Tuesday 18 February 2020

சத்துணவு திட்டத்தின் தந்தை - எல்.சி.குருசாமி


மூன்று வயதே ஆகியிருந்த நான், எனது தாயார், தமையனார் மூவரும் பட்டினி கிடந்தபோது, பக்கத்துவீட்டுத் தாய் முறத்தில் வைத்து அரிசி கொடுப்பார். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, சாப்பிட்டிருக்காவிட்டால், நாங்கள் இந்த உலகத்தை விட்டே மறைந்திருப்போம். பசித்தால் அழமட்டுமே தெரிந்த வயதில், பசிக்கொடுமைக்கு ஆளாகும் அனுபவத்தை நான் இளமையில் அறிந்ததன் விளைவுதான் இந்தத் திட்டம்" என்று தனது சத்துணவு திட்டத்தின் துவக்க விழாவில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியிருந்தார். அத்துடன், இந்த சத்துணவு திட்டமானது தனது கனவு திட்டம் எனவும் கூறியிருந்தார். அப்படிப்பட்ட திட்டத்திற்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியவர் யார் என்ற கேள்வி எழும்போது நம் நினைவிற்கு வருவது இருவர் மட்டுமே. ஒருவர் கர்மவீரர் காமராசர், மற்றொருவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் உண்மையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியவர் ராவ் சாகிப் எல் சி குருசாமி அவர்கள். ஆம், அவரைப் பற்றிய சிறுதொகுப்புதான் இந்தப்பதிவு.

எல்.சி. குருசாமி:


1885 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிறந்த குருசாமி அவர்கள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியில் 10 ஆண்டுகள் சட்டமேலவை உறுப்பினராகவும் (1920 - 1930), 22 ஆண்டுகள் கௌரவ நீதிபதியாகவும் பதவி வகித்தார். "மக்களின் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டுமாயின் ஆதிக்குடிமக்கள் வெளியரங்குக்கு வந்து, தாங்கள் தங்கள் பிறப்பினால் பெருமை அடைவதாகச் சொல்லவேண்டும்" என வலியுறுத்தினார் அத்துடன் ' கல்வி பயில மக்கள் தவறுவார்களானால் அது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும்" எனவும் எச்சரித்தார். அரசுப் பணிகளில், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று நம்பிக்கை உடையவர்களைச் சேரிகளில் பணி செய்ய நியமனம் செய்வது, பயனற்ற ஒன்று. சேரிகளில் உண்மையாகவே சிறப்பான அளவுக்கு பணிகள் நடைபெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்யுங்கள் என வலியுறுத்தினார். 

இரவுப் பள்ளிகள்:

தலித்துகளிலும் தலித்துக்கள் என்று அழைக்கப்பட்ட அருந்ததியர்கள் நலனுக்காக, 1921-ல் அருந்ததிய மகாசபா என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தலைவராக குருசாமியும், செயலாளராக எச்.எம். ஜெகநாதமும் செயல்பட்டனர். இவ்விருவரும், சென்னை மாகாண அவை உறுப்பினர்களாக பொறுப்பு வகித்ததால், அருந்ததிய மகாசபா பொறுப்பினை அருந்ததியர் மற்றும் இதர ஒதுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் களமாக பயன்படுத்திக் கொண்டனர். 

பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த அக்காலங்களிலேயே பெண்கள் கல்வி கற்கவேண்டும் எனவும், ஆண்களுக்கு நிகரான கல்வியைப் பெறுவதற்கு, இருபாலர் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆரம்பம் முதலே மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்ட இவர்கள், பகலில் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக இரவுப் பள்ளிகளை திறக்க எண்ணினர். அதன் முயற்சியாக,  1921ஆம் ஆண்டு, சென்னையில் புளியந் தோப்பு, சூலைமேடு, பெரியமேடு ஆகிய பகுதிகளில் இரவுப்பள்ளிகளையும், பெரம்பூரில் இரவு மற்றும் பகல் பள்ளிகளையும் தொடங்கி 1929 ஆம் ஆண்டுவரை நடத்தி வந்தனர். இந்த ஐந்து பள்ளிகளின் தாளாளராக, குருசாமி அவர்களே செயல்பட்டார். ஆசியர்களுக்கான சம்பளம் உட்பட இதர செலவினங்களுக்கான நிதியை, தொழிலாளர்துறை சார்பில் பள்ளியின் தாளாளர் குருசாமி மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு எவ்விதமான சம்பளமும் வழங்கப்படவில்லை. சமுதாயப் பணியில் தலைமைப் பாங்குடன் பணியாற்றிய இந்தியர்களை கௌரவிக்கும் வகையில் 1927 ஆம் ஆண்டு அவருக்கு 'ராவ் சாகிப்' என்ற விருது அளிக்கப்பட்டது. 

மதிய உணவுத் திட்டம்:


”எங்களது குழந்தைகளின் உடனடியான தேவைகளில் ஒன்றாகக் கல்வி அமைகின்றது. அக்குழந்தைகளுக்கு அரசு வழங்குகிற வசதிகள் என்பவைகூட கல்வியில் நாட்டம் செலுத்த அவர்களைத் தூண்டப் போதுமானவையாய் இல்லை என்கிற அளவுக்கு எங்களது வறுமை கொடுமையானதாக உள்ளது. அரசின் செலவில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு நேர உணவையாவது அவர்கள் பெறக்கூடிய அளவிற்கு, அவர்களது கல்விக்காகக் கூடுதல் தொகை செலவு செய்யப்பட வேண்டும்.”  என 1923 - ஆம் ஆண்டே அன்றைய நீதிக்கட்சியின் சட்டமேலவை உறுப்பினராக இருந்த எல் சி குருசாமி உரையாற்றினார். அதன்வாயிலாகவே, "பசியோடு வந்து, பசியோடு படித்து, பசியோடு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, பள்ளிகளிலேயே ஒருவேளை உணவு வழங்கப்படும் " என, சென்னை மாகாணத்தின் அன்றைய மேயர் திரு. பி.டி. தியாகராஜன் அவர்களால் சென்னையிலுள்ள சேத்துப்பட்டு, கோரப்பாளையம் முதலிய பகுதிகளில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இந்த மதிய உணவுத் திட்டமானது, மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் உணவின் செலவானது ஒரு அணாவை மிஞ்சக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிறைவேற்றப்பட்டது. மதிய உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. ஆரம்பத்தில், இந்த திட்டமானது சென்னை மாகாணத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. நாடெங்கிலும் செயல்படுத்த திட்டமிட்ட அரசு எண்ணியபோது, மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், உணவிற்கு ஆகும் செலவானது அதிகரித்தது. எனவே அன்றைய ஆங்கிலேய அரசானது இந்தத் திட்டத்தை கைவிடுமாறு ஆணை பிறப்பித்ததுடன் அதற்கான நிதியையும் நிறுத்தியதால், 1925 ஏப்ரல் 1 முதல் மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதன்விளைவாக, பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகை குறைந்தது.

இந்தத் திட்டத்தின் நீட்சியாகவே, 1955 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி, காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவந்தார். ஆனால் அரசுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்ட காரணத்தால், இதற்கு ஆகும் செலவில், 60 சதவீதம் அரசும், 40 சதவீதம் மக்களிடமும் பெறப்பட்டது. அதன்பின்னர், எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழகம் முழுவதும், பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அங்கன்வாடி மையங்களை தோற்றுவித்து சிறு குழந்தைகளும் பசியாறும் வண்ணம் வழிவகை செய்தார். அதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆர் காலத்தில் சத்துணவு திட்டத்தை எதிர்த்த கலைஞர், தான் ஆட்சிக்கு வந்தபிறகு, மதிய உணவில் முட்டை சேர்த்தார், ஜெயலலிதா மதிய உணவோடு முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் சேர்க்க, அவர்களுக்கு பின்னர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்தாண்டு (2020), பள்ளிகளில் காலை உணவை கொடுக்க வழிவகை செய்துள்ளார். 

அரசு செயல்படுத்தும் சில இலவசத் திட்டங்கள், சிலருக்கு 'வீண் செலவு' என்று நினைக்கலாம், சிலருக்கு தேவையில்லாததாகவும், தவறாகவும் தோன்றலாம் ஆனால் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தால், கடைக்கோடியில் உள்ள ஏதோ ஒரு குடும்பம், அந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

இன்றைய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள், தனியார் பள்ளிகளில் படிப்பதையே கௌரவமாக எண்ணுகிறார்கள். ஆதலால் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். தனியார் பள்ளிகள், தினம் ஒரு பழம், அந்த பழத்தின் வண்ணத்திற்கேற்ப உணவு மற்றும் உடையை உடுத்திவரச் சொல்கிறார்கள். கல்வியை அறிவாக பார்க்காமல் கௌரவமாக பார்த்ததன் விளைவு, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு தங்களது தகுதியை மீறி கடன்வாங்கி படிக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அன்றைய பள்ளிகள், மாணவர்களின் நலனை, பசியை, நிலையை கருத்தில்கொண்டு, மாணவர்களை பள்ளிக்குவர வரவைத்து உண்ண உணவளித்து, அறிவுப்பசியுடன் வயிற்றுப்பசியையும் தீர்த்தனர். அப்படி வரவைத்து அவர்களின் பசியை தீர்க்க போராடியதில் முக்கியமான பங்குவகித்தவர் எல்.சி. குருசாமி அவர்கள். அவரைப் போற்றுவோம்


நன்றி,
ஊமை இளைஞன்

Friday 31 January 2020

பெண்ணியமே (Feminisim) பெண்களின் எதிரி?


பெண்ணியம் (Feminism). இந்தச் சொல்லானது, சமீபகாலமாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும், ஏன் அடிக்கடி நம்மிடையேயும் வந்துபோகும் ஒரு தனிச்சொல். பெண்ணியம் என்ற சொல்லானது 18 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் (1837) பிரான்சு நாட்டின் சார்லஸ் பியரிர் (Charles Fourier) என்ற அறிஞரால் முதன்முதலில்  பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில், 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னரே 'பெண்ணியம்' என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டது. சமீபகாலமாக பெண்ணியம் என்ற சொல்லின் தாக்கம் பெண்களிடையே அதிகளவில் உள்ளது. அதற்குகாரணம், தற்போதைய சூழலில் பெண்களிடையே தாங்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற எண்ணத்தின் ஊடுருவலால் பெண்ணியம் என்ற சொல்லின் வளர்ச்சி அல்லது பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. உண்மையில், பெண்ணியம் என்றால் என்ன? என்பதைப் பற்றிய சிறுதொகுப்பே இந்தப்பதிவு. வாருங்கள் அறிவோம்!

பெண்ணியம் (Feminism):


பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தை அடைப்படையாகக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவர்களின் தேவையைப் பொருத்தும், சமூகத்தில் அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும் வரையறுக்கப்படுகிறது. அவை ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டில் வகிக்கும் அரசின் அல்லது சமூகத்தின் நிலமையைப் பொறுத்து மாறுபடுகிறது. அதாவது, பெண்ணியம் என்றால் என்ன? என்று பெண்களிடம் கேட்டாலும், அவர்களின் பதிலானது ஒவ்வொரு காலகட்டத்திற்கும், நாட்டிற்கும், மாநிலத்திற்கும், கிராமம் மற்றும் நகரத்திற்கும் ஏன் ஒவ்வொரு பெண்ணிற்குமே பெண்ணியம் என்றால் என்ன என்பது மாறுபடுகிறது.

பெண்ணிய வகைபாடுகள்:

இதுவரை பெண்கள் தங்களை அடிமைப் படுத்ததலிலிருந்து கடந்து வந்த காலங்களை மூன்று அலைகளாக பிரிக்கலாம்.
முறையே, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள். 



முதல் அலை பெண்ணியத்தில் பெண்களின் அரசியல் சார்ந்த உரிமைகள் பெறப்பட்டன. அதாவது, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களுக்கு மட்டுமே வழங்கியிருந்த வாக்களிக்கும் உரிமை பெண்களுக்கும் அளிக்கப்பட்டதுடன், அவர்களை அரசியலிலும் பங்கேற்க வைத்தது. இரண்டாம் அலை பெண்ணியத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான சொத்துரிமை, சமத்துவம், அலுவலகங்களில் ஆண்களுக்கு நிகரான பணிவாய்ப்பு முதலியன கிடைக்கப்பெற்றன. மூன்றாம் அலை பெண்ணியத்தில் பெண்ணின் இனப்பெருக்க அணுகல், பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுக்கு சட்டமியற்றுதல் முதலிய செயல்களுக்கு ஆதரவாக உருவெடுத்தது எனக்கொள்ளலாம். தற்போது நான்காவது அலையின் தொடக்கத்தில் உள்ளனர். நான்காம் அலையில் பெண்களின் வேலைவாய்ப்பு உரிமை மற்றும் ஆண்களுக்கு நிகரான சம்பளம், ஆட்சி மற்றும் அதிகாரம்  முதலியன அடங்கும். 

பெண்ணியத்தின் எதிரி பெண்ணே:

பெண்ணியத்தின் வகைப்பாடுகளைக் கொண்டு பெண்கள் அனைவரும் அந்த அலைகளை அடைந்தார்களா என உற்றுநோக்கினால், உண்மையில் சில சதவீதப் பெண்கள் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளனர் அதற்குக் காரணம் யாரென பார்த்தால் அங்கே பெண்களே உள்ளனர். இந்த உண்மை பலருக்கு அதிர்ச்சியூட்டினாலும், உண்மையில் பெண்களின் நிலை உயராததற்கு பெண்களே காரணமாக அமைகின்றனர். பெண்ணியம் பேசிடும் மாந்தரில் பலர் பெண்களை கண்ணகிபோலும் சீதையைப்போலும் இருக்கவேண்டுமென்று கூறுகின்றனர். அதன்காரணம், புராணங்கள்  அனைத்தும் ஆண்களால் எழுதப்பட்டவை. அதனால்தான், பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய நான்கு வகை குணங்களையும் ஆண்களுக்கு வீரம் என்னும் ஒற்றை குணத்தை மட்டும் தகுதியாய் வைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தினர். பெண் என்பவள் இவ்வாறு நடக்கணும், இவ்வாறு பேசணும் என்று பாடமெடுக்கும் சமூகம் ஆண்களுக்கென்று எந்தவித கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாக அமைகிறது. உடன், ஆண்கள் வகுத்த அத்தனையும் பின்பற்றுவோரை உயர்வாகவும், அதை மீறுவோரை கடுமையாகவும் விமர்சிக்கின்றனர். விமர்சனத்திற்கு பயந்தே பல பெண்கள் தங்களின் நிலையிலிருந்து முன்னேற மறுக்கின்றனர் என்பது நிதர்சனமாக உண்மை.

பெண்கள் என்ன செய்யவேண்டும்?

தற்போதைய பெண்கள், பெண்ணியம் என்பதை தவறாகவே புரிந்துகொண்டுள்ளனர். தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஆடை அணிவது, ஆண்களைப்போல் புகைபிடிப்பது, மது குடிப்பது போன்ற செயல்களை பெண்ணியம் என நினைத்துக்கொண்டுள்ளனர் எனத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபாடு வேண்டுமென்று போராடிய பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்குழந்தைகளின் வாழ்வுக்காக, பெண்ணியம் பேசிடும் எந்தவொரு பெண்ணும் குரல் கொடுத்ததாக ஒரு செய்தியிலும் வரவில்லை என்பது இன்றும் பெண்கள் பெண்ணியத்தை தவறாகவே புரிந்துகொண்டுள்ளனர் என்பதை உறுதிசெய்கிறது. உண்மையில் பெண்ணியம் என்பது ஆண்களுக்கு கிடைக்கும் சமுதாயம் சார்ந்த உரிமைகளை, பெண்களுக்கு தேவையான ஆனால் சமுதாயத்தால் மறுக்கும் உரிமைகளை பெற போராடுவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கான சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்கவேண்டும்.

நன்றி,
ஊமை இளைஞன்

Sunday 12 January 2020

பணத்தின் வரலாறு....


பணம். இந்த ஒற்றை வார்த்தைக்கு மயங்காதவர் எவர். அதை கொடுக்கும்போது வேண்டாமென்று கூறுபவர்தான் எவர்? எனக்கு இவ்வளவு போதுமென்று கூறுபவர்தான் எவர்? தனிமனிதன் ஒருவன் பணத்தின் மீது கொண்ட ஆசையை, ஆசையின் எல்லையை யாரேனும் கணிக்க முடியுமா என்றால், நிச்சயம் கணிக்க முடியாது என்பதுதான் பதிலாக அமையும். உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என படித்திருப்போம் ஆனால் இந்த மூன்று மட்டுமே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கையை திருப்திபடுத்துவது இல்லை. ஏனென்றால், மனிதன் தன்னிடம் உள்ளனவற்றைக் கொண்டு என்றும் திருப்தி அடைவது இல்லை. காரணம், அவனது எண்ணம் தன்னைச் சார்ந்தவர்களையோ அல்லது மற்றவர்களையோ அல்லது தனது எதிரிகளையோ அதிகம் சார்ந்துள்ளது. ஆதலால், பணமானது மனிதனின் வாழ்வியலில் அத்தியாவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. சில நேரங்களில் அதீத பணத்தாசையின் விளைவாக பிறரை கொல்லும் அளவிற்கும் கொண்டு செல்கிறது. மனிதனே மனிதனைக் கொல்லும் சக்தியைக் அளவிற்கு ஆசையைத் தூண்டிய  இந்த பணம், முதன்முதலில் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றிய சிறு தொகுப்புதான் இந்த பதிவு.

பண்டமாற்று முறை:

இன்றைய நவீன உலகில் நாம், நாணயங்கள், காகிதப் பணம், காசோலை, வரைவோலை, இணையதளம் மூலம் பொருட்களை வாங்கவும் விற்கவும் உபயோகிக்கிறோம். ஆனால், ஆரம்ப காலங்களில் மனிதன் தன்னிடம் உள்ள பொருட்களைக்கொண்டு, அந்த பொருளின் மதிப்பிற்கேற்றவாறு, தனக்குத் தேவையான பொருட்களை பிறரிடமிருந்து பெற்றான். உதாரணத்திற்கு, காடுகளில் முயல் போன்ற விலங்கினங்களை வேட்டையாடி பின் அதனை பிறரிடம் கொடுத்து அதற்கு தகுந்த தானிய பொருட்களை வாங்கிக்கொண்டான். அதாவது, தங்களிடம் உள்ள ஆனால் மற்றவர்களிடம் இல்லாத பொருட்களை கொடுத்தும் வாங்கியும் கொண்டனர். இன்னும், சில கிராமங்களில் தாங்கள் செய்யும் விவசாய வேலைக்கு ஏற்ப, நாள் ஒன்றுக்கு சில படி நெல்லை கூலியாக பெறுகின்றனர். இவ்வாறாக, ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளை கொடுத்து வாங்குவதை பண்டமாற்று முறை என அழைத்தான். மனிதன் தனியாக வாழும்வரை அவனுக்கு அதிக பொருட்கள் தேவைப்படவில்லை ஆனால் நாளடைவில் மனிதர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வாழுந்து கொண்டிருக்கும்போது, தங்களது உணவிற்கும் இன்னும் பிற தேவைக்கும் அதிக பொருட்களை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். நாளடைவில் இந்த பண்டமாற்று முறையானது பொருட்களிலிருந்து நாணயமாக உருவெடுத்தது. அதாவது வெள்ளி மற்றும் தங்கத்தாலான நாணயங்களை கொடுத்து பொருட்களை வாங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

முதல் நாணயம்:


உலகில் முதன்முதலில் நாணயமானது கிமு ஆறாம் நூற்றாண்டில், பண்டைய மேற்கு ஆசியாவின் லிடியாவில் (Lydia) அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், இந்த நாணயமானது வெள்ளி மற்றும் தங்கத்தின் கலவையினாலானது எனவும் கிரீக் நாட்டின் வரலாற்று ஆராய்ச்சியாளரான ஹெரோடோட்டஸ் கூறுகிறார். அதே நூற்றாண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவிலும் நாணயப் பயன்பாடு இருந்துள்ளது என சங்ககால இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். இவற்றில் எது உண்மையாயினும், உலகில் முதன் முதலில் நாணயத்தை உபயோகப்படுத்தியவர்கள் ஆசிய நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.

ஆரம்பகால நாணயங்களில் அரசர்கள் மற்றும் விலங்கினங்களின் உருவங்களை நாணயத்தில் பதித்துள்ளனர். உதாரணத்திற்கு, தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது நாணயத்தில் வில், அம்பு மற்றும் மீனின் உருவத்தை பதித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டு அரசும் அந்நாட்டு அரசர் அல்லது நாட்டின் விலங்கு உருவம் பொரித்த நாணயங்களை வெளியிட்டனர். அதேபோல், 1500 -களில் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் குடியேறிய பிரித்தானியர்கள், உள்ளூர் பண்பாடுகளுக்கேற்ப தனித்தனி நாணயங்களை தங்கள் வணிகத்திற்காக வெளியிட்டு பயன்படுத்தினர். வங்காளத்தில் முகலாயர்களைச் சார்ந்தும், சென்னையில் தென்னிந்தியர்களைச் சார்ந்தும் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு, மேற்கு இந்தியாவில் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்களைச் சார்ந்தும் நாணயங்கள் வெளியாயின.

முதல் காகிதப் பணம்:


உலகின் முதல் காகிதப்பணமானது ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் சீனர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் பரவ 200 ஆண்டுகளுக்கும் மேலானது. இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே காகிதப்பணங்கள் முதன்முதலில் அச்சிடப்பட்டன. பேங்க் ஆப் பம்பாய், பேங்க் ஆப் மதராஸ் மற்றும் பேங்க் ஆப் பெங்கால் போன்ற தனியார் நிறுவனங்கள் காகிதப்பணத்தை அச்சிட்டன. காகிதப்பணங்கள் அச்சிடும் உரிமையை இந்திய அரசு (அன்றைய ஆங்கில அரசு) கொண்டிருந்தது. 1934-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நான்கு வருடங்கள் கழித்து 1938 -ல் முதன்முதலில் 5 ரூபாய் காகிதப்பணத்தை வெளியிட்டது. அதே ஆண்டில் ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.

சுதந்திர இந்தியாவில் நாணயங்கள் மற்றும் காகிதப்பணங்கள்:

இந்திய சுதந்திரத்திற்க்குப் பிறகும் சில வருடங்கள் இந்த நாணயங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர், 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இந்த நாணயங்களுக்குப் பதிலாக "அணா" என்ற பெயரில் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நாணயங்களில் அரசர் மற்றும் விலங்குகள் உருவத்திற்குப் பதிலாக அசோகரின் மூன்று சிங்கங்கள் கொண்ட நாட்டுச் சின்னம் பொறிக்கப்பட்டது. ஒரு ரூபாய் நாணயத்தில் தானியக் கதிர் பொறிக்கப்பட்டது. இவ்வாறான பல வரலாற்றுக்களைக் கொண்ட பணமானது மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது. அவர்களுக்குள் பிரிவினையை தூண்டியது.

மனிதம் மறைத்த பணம்:

மனிதர்கள் வாழ்வதற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யவும் உருவாக்கப்பட்ட பண்டமாற்று முறையானது பின்னாளில் மனிதர்களே மனிதர்களை கொல்லுமளவிற்கு மனதை மாற்றியது. ஆம், மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தப்பிறகு பண்டமாற்றுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் காகிதப்பணங்களை தனக்கும் தான்சார்ந்த உறவினர்களுக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் சேமிக்கத் தொடங்கினான்.

அதிக சேமிப்பு அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றது. அதிக பணம் அதிகாரத்தைத் தந்தது. அதிகாரமும் பணமும் இணைந்து அவனுள் மாற்றத்தைத் தந்தது. தான்தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் அவனுள் புகுந்துகொண்டது. அதன்விளைவாக அவன் உடன் இருந்தவர்களைவிட்டு விலகிநின்றான். ஒருகட்டத்தில் தன்னையும் மறந்து பணத்தின்மீது மோகம் கொண்டு நினைத்ததையெல்லாம் நடத்திட ஆசைகொண்டான். ஆசை பேராசையாகி அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள விரும்பினான். போட்டி பொறாமை பேராசை என அனைத்தும் இணைந்து மனிதனுக்கு மனிதம் மறைந்து பணம் என்னும் மதம் பிடித்தது. மதமானது இல்லாதவர்களை அடிமையாக்க நினைத்தது. பணமுள்ளவர்கள் ஒருபுறமும் இல்லாதவர்கள் மறுபுறமும் வசிக்க தொடங்கினர். இல்லாதவர்களை விலக்கிவைத்து அவர்களின்மீது சாதி என்னும் தீயை வைத்தனர். அன்று வைத்த தீயானது இன்றும் எரிகிறது. அணைக்க சிலர் முயல்கின்றனர் ஆனால் அவர்களின்மீதும் பலர் தீமூட்டுகின்றனர். என்று அணையுமோ இந்தத் (சா)தீ... காத்திருக்கிறேன்...

கனவுடன்,
ஊமை இளைஞன்