்ப்பரித்து ஆனந்தமாய் அடர்ந்த காட்டை அடைகிறது மழைத்துளி.

சிறுதுளியொன்று தூக்குனங்குருவிமீது விழுகையில் பதறிப்போய் பனைமரத்தின் மேலுள்ள தன் கூட்டுக்குள் சென்றது. சிங்கங்களும், சிறுத்தைகளும் அதனதன் குகைக்குள் சென்றன. ஊரும் பாம்பும் தாவும் மான்களும் தத்தம் இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டன. அதுவரை  துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த குரங்குகள் மட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தது.

கூட்டிற்கு வெளியே முதலில் தன் அலகையும் பின்னர் தலையையும் நீட்டிய அந்த குருவி, மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த குரங்கொன்றை கண்களால் கண்டது. கண்டதும் அதன்மேல் கரிசனம் கொண்டது.

குரங்கை நோக்கி, "குதூகலித்த நாட்களில் கொஞ்சம் செலவிட்டு குடில் அமைத்திருந்தால், மழையில் நனைந்து குளிரிலிலே நடுங்கி வேதனையுறுவதை தவிர்த்திருக்கலாமல்லவா? இம்மழை பொய்த்து பின்வரும் கோடை காலத்தில், தங்களின் குதூகலத்தை கொஞ்சம் ஒதுக்கி குடில் அமையுங்கள். எதிர்வரும் காலத்தில் இன்பமாய் வாழுங்கள்" எனக்  கூறிக்கொண்டிருக்கும்போதே பேரிடி வந்து பிரளயத்தை உண்டாக்கியது. குருவியும் கூட்டிற்குள் சென்றது. குரங்கு சிந்தனையில் மூழ்கியது.

மழை நின்றது
மதி வந்தது - உடன்
உயிர்களுக்கு உறக்கமும் வந்தது.

விடியும் நேரம் ....

கதிரொளி கிளம்பியது
காரிருள் விலகியது
உறக்கம் கலைந்தது
பறவைகள் பறந்தன
ஊர்வன ஊர்ந்தன
விலங்குகள் நடந்தன
உணவின் தேடலை தொடங்கின சிந்தனையின் மூழ்கிய குரங்கைத் தவிர...

"சின்னஞ்சிறு குருவி எனக்கு அறிவுரை கூறுவதா?" என எண்ணத் தொடங்கியது.

கண் விழித்தது
கர்வம் கொண்டது
மரத்தின்மீது ஏறத்தொடங்கியது.

உச்சியை அடைந்தது
இடக்கை மரத்தில்
வலக்கை கூட்டில்
எறிந்தது கூட்டை
அஃது அடைந்தது காட்டை.

மீண்டுமொரு மாலைப் பொழுது...

இரைதேடச் சென்ற குருவி தன்னலகில்
தானியங்களை சுமந்து வந்தது.

மரத்தின் உச்சியை அடைந்தது
அடைந்தபின், உருக்குலைந்து நின்றது.

மரத்தைச் சுற்றிலும் மணிக்கணக்காய் சுற்றியது.

ஏளனச் சிரிப்போன்று எதிர்த்திசையில் கேட்டது!

யாரென்று பார்த்தது.

மரத்திலே மந்தியொன்று மதிமழுங்கிய  நிலையில்...

கனியளவு குருவிக்கும் காடளவு கோபம் வந்தது. தன்னிலை நினைத்து, "குண்டுமணிக் கண்ணிலும் குடங்குடமாய் கண்ணீர் வந்தது".

கோபம் கலந்த சோகத்தில்,"ஆனதுக்கு புத்தி சொன்னா அறிவுண்டு நெனவுண்டு, இந்த ஈனனுக்கு புத்தி சொல்லி இல்லறத்தை இழந்துவிட்டேனே" எனக் கூறியது.

அதாவது, நாம் சொல்லக்கூடிய அறிவுரையை சரியான நபர்களிடம் சொல்லவேண்டும். அத்துடன் அதனை கேட்டு நடப்பவராக இருத்தல்வேண்டும். நாம் சொல்லக்கூடிய அறிவுரையால் நமக்கு துன்பம் ஏற்படாமல் இருத்தல்வேண்டும் என்பதே இக்கதையின் மையக்கருத்து.

நன்றி,
ஊமை இளைஞன்