Friday 31 January 2020

பெண்ணியமே (Feminisim) பெண்களின் எதிரி?


பெண்ணியம் (Feminism). இந்தச் சொல்லானது, சமீபகாலமாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும், ஏன் அடிக்கடி நம்மிடையேயும் வந்துபோகும் ஒரு தனிச்சொல். பெண்ணியம் என்ற சொல்லானது 18 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் (1837) பிரான்சு நாட்டின் சார்லஸ் பியரிர் (Charles Fourier) என்ற அறிஞரால் முதன்முதலில்  பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில், 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னரே 'பெண்ணியம்' என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டது. சமீபகாலமாக பெண்ணியம் என்ற சொல்லின் தாக்கம் பெண்களிடையே அதிகளவில் உள்ளது. அதற்குகாரணம், தற்போதைய சூழலில் பெண்களிடையே தாங்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற எண்ணத்தின் ஊடுருவலால் பெண்ணியம் என்ற சொல்லின் வளர்ச்சி அல்லது பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. உண்மையில், பெண்ணியம் என்றால் என்ன? என்பதைப் பற்றிய சிறுதொகுப்பே இந்தப்பதிவு. வாருங்கள் அறிவோம்!

பெண்ணியம் (Feminism):


பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தை அடைப்படையாகக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவர்களின் தேவையைப் பொருத்தும், சமூகத்தில் அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும் வரையறுக்கப்படுகிறது. அவை ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டில் வகிக்கும் அரசின் அல்லது சமூகத்தின் நிலமையைப் பொறுத்து மாறுபடுகிறது. அதாவது, பெண்ணியம் என்றால் என்ன? என்று பெண்களிடம் கேட்டாலும், அவர்களின் பதிலானது ஒவ்வொரு காலகட்டத்திற்கும், நாட்டிற்கும், மாநிலத்திற்கும், கிராமம் மற்றும் நகரத்திற்கும் ஏன் ஒவ்வொரு பெண்ணிற்குமே பெண்ணியம் என்றால் என்ன என்பது மாறுபடுகிறது.

பெண்ணிய வகைபாடுகள்:

இதுவரை பெண்கள் தங்களை அடிமைப் படுத்ததலிலிருந்து கடந்து வந்த காலங்களை மூன்று அலைகளாக பிரிக்கலாம்.
முறையே, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள். 



முதல் அலை பெண்ணியத்தில் பெண்களின் அரசியல் சார்ந்த உரிமைகள் பெறப்பட்டன. அதாவது, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களுக்கு மட்டுமே வழங்கியிருந்த வாக்களிக்கும் உரிமை பெண்களுக்கும் அளிக்கப்பட்டதுடன், அவர்களை அரசியலிலும் பங்கேற்க வைத்தது. இரண்டாம் அலை பெண்ணியத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான சொத்துரிமை, சமத்துவம், அலுவலகங்களில் ஆண்களுக்கு நிகரான பணிவாய்ப்பு முதலியன கிடைக்கப்பெற்றன. மூன்றாம் அலை பெண்ணியத்தில் பெண்ணின் இனப்பெருக்க அணுகல், பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுக்கு சட்டமியற்றுதல் முதலிய செயல்களுக்கு ஆதரவாக உருவெடுத்தது எனக்கொள்ளலாம். தற்போது நான்காவது அலையின் தொடக்கத்தில் உள்ளனர். நான்காம் அலையில் பெண்களின் வேலைவாய்ப்பு உரிமை மற்றும் ஆண்களுக்கு நிகரான சம்பளம், ஆட்சி மற்றும் அதிகாரம்  முதலியன அடங்கும். 

பெண்ணியத்தின் எதிரி பெண்ணே:

பெண்ணியத்தின் வகைப்பாடுகளைக் கொண்டு பெண்கள் அனைவரும் அந்த அலைகளை அடைந்தார்களா என உற்றுநோக்கினால், உண்மையில் சில சதவீதப் பெண்கள் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளனர் அதற்குக் காரணம் யாரென பார்த்தால் அங்கே பெண்களே உள்ளனர். இந்த உண்மை பலருக்கு அதிர்ச்சியூட்டினாலும், உண்மையில் பெண்களின் நிலை உயராததற்கு பெண்களே காரணமாக அமைகின்றனர். பெண்ணியம் பேசிடும் மாந்தரில் பலர் பெண்களை கண்ணகிபோலும் சீதையைப்போலும் இருக்கவேண்டுமென்று கூறுகின்றனர். அதன்காரணம், புராணங்கள்  அனைத்தும் ஆண்களால் எழுதப்பட்டவை. அதனால்தான், பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய நான்கு வகை குணங்களையும் ஆண்களுக்கு வீரம் என்னும் ஒற்றை குணத்தை மட்டும் தகுதியாய் வைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தினர். பெண் என்பவள் இவ்வாறு நடக்கணும், இவ்வாறு பேசணும் என்று பாடமெடுக்கும் சமூகம் ஆண்களுக்கென்று எந்தவித கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாக அமைகிறது. உடன், ஆண்கள் வகுத்த அத்தனையும் பின்பற்றுவோரை உயர்வாகவும், அதை மீறுவோரை கடுமையாகவும் விமர்சிக்கின்றனர். விமர்சனத்திற்கு பயந்தே பல பெண்கள் தங்களின் நிலையிலிருந்து முன்னேற மறுக்கின்றனர் என்பது நிதர்சனமாக உண்மை.

பெண்கள் என்ன செய்யவேண்டும்?

தற்போதைய பெண்கள், பெண்ணியம் என்பதை தவறாகவே புரிந்துகொண்டுள்ளனர். தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஆடை அணிவது, ஆண்களைப்போல் புகைபிடிப்பது, மது குடிப்பது போன்ற செயல்களை பெண்ணியம் என நினைத்துக்கொண்டுள்ளனர் எனத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபாடு வேண்டுமென்று போராடிய பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்குழந்தைகளின் வாழ்வுக்காக, பெண்ணியம் பேசிடும் எந்தவொரு பெண்ணும் குரல் கொடுத்ததாக ஒரு செய்தியிலும் வரவில்லை என்பது இன்றும் பெண்கள் பெண்ணியத்தை தவறாகவே புரிந்துகொண்டுள்ளனர் என்பதை உறுதிசெய்கிறது. உண்மையில் பெண்ணியம் என்பது ஆண்களுக்கு கிடைக்கும் சமுதாயம் சார்ந்த உரிமைகளை, பெண்களுக்கு தேவையான ஆனால் சமுதாயத்தால் மறுக்கும் உரிமைகளை பெற போராடுவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கான சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்கவேண்டும்.

நன்றி,
ஊமை இளைஞன்

Sunday 12 January 2020

பணத்தின் வரலாறு....


பணம். இந்த ஒற்றை வார்த்தைக்கு மயங்காதவர் எவர். அதை கொடுக்கும்போது வேண்டாமென்று கூறுபவர்தான் எவர்? எனக்கு இவ்வளவு போதுமென்று கூறுபவர்தான் எவர்? தனிமனிதன் ஒருவன் பணத்தின் மீது கொண்ட ஆசையை, ஆசையின் எல்லையை யாரேனும் கணிக்க முடியுமா என்றால், நிச்சயம் கணிக்க முடியாது என்பதுதான் பதிலாக அமையும். உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என படித்திருப்போம் ஆனால் இந்த மூன்று மட்டுமே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கையை திருப்திபடுத்துவது இல்லை. ஏனென்றால், மனிதன் தன்னிடம் உள்ளனவற்றைக் கொண்டு என்றும் திருப்தி அடைவது இல்லை. காரணம், அவனது எண்ணம் தன்னைச் சார்ந்தவர்களையோ அல்லது மற்றவர்களையோ அல்லது தனது எதிரிகளையோ அதிகம் சார்ந்துள்ளது. ஆதலால், பணமானது மனிதனின் வாழ்வியலில் அத்தியாவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. சில நேரங்களில் அதீத பணத்தாசையின் விளைவாக பிறரை கொல்லும் அளவிற்கும் கொண்டு செல்கிறது. மனிதனே மனிதனைக் கொல்லும் சக்தியைக் அளவிற்கு ஆசையைத் தூண்டிய  இந்த பணம், முதன்முதலில் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றிய சிறு தொகுப்புதான் இந்த பதிவு.

பண்டமாற்று முறை:

இன்றைய நவீன உலகில் நாம், நாணயங்கள், காகிதப் பணம், காசோலை, வரைவோலை, இணையதளம் மூலம் பொருட்களை வாங்கவும் விற்கவும் உபயோகிக்கிறோம். ஆனால், ஆரம்ப காலங்களில் மனிதன் தன்னிடம் உள்ள பொருட்களைக்கொண்டு, அந்த பொருளின் மதிப்பிற்கேற்றவாறு, தனக்குத் தேவையான பொருட்களை பிறரிடமிருந்து பெற்றான். உதாரணத்திற்கு, காடுகளில் முயல் போன்ற விலங்கினங்களை வேட்டையாடி பின் அதனை பிறரிடம் கொடுத்து அதற்கு தகுந்த தானிய பொருட்களை வாங்கிக்கொண்டான். அதாவது, தங்களிடம் உள்ள ஆனால் மற்றவர்களிடம் இல்லாத பொருட்களை கொடுத்தும் வாங்கியும் கொண்டனர். இன்னும், சில கிராமங்களில் தாங்கள் செய்யும் விவசாய வேலைக்கு ஏற்ப, நாள் ஒன்றுக்கு சில படி நெல்லை கூலியாக பெறுகின்றனர். இவ்வாறாக, ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளை கொடுத்து வாங்குவதை பண்டமாற்று முறை என அழைத்தான். மனிதன் தனியாக வாழும்வரை அவனுக்கு அதிக பொருட்கள் தேவைப்படவில்லை ஆனால் நாளடைவில் மனிதர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வாழுந்து கொண்டிருக்கும்போது, தங்களது உணவிற்கும் இன்னும் பிற தேவைக்கும் அதிக பொருட்களை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். நாளடைவில் இந்த பண்டமாற்று முறையானது பொருட்களிலிருந்து நாணயமாக உருவெடுத்தது. அதாவது வெள்ளி மற்றும் தங்கத்தாலான நாணயங்களை கொடுத்து பொருட்களை வாங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

முதல் நாணயம்:


உலகில் முதன்முதலில் நாணயமானது கிமு ஆறாம் நூற்றாண்டில், பண்டைய மேற்கு ஆசியாவின் லிடியாவில் (Lydia) அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், இந்த நாணயமானது வெள்ளி மற்றும் தங்கத்தின் கலவையினாலானது எனவும் கிரீக் நாட்டின் வரலாற்று ஆராய்ச்சியாளரான ஹெரோடோட்டஸ் கூறுகிறார். அதே நூற்றாண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவிலும் நாணயப் பயன்பாடு இருந்துள்ளது என சங்ககால இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். இவற்றில் எது உண்மையாயினும், உலகில் முதன் முதலில் நாணயத்தை உபயோகப்படுத்தியவர்கள் ஆசிய நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.

ஆரம்பகால நாணயங்களில் அரசர்கள் மற்றும் விலங்கினங்களின் உருவங்களை நாணயத்தில் பதித்துள்ளனர். உதாரணத்திற்கு, தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது நாணயத்தில் வில், அம்பு மற்றும் மீனின் உருவத்தை பதித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டு அரசும் அந்நாட்டு அரசர் அல்லது நாட்டின் விலங்கு உருவம் பொரித்த நாணயங்களை வெளியிட்டனர். அதேபோல், 1500 -களில் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் குடியேறிய பிரித்தானியர்கள், உள்ளூர் பண்பாடுகளுக்கேற்ப தனித்தனி நாணயங்களை தங்கள் வணிகத்திற்காக வெளியிட்டு பயன்படுத்தினர். வங்காளத்தில் முகலாயர்களைச் சார்ந்தும், சென்னையில் தென்னிந்தியர்களைச் சார்ந்தும் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு, மேற்கு இந்தியாவில் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்களைச் சார்ந்தும் நாணயங்கள் வெளியாயின.

முதல் காகிதப் பணம்:


உலகின் முதல் காகிதப்பணமானது ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் சீனர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் பரவ 200 ஆண்டுகளுக்கும் மேலானது. இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே காகிதப்பணங்கள் முதன்முதலில் அச்சிடப்பட்டன. பேங்க் ஆப் பம்பாய், பேங்க் ஆப் மதராஸ் மற்றும் பேங்க் ஆப் பெங்கால் போன்ற தனியார் நிறுவனங்கள் காகிதப்பணத்தை அச்சிட்டன. காகிதப்பணங்கள் அச்சிடும் உரிமையை இந்திய அரசு (அன்றைய ஆங்கில அரசு) கொண்டிருந்தது. 1934-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நான்கு வருடங்கள் கழித்து 1938 -ல் முதன்முதலில் 5 ரூபாய் காகிதப்பணத்தை வெளியிட்டது. அதே ஆண்டில் ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.

சுதந்திர இந்தியாவில் நாணயங்கள் மற்றும் காகிதப்பணங்கள்:

இந்திய சுதந்திரத்திற்க்குப் பிறகும் சில வருடங்கள் இந்த நாணயங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர், 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இந்த நாணயங்களுக்குப் பதிலாக "அணா" என்ற பெயரில் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நாணயங்களில் அரசர் மற்றும் விலங்குகள் உருவத்திற்குப் பதிலாக அசோகரின் மூன்று சிங்கங்கள் கொண்ட நாட்டுச் சின்னம் பொறிக்கப்பட்டது. ஒரு ரூபாய் நாணயத்தில் தானியக் கதிர் பொறிக்கப்பட்டது. இவ்வாறான பல வரலாற்றுக்களைக் கொண்ட பணமானது மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது. அவர்களுக்குள் பிரிவினையை தூண்டியது.

மனிதம் மறைத்த பணம்:

மனிதர்கள் வாழ்வதற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யவும் உருவாக்கப்பட்ட பண்டமாற்று முறையானது பின்னாளில் மனிதர்களே மனிதர்களை கொல்லுமளவிற்கு மனதை மாற்றியது. ஆம், மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தப்பிறகு பண்டமாற்றுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் காகிதப்பணங்களை தனக்கும் தான்சார்ந்த உறவினர்களுக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் சேமிக்கத் தொடங்கினான்.

அதிக சேமிப்பு அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றது. அதிக பணம் அதிகாரத்தைத் தந்தது. அதிகாரமும் பணமும் இணைந்து அவனுள் மாற்றத்தைத் தந்தது. தான்தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் அவனுள் புகுந்துகொண்டது. அதன்விளைவாக அவன் உடன் இருந்தவர்களைவிட்டு விலகிநின்றான். ஒருகட்டத்தில் தன்னையும் மறந்து பணத்தின்மீது மோகம் கொண்டு நினைத்ததையெல்லாம் நடத்திட ஆசைகொண்டான். ஆசை பேராசையாகி அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள விரும்பினான். போட்டி பொறாமை பேராசை என அனைத்தும் இணைந்து மனிதனுக்கு மனிதம் மறைந்து பணம் என்னும் மதம் பிடித்தது. மதமானது இல்லாதவர்களை அடிமையாக்க நினைத்தது. பணமுள்ளவர்கள் ஒருபுறமும் இல்லாதவர்கள் மறுபுறமும் வசிக்க தொடங்கினர். இல்லாதவர்களை விலக்கிவைத்து அவர்களின்மீது சாதி என்னும் தீயை வைத்தனர். அன்று வைத்த தீயானது இன்றும் எரிகிறது. அணைக்க சிலர் முயல்கின்றனர் ஆனால் அவர்களின்மீதும் பலர் தீமூட்டுகின்றனர். என்று அணையுமோ இந்தத் (சா)தீ... காத்திருக்கிறேன்...

கனவுடன்,
ஊமை இளைஞன்