Friday 27 December 2019

மண்ணின் காதல்....


கீழ்வெண்மணி - ஒரு படி நெல்லுக்கு 44 உயிர்கள்...


'உந்தன் கோபப் பார்வை போதும்' எனப் பயிர்கள் சொன்னதாலோ என்னவோ செஞ்சூரியன் மாலையில் மங்கிக்கொண்டிருக்கிறான். பறவைகளும் தேடலை முடித்துக்கொண்டு கூட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாநகரின் கீழ்வெண்மணி என்னும் கிராமத்தில், நிலச்சுவான்தாரர் சவரிராஜ் நாயுடு என்பவரது வீட்டினைநோக்கி சிலர் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிரே வந்த கிழவரொருவர், சென்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் வினவுகிறார்.

"தம்பி, எல்லாரும் எங்க போயிட்டு இருக்கீங்க?"

"அதுவா பெருசு, எல்லாரும் ஜமீன்தார பாக்க போயிட்டு இருக்கோம்..."

"எதுக்கு?"

"வாங்குற கூலி வயித்துக்கே பத்தல... நாள் முழுசா ஒழைச்சாலும், ஒருபடி நெல்லுதான் கிடைக்கு. வெளியூர் போயி பொழைக்கவும் வக்கில்ல... விவசாய சங்கத்துல இருக்குற ஆளுங்கெல்லாம் சேந்து, ஜமீந்தார நேர்ல போய் பாத்து பேசியாச்சு ஆனாலும் சரியாகலா. இப்போ என்னனா, கேள்வி கேட்ட ரெண்டுபேத்த அவுங்க ஆளுங்க, வூட்டுல கட்டிவச்சி அடிக்கிறாங்களாம்! அதான் என்னனு கேக்க கெளம்பிட்டோம்." என்கிறார் பதட்டத்துடன்.

சாணிப்பாலும் சவுக்கடியும்:

1960 கால கட்டத்தில் பெரும்பாலான நிலங்கள் நிலச்சுவான்தாரர்களிடம்தான் இருந்தது. நாள் முழுவதும் வேலை செய்தால் ஒருபடி நெல் கூலியாகத் தரப்படும். உடற்சோர்வு காரணமாக யாரேனும் அமர்ந்தால்கூட, அவர்களுக்கு சாணிப்பால் தரப்படும், அதாவது, மாட்டுச் சாணத்தில் நீர் ஊற்றி அதனை குடிக்கச்சொல்வார்கள். குடிக்க மறுப்பவர்களுக்கு ஜமீன்தாரர்களின் அடியாட்கள் மூலம் சவுக்கடி கொடுப்பர். பின்பு, 1967 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த மணியம்மை மற்றும் சீனிவாசராவ் போன்றோர்களின் விழிப்புணர்வினால் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தின் விவசாயிகளை ஒருங்கிணைத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, விவசாய சங்கத்தினர் சிலர் தங்களது கோரிக்கையை ஜமீன்தாரரிடம் கொண்டு செல்கின்றனர்.

விவசாய சங்கத்திலிருந்து வருபவர்களை கண்டதும், "என்ன வேண்டும்? எதுக்கு இவ்வளவு பேர் வந்துருக்கிறீர்கள்" என்கிறார் ஜமீன்தாரர்.

"உழைக்கும் ஊதியத்திற்கு ஏற்ப கூலி வேண்டும்" என்கிறார்கள்.

"அதுதான், தினக்கூலியாக ஒருபடி நெல் தருகிறோமே?" என்கிறார் ஜமீன்தாரர்.

"அது போதவில்லை! அரைப்படி நெல் சேர்த்து கொடுங்கள் போதும்...இல்லையெனில், போராட்டம் தொடரும்... வயல்களில் வேலை செய்யமாட்டோம்.." என்கிறார்கள் விவசாயிகள்.

"அடிமை நாய்களா! எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?" என மேலும் கோபமுறுகிறார் ஜமீன்தாரர்.

"அய்யா... நிலம் உங்களுடையது. உழைப்பு எங்களுடையது. நாங்கள் கேட்பது, உழைத்த உழைப்பிற்கான கூலி. அவ்வளவுதான்" என்கிறார்கள்.  

இவ்வளவு நாட்கள் தாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தவர்கள், இன்று தங்களை எதிர்ப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கோபம்கொண்ட ஜமீன்தாரர்கள், உள்ளூர் ஆட்களை பணியவைக்க, தங்களால் ஏற்படுத்தப்பட்ட "நெல் உற்பத்தியாளர்கள்' சங்கத்தின் மூலம் வெளியூர் ஆட்களை திரட்டி வேலைகொடுத்தனர். இதனால் ஜமீன்தாரர்களுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததது. 

அதிகாரத்தின் கோபப் பசியில் 44 உயிர்கள் பலி:

விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இருப்பதால்தானே இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள் என எண்ணிய ஜமீன்தாரர்கள், விவசாய சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். நிலைமை கைமீறிப் போக, விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து, காவல்துறையிடம் முறையிடுகின்றனர். அன்றைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செல்வாக்குகளால், அதிகார வர்க்கம் காவல்துறையை 'கப் சிப்' ஆக்கிவிட்டது. 

25.12.1968 அன்று, சவரிராஜ் நாயுடு என்னும் ஜமீன்தார், தனது வீட்டில், விவசாய சங்கத்தைச் சார்ந்த முத்துசாமி மற்றும் கணபதி என்பவர்களை கட்டிவைத்து அடித்து துன்புறுத்துவதாக செய்தி பரவியதையடுத்து, விவசாய சங்கத்தினர் ஜமீன்தார் வீட்டை நோக்கிப் பயணித்தனர். இருவரையும் கட்டவிழ்த்துவிட்டு வீட்டிற்கு செல்கின்றனர். கட்டவிழ்ப்பதில், ஜமீன்தாரர்களின் ஆட்களுக்கும் விவசாய சங்கத்தினர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறுகிறது. தகவலறிந்த கோபால கிருஷ்ண´நாயுடு என்னும் ஜமீன்தார், தனது ஆட்களையும் காவல்துறையில் இருந்த சிலரையும் கூட்டிக்கொண்டு கீழ்வெண்மணி என்னும் கிராமத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுடுகின்றனர். இருவரும் அடிதடியில் இறங்கினர். 

ஒருகட்டத்தில், துப்பாக்கியை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் அனைவரும் ஓடி ஒழிகின்றனர். கிராமத்தின் இறுதியில் உள்ள, ராமையா என்பவரது குடிசையில் 44 பேரும் உள்ளே புகுந்து தாளிட்டுக் கொள்கின்றனர். கோபப்படுவது விஷத்தை அருந்துவதற்கு சமம். தன்னையும் அழிக்கும் தன்னைச் சுற்றியவர்களையும் அழிக்கும் என்பதற்கு கோபால கிருஷ்ண ராயுடு ஒரு உதாரணம். கோபக்கனலில் தன்னிலை இழந்த கோபால கிருஷ்ண ராயுடு, அவர்கள் ஒளிந்திருந்த குடிசையின் வெளியே தாளிட்டு குடிசையைத் தீயிடச் சொன்னார். ஆட்களும் அவ்வாறே செய்தனர். 

குடிசை எரிகிறது...

குழந்தைகள் கதறுகின்றனர்...

பெரியவர்கள் அலறுகின்றனர்...

தீயின் பசியில்,

சிறு குழந்தையின் பிஞ்சு நெஞ்சும் பஞ்சாய் எறிகிறது...
தேகம் காய்ந்து தீஞ்சு போகிறது...

அய்யோ,

பாராட்டி சீராட்டி
வளர்த்த பிள்ளையை
பாவிகள்,
தீயிட்டு கொள்கின்றனரே! என்ற அழுகுரலும் கேட்கிறது...

உள்ளிருந்த பெண்மணி ஒருவர் தான் வைத்திருந்த கைக்குழந்தையை காப்பாற்ற வெளியில் வீசுகிறாள். ஆனால் குடிசையைச் சுற்றியிருந்த ஜமீன்தாரர் ஆட்கள் வீசிய குழந்தையை மீண்டும் உள்ளே தூக்கிப்போடுகின்றனர். தீச்சுவாலையில் ஆறுபேர் வெளியில் வருகின்றனர். ஆனால் ஜமீன்தாரர் ஆட்கள் அவர்களை மீண்டும் உள்ளே தள்ளிவிடுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக 44 பேரின் உயிரைத்தின்று தீயும் தன் பசியைப் போக்கிக்கொண்டது.

பசி ஆரிய தீயானது, தணிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தது. பூட்டிய கதவைத் திறந்த காவல்துறையினர், மாதம்மாள் என்னும் பெண்ணொருத்தி எறிந்த நிலையிலும் தன் கைக்குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு கல்லும் இதயம் வெடித்து விரிசல் அடைந்தது ஆனால் இந்த கல்நெஞ்சக்காரர்களின் மனசுதான் கல்லாகி இருண்டுப் போனது.

நீதி தோற்றது...தர்மம் வென்றது:

விவசாயிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது...
10 ஆண்டு சிறையென தீர்ப்பு வந்தது...
பணம், மேல்முறையீடு செய்தது...
"கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள், தாங்களே சென்று கொலை செய்திருக்கமாட்டார்கள்" என தீர்ப்பு வந்தது... நிதி நீதியை சூழ்ந்தது...

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்" என்பதற்கு ஏற்ப, காலம் கடந்து தர்மம் வென்றது!

ஆம்,1980-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் தலைமறைவு புரட்சியாளர்களான நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள் மிராசுதார் கோபால கிருஷ்ண நாயுடுவை தியாகிகள் நினைவிடத்தின் அருகில் வெட்டிக் கொன்றனர்.

"என்னிடம் பணம் உள்ளது, அரசியல் செல்வாக்கு உள்ளது. என்னால் எதைவேண்டுமானாலும் செய்யமுடியும். நீதியைக்கூட நிதியால் வென்று விடுவேன்" என்று சிலர் கருதலாம். அவ்வாறு கருதுபவர்களுக்கு ஒன்று மட்டும் கூறுகிறேன், "நீதி தோற்கலாம்... தர்மம் தோற்காது" என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள்.

நன்றி,
ஊமை இளைஞன்