Sunday 17 November 2019

உலகின் சிறந்த மற்றும் மோசமான சாலைகள் கொண்ட 10 நகரங்கள்


உச்சநீதிமன்றம் வாகன ஓட்டிகள்
அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணியவேண்டும் என பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், நாட்டிலுள்ள  சாலைகளின் தரத்தையும் அவற்றால் ஏற்படும் விபத்துக்களையும் நீதிமன்றம் கணக்கில் கொள்ளாதது அனைவருக்கும் ஏமாற்றமே. இந்தநிலையில், சமீபத்திய ஆய்வறிக்கையொன்று நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், உலகின் மிக மோசமான சாலைகளைக் கொண்ட 100 நகரங்களின் வரிசையில் இந்தியாவின் மும்பை நகரம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது.

உலகின் சிறந்த மற்றும் மோசமான சாலைகள் கொண்ட 10 நகரங்கள் 

ஐரோப்பாவின் கார்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மிஸ்டர் ஆட்டோ என்ற நிறுவனம், வாகன எரிவாயு, சாலையின் அமைப்பு, சாலை வரி போன்ற 15 அம்சங்களைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், இந்தியாவின் மும்பை நகரம் நூற்றுக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்று கடைசி இடமான 100-வது இடத்தைப் பெற்றுள்ளது. 


உலகின் சிறந்த சாலை அமைப்பு  கொண்ட முதல் 10 நாடுகளில் கனடாவின் கல்கரி முதலிடத்திலும், ஐக்கிய நாட்டின் துபாய் இரண்டாவது இடத்திலும், கனடாவின் மற்றொரு நகரமான ஒட்டாவா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், உலகின் மிக மோசமான சாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் இந்தியாவின் மும்பை முதலிடத்திலும், மங்கோலியாவின் உடான்பாட்டார் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மற்றொரு நகரமான கொல்கத்தா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சாலைகளும் சட்டங்களும்:

சமீபத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகன விதிகளை மீறுவோருக்கு பின்வரும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன: 

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம். 

இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் ரூ.2,000 அபராதம். 

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம். 

செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவோர்களுக்கு ரூ.1,000  முதல் ரூ.5,000 வரை அபராதம்.

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் செல்வோருக்கு ரூ.10,000 அபராதம்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5,000 அபராதம்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10,000 அபராதம்.

வேகமாக வாகனம் ஓட்டினாலோ அல்லது ரேஸிங்கில் ஈடுபட்டாலோ ரூ.5,000 அபராதம்.

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஒரு டன்னிற்கு ரூ.2,000 அபராதம்.

அரசு இயற்றிடும் சட்டங்களை மக்கள் பின்பற்றவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கும் நீதிமன்றம், அவர்கள் பயணம் செய்யும் சாலைகளின் தரத்தையும் சோதித்து அதன்பின்னர் சட்டம் இயற்றினால் நன்றாக இருக்கும். மோட்டார் வாகன சட்டத்தை மீறுவோருக்கு அதிக அபராதம் வசூலிப்பது தவறில்லை ஆனால் அபராதம் வசூலிப்பதற்குமுன் அரசு மக்களுக்கு சரியான சாலைவசதியை அமைத்துள்ளதா என சரிபார்க்கவேண்டும். 

நன்றி,
ஊமை இளைஞன்  

Friday 15 November 2019

பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து உருவாகும் செங்கற்கள்


பிளாஸ்டிக் கழிவுகளை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் , அடுத்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 12 இலட்சம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் இருக்கும் என உலகப் பொருளாதார மையம் கூறுகின்றது. இந்தியாவில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உண்டாக்குப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக, உலகில் பிளாஸ்டிக்குகளின் ஆதிக்கம் மேலொங்கிய நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்  கூடாது மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசு சட்டம் இயற்றினாலும் சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்களைத் தவிர்த்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தவர்கள் யாருமில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்குப் பிறகும் பெருவணிகர்கள் மற்றும் நிறுவனங்களில் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்திதான் வந்தனர் என்பதுதான் உண்மை. ஒருபுறத்தில் பிளாஸ்டிக்கினால் தீமைகள் இருந்தாலும், பிளாஸ்டிக்கினால் சில நன்மைகள் உள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அந்தவகையில், சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் செங்கற்கள். 

பிளாஸ்டிக் செங்கற்கள் தயாரிக்கும் முறை: 


குப்பைகளில் வீணாகக் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வேறுசில பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீரைக் கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.

தூய்மைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் நன்கு உலர்த்தப்பட்டபின்பு அரவை இயந்திரத்தின்மூலம் மணல்​ ​போன்று நன்றாக தூள் செய்யப்படுகிறது.​​

தூளாக்கப்பட்ட ​​பிளாஸ்டிக் துகள்கள் நன்கு சூடேற்றப்பட்டு திரவநிலைக்கு மாற்றப்படுகிறது. பின்பு அதனுடன் ஆற்றுமணல் சேர்க்கப்பட்டு கலக்கப்படுகிறது.​​ பின் திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாற்ற குளிர்விக்கப்படுகிறது.​ திடநிலைக்கு மாற்றம் செய்த செங்கற்கள் அளவிற்கேற்றவாறு தனித்தனியாக வெட்டப்படுகிறது.​

இவ்வாறாக உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்கள், 180 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவைத் தாங்கும் திறன் மற்றும் 20 டன் எடையைத் தாங்கும் சக்திகொண்டதாக உள்ளது​.​ ​தரைதளத்திற்கு கற்களை தயாரிக்கும்போது மட்டும் அதனுடன் ரெட் ஆக்சைடுகள் சேர்க்கப்படுகின்றன. ​​​

​மேற்கண்ட முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களுடன் (60 சதவீதம்), 20 சதவீத சிமெண்ட் மற்றும் கிரானைட் கற்கள் சேர்த்து அரைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஜல்லிகள் தயாரிக்கப்படுகிறது. ​

பிளாஸ்டிக் செங்கற்கள் பயனுள்ளதா?

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகஅளவில் பெருகிவருகின்றன. அதனுடன், மணல், சிமெண்ட் மற்றும் செங்கற்களின் விலையும் கூடிவருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை முழுவதும் அழிக்கமுடியாது என்ற நிலையில், இதுபோன்று மறுசுழற்சி செய்து அவற்றை பயன்படும் வகையில் உற்பத்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் செங்கற்கள் அதிகபட்சம் 180 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை மட்டுமே தாங்கக்கூடியது. அதிக அளவிலான வெப்பம் ஏற்படும்போது உருகும் நிலைக்குத் தள்ளப்படும். 


சாதாரண இயற்கையான சூழலில் கிடைக்கும் கற்களினால் வீட்டின் உள் பகுதியில் சற்று குளிர்ந்து காணப்படும். ஆனால் இந்தவகையில் கட்டப்படும் கட்டிடங்களினால் இயற்கையாகவே சற்று வெப்பசலனத்துடன் காணப்படும். ஆற்றுமணல் கொள்ளை ஓரளவுக்கு குறைந்துவிடும். 

பெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் எத்தனையோ பேர் வீடில்லாமல் உள்ளனர். அரசு அளிக்கும் திட்டத்தின்மூலம் வீடு கட்டிக்கொள்ளும் எத்தனையோ குடும்பங்கள் இன்றளவும் உள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளின் மூலம் தயாரிக்கப்படும் செங்கற்கள் மற்றும் தரைதள கற்களுக்கு செலவிடும் தொகை மிகக்குறைவு என்பதுடன் சுற்றுச்சூழலையும் மக்களையும் அதீத குப்பைகளிலிருந்து பரவும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. நிச்சயம் இவை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே நம் கருத்து. 

நன்றி,
ஊமை இளைஞன்  

Sunday 10 November 2019

தினமும் நாம் அருந்தும் தேநீரின் (TEA) கதை


தினமும் தண்ணீருக்கு அடுத்ததாக அதிகளவு குடிக்கும் பானம் தேநீராகத்தான் இருக்கும். அது எப்படி உருவானது என்பதை என்றாவது நாம் யோசித்திருப்போமா? வாருங்கள் பார்ப்போம்.

தேநீர் செடி பற்றிய சீனக்கதைகள்:


கிமு 2737 களில், சீனாவைச் சார்ந்த 'ஷென்னாங்' என்ற வேளாண் மருத்துவர், மூலிகைச்செடிகளின் மகத்துவத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் மலைப்பகுதிகளுக்கு சென்று அங்கு கிடைக்கும் பல்வேறு விதமானச் செடிகளை மென்று ஆராய்ந்து வந்தார். சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட செடிகளை உண்ட ஷென்னாங், மலைப்பகுதியில் அலைந்து திரிந்து களைப்புற்று அமர்ந்திருந்த நேரத்தில், அருகில் தளதளவென்று வளர்ந்து நின்ற ஒரு செடியின் இலையினை மென்று சுவைத்தார். களைப்புற்றிருந்த அவருக்கு, அந்த செடியினை உண்டபின்பு புத்துணர்ச்சி கிட்டியது. அந்த செடிதான், இன்று நாம் விரும்பி சுவைக்கும் தேநீர் தயாரிக்க பயன்படும் தேயிலை செடி என்று சீனக்கதையொன்று கூறுகிறது.இன்னொரு கதையில், வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ஷென்னாங் என்னும் சீனப் பேரரசன், சுடுநீர் அருந்திக்கொண்டிருக்கும், அருகிலிருந்த செடியிலிருந்து பறந்து வந்த இலைகள் அருந்திக்கொண்டிருந்த சுடுநீரில் விழுந்தனவாம். அப்பொழுது, சுடுநீரின் நிறம் மாறியதுடன், சுடுநீரிலிருந்து வந்த வாசனையை முகர்ந்தபோது அவனுக்கு புதுவிதமான உற்சாகத்தைக் கொடுத்ததாம். அதிலிருந்து சீன மக்கள் அதனை உண்டு வந்ததாக மற்றொரு கதை கூறுகிறது. 

மற்றொரு கதையில், ஒரு பௌத்த துறவி தியானம் செய்யும் பொழுது அடிக்கடி துாங்கிவிடுவாராம். தன் தூக்கத்தினால்தான் ஞானம் அடைய முடியவில்லை என எண்ணி தியானத்தின்போது துாங்காமல் இருப்பதற்காக, தனது இமைகளை வெட்டி வீசிவிட்டு தியானம் மேற்கொண்டு ஞானத்தை அடைந்தாரம், அவர் இமைகளை வீசிய இடத்தில் சில நாட்கள் கழித்து ஒரு செடி முளைத்ததாம். அந்த செடிதான் தேநீர் செடி. அதனால்தான், தேயிலையிலிருந்து இலையிலிருந்து கிடைக்கும் தேநீரை அருந்துவோர்க்கு துாக்கம் போய் உற்சாகம் வருகின்றது என்றொரு சீனக்கதையும் உள்ளது. 

மேற்கண்ட கதைகளில் உண்மை எதுவாயினும், தேநீரின் பிறப்பிடம் சீனா என்பது உறுதியாகிறது.

தேயிலை உற்பத்தி வளர்ச்சி:


4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, சீனாவில் பயிரிடப்பட்டு வந்த தேயிலையானது, முதலில் தற்போது நாம் உண்ணும் கீரையைப்போல் உணவாக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில், உணவிற்குப் பதிலாக பானமாக மாறியது. ஆரம்பகால சீன இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தேநீரானது முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஜப்பானைச் சார்ந்த துறவி ஒருவரின் சீன வருகைக்குப்பின்னர், தேயிலை ஜப்பானை அடைந்து அங்கும் பயிரிடப்பட்டது. அதன்பின்னர், டச்சுக்காரர்கள் தேயிலை வணிகத்தைக் சீனாவுடன் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் பரப்பினர். அது தனது அண்டைநாடான பிரான்சையும் அடைந்தது. முதலில், தேநீரின் மருத்துவ குணத்தைக் கொண்டே உலகம் முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் தேநீர் பற்றிய செய்தி பரவியது. 

TEA- என்பதன் விரிவாக்கம்:



இங்கிலாந்தின் அரசர் சார்ள்ஸ் மற்றும் போர்ச்சுக்கீசிய இளவரசியான கேத்தரின் ஆஃப் ப்ரகான்ஸா திருமணத்தின்போது தேயிலை திருமண சீர்வரிசைகள் அளிக்கப்பட்டது. தேயிலை அடங்கிய அந்தப்பெட்டியில் 'Transporte de Ervas Aromalsicus' என அச்சிடப்பட்டிருந்தது. அதன் முதல் மூன்று எழுத்துக்களே TEA என அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் மோட்சா (Motcha) என்று அழைக்கப்பட்ட தேயிலைக்கு TEA எனப் பெயர்வந்ததற்கு, சார்ள்ஸ் மற்றும் கேத்தரின் அவர்களின் திருமணம் முக்கிய காரணம்.

தேநீரின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும் முதன்முதலில் தேநீரில் பாலை கலந்து குடித்தது ஐரோப்பிய நாடுகள்தான். அதனைத் தொடர்ந்து பிரித்தானிய நாடுகள், மேற்கு இந்தியத் தீவுகளிலுருந்து கொண்டுவரப்பட்ட கரும்பு சர்க்கரையை தேநீருடன் சேர்த்து பருகினார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக தேநீர் தயாரிக்கபடுகிறது. இந்தியாவில் தேநீருடன், பால் , இஞ்சி, ஏலக்காய் சேர்க்கப்பட்டு பரிமாறப்படுகிறது.  நேபாளத்தில், உப்பு மற்றும் பால் சேர்க்கப்படுகிறது. 


பிரித்தானிய நாடு - சீனா தேயிலை போர்: 

சீனாவில் விளையும் தேயிலைகளைப் பெறுவதற்கு வெள்ளிக்காசுகளை கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். நாளடைவில் வெள்ளிக்காசுகளின் தட்டுப்பாடு ஏற்படவே, பிரித்தானிய அரசு மேற்குவங்காளத்தில் விளைந்த ஓபியம் என்ற போதைச்செடியினை கொடுத்து தேயிலையை வாங்கினர் . ஆனால், ஓபியத்திற்கு பெரும்பலான சீன மக்கள் அடிமையாகவே சீனா அரசு ஓபியத்தை தடைசெய்ய முடிவெடுத்து ஹாங்கோங் கடற்கைரைப் பகுதியில் நின்றிருந்த கப்பல்களில் உள்ள ஓபியத்தை அழித்தது. கோபம்கொண்ட பிரித்தானிய அரசு, சீனாவின்மீது  மூன்றுமுறைப் போர்தொடுத்து வென்றது.

இருப்பினும்,  சீனாவின் தேயிலை உற்பத்தி மற்றும் விதையின் தன்மைபற்றி அறியமுடியவில்லை. எனவே, பிரித்தனியா அரசு, 1848-ல் தாவரவியல் அறிஞரான ராபர்ட் போர்சூன் (Robert Fortune)  என்பவரை இரகசிய உளவாளியாக அனுப்பி தேயிலையின் உற்பத்தி பற்றி அறிந்துகொண்டபின்னர், தேயிலை சாகுபடியில் தேர்ச்சிபெற்ற 80 விவசாயிகளுடன் திரும்பி இந்தியாவில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் பயிரிட்டு வென்றனர். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் நீலகிரி, இலங்கையின் கண்டி மற்றும் கென்யாவிலும் பயிரிடப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வணிகப்பொருளாக மாறியது.

தேயிலை உற்பத்தியில் இந்தியா:

இந்தியாவில் தேயிலை உற்பத்தியானது அசாம் , நீலகிரி மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இங்குவிளையும் தேயிலைக்கு சிறப்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலகில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் 25 சதவீதம் இந்தியாவிலிருந்து பெறப்படுகிறது.

உலக அளவில் நான்காவது ஏற்றுமதியாளராகவும், இந்தியா இருக்கிறது. இதில், 2015 -16-ல், 4,467 கோடி ரூபாய்க்கும், 2016-17ல், 4,602 கோடி ரூபாய்க்கும், 2017-18-ல் 5,059 கோடி ரூபாய்க்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வரலாறுகள் பல கொண்ட தேநீரானது, மன அழுத்தம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்துவதாக கூறப்படுகின்றது. அத்துடன், டிசம்பர் 15 ஆம் நாளானது தேயிலை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

நன்றி,
ஊமை இளைஞன்